ஒலிம்பிக் ‘சாதனை அரசிகள்’: 97 ஆண்டுகால காத்திருப்பை நினைவாக்கிய வீராங்கனை!
சிறிய நாட்டுக்கு பெரிய பெருமை கொடுத்த பெண்!
டோக்கியோ ஒலிம்பிக் தொடர் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் வழக்கம் போல பல்வேறு நாட்டு வீரர்கள் தங்கள் முத்திரைகளை பதித்து வந்தாலும், சிலர் பெறும் வெற்றி மக்கள் கொண்டாடும் அளவுக்கு முக்கியவத்துவம் பெறுகிறது. அப்படி ஒரு கொண்டாட்டத்தை ஏற்படுத்தி கொடுத்தவர் தான் ஹிடிலின் டயஸ் என்ற 30 வயது வீராங்கனை.
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இவர், டோக்கியோ ஒலிம்பிக்கில் பளு தூக்கும் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
55 கிலோ எடைப்பிரிவில் க்ளீன் அண்ட் ஜெர்க் நிகழ்வில் 127 கிலோ பளுவை தூக்கி இந்த பதக்கத்தை வென்றுள்ளார். மற்றவர்கள் தங்கம் வெல்வது போல் இல்லை ஹிடிலின் தங்கம் வென்றது. பிலிப்பைன்ஸ் நாட்டின் கிட்டத்தட்ட 100 வருட பதக்க கனவை நிறைவேற்றியிருக்கிறார் ஹிடிலின்.
ஆம், 97 வருட காலமாக பிலிப்பைன்ஸ் நாட்டு வீரர்களால் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை கைப்பற்ற முடியாமல் இருந்தது. அந்த ஏக்கத்தை, வரலாற்றை தனது திறமையால் மாற்றி எழுதி, தனது சொந்த நாட்டை முதல் தங்கப் பதக்கத்தை உச்சிமுகர வைத்திருக்கிறார் ஹிடிலின் டயஸ். இப்போது சொல்லுங்ககள் இவரின் வெற்றி மக்கள் கொண்டாடும் வெற்றிதானே.
இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற பல துன்பங்களை எதிர்கொண்டுள்ளார் ஹிடிலின். கடுமையான பயிற்சியை மேற்கொள்வதற்காக தனது குடும்பத்தை 7 மாத காலமாக பிரிந்து மலேசியாவில் தங்கி சிறப்பு பயிற்சியும் மேற்கொண்டுள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!
இதேபோல், மற்றொரு நபரின் வெற்றியும் இங்கே குறிப்பிட வேண்டும். பெர்முடா தீவுகள் பற்றி இங்கே பலருக்கு தெரியாது. வெறும் 53 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள ஒரு குட்டி தேசமே பெர்முடா தீவு. சென்னையின் பரப்பளவில் பத்தில் ஒரு பங்கு என்ற அளவில் தான் இருக்கும் அந்த தீவு. இந்த தீவின் மக்கள் தொகை சுமார் 70 ஆயிரம் பேர். நமது சேப்பாக்கம் தொகுதியின் மக்கள் எண்ணிக்கை அளவே.
என்றாலும், இந்த நாட்டின் சார்பாக ஒலிம்பிக் ட்ரையத்லான் போட்டியில் கலந்துகொண்டவர் ஃப்ளோரா டஃபி என்ற பெண்மணி. இந்தப் போட்டியில் வென்று தங்கப்பதக்கத்தை தனதாக்கி இருக்கிறார்.
இதுவரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி வரலாற்றிலேயே பெர்முடா தீவு வென்றுள்ள இரண்டாவது பதக்கம் ஃப்ளோரா டஃபி வென்ற பதக்கம் தான். மேலும், அந்நாடு உச்சிமுகரும் முதலாவது தங்கப் பதக்கமும் இதுவே.
இதற்குமுன், 1976ம் ஆண்டில், ஹெவிவெயிட் பாக்சிங்கில் கிளாரென்ஸ் ஹில் என்பவர் முதன்முதலாக அந்நாட்டு சார்பில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். இதன்பின் 45 ஆண்டுகால இடைவெளிக்குப்பிறகு தற்போது தான் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் ஃப்ளோரா டஃபி. இந்த பதக்கத்தின்மூலம், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற 'மிகக்குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடு' என்ற பெருமையை பெர்முடா பெறுகிறது.