கொரோனா ஒழிப்புப் பணிகளுக்கு ரூ.9,027.08 கோடி: தமிழக சட்டமன்றத்தில் துணை பட்ஜெட் தாக்கல்!
கொரோனா தடுப்பு, கட்டுப்பாடு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ரூ.9.027 கோடி ஒதுக்கீடு செய்யும் வகையில், ரூ.12,845 கோடி மதிப்பீட்டிலான துணை பட்ஜெட் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.ன்னீர்செல்வம், சட்டமன்றத்தில் இன்று, 2020-21ம் ஆண்டுக்கான துணை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ரூ.12,845.20 கோடி மதிப்பீட்டில் தாக்கல் செய்யப்பட்ட துணை பட்ஜெட்டில் கொரோனா தடுப்பு, கட்டுப்பாடு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு என ரூ.9,027.08 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத்தின் குறுகிய கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இறுதி நாளான இன்று, சட்டமன்றத்தில், துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்றத்தில் இன்று, 2020-21ம் ஆண்டின் கூடுதல் செலவீனங்களுக்கான துணை பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
ரூ.12,845.20 கோடி நிதி ஒதுக்குவதற்கு இந்த துணை பட்ஜெட் வழி செய்வதாக பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
நிதியாண்டின் துவக்கம் முதல் கொரோனா தொற்று பாதித்துள்ளதால் அசாதரணமான சூழல் நிலவுவதாக அவர் குறிப்பிட்டார். ஆகவே, சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், சுகாதார வசதிகள் வழங்குதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரொக்க நிதியுதவி வழங்குதல், பொது விநியோக அமைப்பின் மூலம் கூடுதல் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குதல் மற்றும் அதற்கு உண்டான நிர்வாகச் செலவுகள் ஆகிய இனங்களில் பெருமளவில் கூடுதல் செலவினங்களை மாநில அரசு செய்துள்ளது. ஆகவே, இந்த ஆண்டின் முதல் துணை மதிப்பீடுகளின் அளவு முந்தைய ஆண்டுகளைவிட அதிகமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
கொரோனா கட்டுப்பாடு, தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இத்துணை மானியக் கோரிக்கையில் மொத்தம் 9,027.08 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் துணை முதல்வர் தெரிவித்தார்.
பொது விநியோக அமைப்பு மூலம் வழங்கப்படும் உணவுப் பொருள்களை இலவசமாக வழங்கியதாலும், பொது விநியோகக் கடைகளில் வழக்கத்துக்கு அதிகமாக விற்பனை நடைபெற்றதாலும் 3,359.12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
கொரோனா நோய்த் தொற்று நிவாரண உதவியாக, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் பல்வேறு நல வாரிய உறுப்பினர்களுக்கும் ரொக்கப் பண உதவியை மாநிலப் பேரிடர் நிவாரண நிதியத்திலிருந்து வழங்குவதற்காக, அரசு 3,168.64 கோடி ரூபாய் அனுமதித்துள்ளது என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இதுதவிர, கொரோனா கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக 1,049.56 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கொரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு மருந்து, சோதனைக் கருவி, ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கை வசதி மற்றும் உள் நோயாளிகளுக்கான உணவு போன்ற செலவுகளுக்காக 1,109.42 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.
மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு 14வது மத்திய நிதி ஆணையத்தின் இரண்டாம் தவணை பொது அடிப்படை மானியத்தை வழங்குவதற்காக அரசு 987.85 கோடி ரூபாய் அனுமதித்துள்ளது. இத்தொகை துணை மதிப்பீடுகளில் "மானியக் கோரிக்கை எண்.34 - நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை" என்பதன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.
தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப் பணிகளைச் செயல்படுத்திட வேளாண் துறைக்கு 107.40 கோடி ரூபாய் அரசு அனுமதித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
விவசாயிகள் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் திட்டத்தினைச் செயல்படுத்த மாநில அரசின் மானியமாக 316.80 கோடி ரூபாய்க்கு அரசால் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, அதில் 100 கோடி ரூபாய் துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் துணை முதல்வர் குறிப்பிட்டார்.
நிதி நிலை அறிக்கை சமர்ப்பிப்புக்குப் பின்பு அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் மற்றும் அரசின் கூடுதல் செலவினங்களுக்காக சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெறத் துணை மதிப்பீடு அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது வழக்கம் ஆகும்.
செய்தி தொகுப்பு: சைபர் சிம்மன்