சனி, ஞாயிறு பீச் செல்ல தடை: தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் என்ன?
தமிழகத்தில் 6000-ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பெருந்தோற்று தலைதூக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது.
நேற்று மட்டும் தமிழகம் முழுவதும் 5000-க்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இன்று கிட்டத்தட்ட 6000-த்தை தொடும் அளவிற்கு கொரோனா பாதிப்புகள் தமிழகத்தில் பதிவானது.
இதையடுத்து அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு இரண்டு நாட்களுக்கு முன்பு கொரோனா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி,
அனைத்து தியேட்டர்களும் 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி, அதேபோல் தமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை, கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் சில்லரை வியபார காய்கனி அங்காடிகள் செயல்பட தடை, மாவட்டங்களில் உள்ள மார்க்கெட் வளாகங்களில் சில்லரை வியபாரக் கடைகளுக்கு தடை விதித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது.
மேலும், மாவட்டங்களுக்கு இடையேயான அரசு மற்றும் தனியார் பேருந்துகள், சென்னையில் மாநகரப் பேருந்துகளில் பயணிகளில் இருக்கைகளில் மட்டும் அமர்ந்து பயணிக்க அனுமதி, பேருந்துகளில் நின்று பயணம் செய்ய அனுமதி கிடையாது. திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி. இறுதி ஊர்வலங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்கலாம் என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது.
இந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்தன. இந்தநிலையில், கடந்த இரண்டு நாட்களாக 5,000 என்ற அளவில் கண்டறியப்பட்டு வந்த புதிய கொரோனா பாதிப்புகள் இன்று புதிய உச்சத்தை எட்டியது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மீண்டும் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி,
சென்னையில் கடற்கரைக்கு செல்வதில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல இனி தடை விதிக்கப்படுகிறது. இது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்ற மூன்று மாவட்ட கடற்கரைகளுக்கும் பொருந்தும்.
அதேபோல், புதிய நெறிமுறைகளின் படி, இரவு 10 மணி வரை வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபட அனுமதி அளிக்கப்படுகிறது. முன்பு இரவு 8 மணி வரை வழிபடலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம். வழிபாட்டுத் தலங்களில் திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. மேலும், புதிதாக வெளியிடப்படும் திரைப்படங்களை தியேட்டரில் கூடுதலாக ஒரு காட்சி திரையிடலாம். புதிய திரைப்படங்களுக்கு முதல் 7 நாட்களுக்கு மட்டும் கூடுதலாக ஒரு காட்சி திரையிட அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.