'இத்தகைய உணர்வே தமிழகத்தின் வலிமை...' சிறுவனால் நெகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்
தான் சேமித்து வைத்த உண்டியலில் பணத்தை கொரோனா நிதியாக கொடுத்த சிறுவன்!
மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஹரிஸ்வர்மன். சமீபத்தில் கொரோனா தாக்கம் தமிழகத்தில் அதிகரிக்க, அதற்கு உதவும் வண்ணம் சைக்கிள் வாங்குவதற்காக தான் உண்டியலில் சேர்த்து வைத்த ஆயிரம் ரூபாயை வங்கி வரைவோலையாக எடுத்து தமிழக முதல்வரின் பொதுநிவரான நிதிக்கு அனுப்பி வைத்தான்.
இது தொடர்பாக கடிதம் ஒன்றையும் எழுதி முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியும் வைத்திருந்தான் சிறுவன் ஹரிஸ்வர்மன்.
அதில், ”இரண்டு வருடமாக சைக்கிள் வாங்க கொஞ்சம் கொஞ்சமாக உண்டியலில் சேமித்து வைத்திருருந்த பணத்தை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கலாம் என்று அப்பாவிடம் கேட்டேன். அவர் சரி என்று சொல்ல உடனே உண்டியலில் இருந்த பணத்த ஸ்டாலின் தாத்தாவிற்கு அனுப்பினேன். புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் முக.ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு, முதல்வர் கொரோனாவில் இருந்து மக்களை காக்க வேண்டும்," என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இது தொடர்பான செய்திகளும், ஸ்டாலின் தாத்தா என்று சிறுவன் ஹரிஸ்வர்மன் பேசும் வீடியோவும் நேற்று வைரலாகின. இதை கவனித்த ஸ்டாலின், சைக்கிள் வாங்க சேமித்த பணத்தை கொரோனோ நிதியாக வழங்கிய சிறுவன் ஹரிஸ்வர்மனுக்கு தற்போது புதிதாக சைக்கிள் வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும், சிறுவன் ஹரிஸ்வர்மனை தனது கட்சி நிர்வாகிகள் மூலம் தொடர்புகொண்டு வீடியோ கால் மூலம் பேசினார்.
தொடர்ந்து மேலும்,
”ஹரீஸ்வர்மன் என்ற சிறுவன் தனக்கு மிதிவண்டி வாங்குவதற்காக வைத்திருந்த உண்டியல் தொகையை #COVID19 தடுப்பிற்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பிய செய்தி கேட்டு நெகிழ்ந்தேன். இத்தகைய உணர்வே தமிழகத்தின் வலிமை. சிறுவனுக்கு மிதிவண்டி வாங்கிக் கொடுத்து தொலைபேசியில் அழைத்து வாழ்த்தினேன்," என்று டுவிட்டர் மூலம் தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின்.
அதோடு போனில் அச்சிறுவனிடம் பேசிய ஸ்டாலின், அச்சிறுவனை பாராட்டியதோடு, கொரோனா காலம் என்பதால் சைக்கிளில் வெளியே அதிகம் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்திவிட்டு, நன்றாக படிக்கவும் சொன்னார்.
இதற்கிடையே, சிறுவனின் மழலை கொஞ்சும் பேச்சு கலந்த வீடியோவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் தனக்கு இருசக்கர வாகனம் வாங்க சிறுகச்சிறுக உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை உதவும் நோக்கில் கொடுத்த செயலும் வெளியாகி வைரலாக, நெட்டிசன்கள் தற்போது சிறுவன் ஹரீஸ்வர்மனை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.