இனி மக்கள் சமூகப் பொறுப்புடன் Tiktok-ல் பதிவு செய்வதை நிறுவனம் உறுதி செய்யும்!
மக்கள் சமூக பொறுப்புடன் பதிவு செய்வதை உறுதிசெய்யும் வகையில் வரைமுறைகள் ஏற்படுத்தப்படும் என்று டிக்டாக் நிறுவனத்தின் இந்திய தலைவர் நிகில் காந்தி தெரிவித்துள்ளார்.
வீடியோக்களை பகிர்ந்துகொள்ளும் சீன செயலியான ‘டிக்டாக்’ பல்வேறு ஒழுங்குமுறை சிக்கல்களை இந்தியாவில் சந்தித்துள்ளது. செயலியைப் பயன்படுத்தும் மக்கள் ‘பொறுப்புடன்’ பதிவு செய்வதை உறுதிசெய்யும் வகையில் சுயக் கட்டுப்பாடுகளில் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
டிக்டாக் தளத்தின் நம்பகத்தன்மையை நிலைநிறுத்தும் பொருட்டு இந்தச் செயலியின் பதிவுகள் நான்கு நிலைகள் கொண்ட முறையான செயல்முறை வாயிலாக ஆய்வு செய்யப்படும் என இந்நிறுவனத்தின் இந்திய தலைவர் நிகில் காந்தி தெரிவித்துள்ளார்.
பைட்டான்ஸ் வெளியீடான டிக்டாக் செயலிக்கு கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. பின்னர் இந்தத் தடை நீக்கப்பட்டு டிக்டாக் செயலி மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
அரசியல் தொடர்பான உள்ளடக்கங்களை உருவாக்கிய சிலரின் கணக்கு முடக்கப்பட்டதும் செய்திகளில் இடம்பெற்றிருந்தன. 200 மில்லியன் பயனாளர்களைக் கொண்ட இந்தச் சீன நிறுவனம் இந்தியாவின் கலை மற்றும் பண்பாட்டுச் சூழலை ஜனநாயகப்படுத்துவதாக இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்கம் (ஐ.ஏ.எம்.ஏ.ஐ) நிகழ்வின்போது பேசிய காந்தி தெரிவித்தார்.
“சமூகப் பொறுப்புடன் பதிவிடவேண்டும் என்பதில் சுயக் கட்டுப்பாடு அவசியம். இந்தக் கருத்து மக்களிடையே ஊக்குவிக்கப்படும். அதேபோல் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதில் கவனம் செலுத்தப்படும்,” என்றார்.
இந்தச் சிறிய வீடியோ தளம் விரைவாக வளர்ச்சியடைந்து வருவதாகவும் கடந்த இரண்டாண்டுகளில் 100 மடங்கு வளர்ச்சி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் சுமார் 35,000 படைப்பாளிகளை இந்தச் செயலி ஊக்குவித்துள்ளதாகவும் 2020ம் ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கை ஒரு லட்சம் வரை அதிகரிக்கும் என்றும் காந்தி குறிப்பிட்டார்.
மேலும் வெர்டிகல் வீடியோ வடிவம் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தியாவில் தற்போது மொத்த வீடியோ பயன்பாட்டில் வெர்டிகல் வீடியோ வடிவம் 10 சதவீதமாக உள்ளது. இந்த எண்ணிக்கை 35 சதவீதத்திற்கு மாறும் என்று இந்நிறுவனம் எதிர்நோக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
வெர்டிகல் வீடியோ வடிவமானது போர்ட்ரெயிட் மோட் பயன்பாட்டிற்கானது. இதில் அகலத்தைக் காட்டிலும் நீளம் அதிகமாக இருக்கும். ஆன்லைனில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைப் பார்வையிடும் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் வெர்டிகல் வடிவத்தையே தேர்வு செய்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குறுகிய வீடியோக்களையே மக்கள் அதிகம் பயன்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டினார். 68 சதவீத பயனர்கள் ஒரு நிமிட வீடியோக்களை இறுதி வரை பார்க்கின்றனர் என்றும் வெறும் 20 சதவீதத்தினர் மட்டுமே 20 நிமிடங்கள் கொண்ட வீடியோக்களை இறுதி வரை பார்வையிடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால் மற்ற நிறுவனங்களும் குறுகிய வீடியோக்களில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் காந்தி கூறினார்.
ஜீ எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் ஓடிடி தளம் டிக்டாக்குடன் போட்டியிடும் வகையில் சேவையைத் தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியான சில தினங்களிலேயே காந்தி இத்தகைய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“மிகப்பெரிய வளர்ச்சிக்கான வாய்ப்பாக இதைப் பார்க்கிறோம். அதை நோக்கிய எங்களது பயணத்தில் இதுவே முதல் அடி,” என்றார் காந்தி.