சமூக நலனில் பங்களிக்கும் ஹைதராபாத் போக்குவரத்து காவலர்!
மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்டித்தருவது, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல், ரத்த தானம் செய்தல், மூடநம்பிக்கைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என சமூக நலனில் பங்களிக்கிறார் இவர்.
இந்தியாவில் காவலர்கள் தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கப்படுகின்றனர். சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதே இவர்களது கடமையாக இருப்பினும் பல நேரங்களில் ஊழல், மனித உரிமை மீறல் போன்றவற்றில் ஈடுபடுவதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
காவலர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து சவால் நிறைந்த பணிகளை மேற்கொண்டாலும் அவர்களைப் பற்றிய நேர்மறையான பிம்பம் உருவாவது சவாலாகவே உள்ளது. இருப்பினும் காவலர்கள் சிலர் சமூக நலனில் பங்களித்த செய்திகளையும் நம்மால் பார்க்கமுடிகிறது. போக்குவரத்து காவலர் ஒருவர் சாலைகளில் உள்ள பள்ளங்களை மூடியுள்ள சம்பவத்தையும் ராஜஸ்தானில் காவலர் ஒருவர் இலவசப் பள்ளியை நடத்தி வருவதையும் உதாரணமாக குறிப்பிடலாம்.
அதேபோல் ஹைதராபாத்தின் எல்.பி.நகர் டிவிஷன் ராச்கொண்டா கமிஷனர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அஞ்சபள்ளி நாகமள்ளு சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி பலரது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.
36 வயதான இவர் விபத்தில் பாதிக்கப்பட்ட 80க்கும் அதிகமானோருக்கு உதவியுள்ளார். 25க்கும் அதிகமான முறை ரத்த தானம் செய்துள்ளார். 100க்கும் அதிகமான கிராமங்களில் விழிப்புணர்வு நிகழ்வுகள் ஏற்பாடு செய்துள்ளார்.
’போலீஸ் அண்ணா’ என்று அன்புடன் அழைக்கப்படும் அஞ்சப்பள்ளி இது குறித்து 40 பாடல்களை எழுதியுள்ளார். இவற்றை யூட்யூபில் காணலாம். இந்த சானலுக்கு 8,000க்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த போக்குவரத்து காவலர் மாற்றுத்திறனாளிகளுக்கு 1.20 லட்ச ரூபாய் செலவழித்து இரண்டு வீடுகளைக் கட்டிக்கொடுத்துள்ளார். இதில் ஒரு வீட்டை கட்டுவதற்கு தனது மகளின் நகைகளை அடமானம் வைத்துள்ளார்.
அஞ்சபள்ளி தனது சமூக சேவை குறித்து ’தி நியூஸ் மினிட்’ உடனான உரையாடலில் கூறும்போது,
“2009ம் ஆண்டு காவல்துறையில் இணைவதற்கு முன்பு ஜன விக்ஞான வேதிகா என்கிற அமைப்பில் பங்கேற்றிருந்தேன். இது போலியான சாமியார்களின் முகத்திரையை கிழிக்கும் முயற்சியாகும். உதாரணத்திற்கு பல சாமியார்கள் காயம் ஏதும் ஏற்படாதவாறு நெருப்பில் நடந்து செல்கின்றனர். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் அப்பாவி கிராம மக்களை ஏமாற்றுகின்றனர். இதை முறியடிக்க நானே நெருப்பில் நடக்கத் தீர்மானித்தேன்.
”நெருப்பில் நடக்கும்போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறைந்தபட்சம் 3 விநாடிகள் நின்றால் மட்டுமே ஒருவரது காலில் தீக்காயம் ஏற்படும். நெருப்பில் ஓரிடத்தில் நிற்காமல் ஓடிச் செல்லும்போது யாராக இருந்தாலும் காயம் படாது. இதை மக்களுக்கு நிரூபிக்கவே நான் அவ்வாறு செய்யத் தீர்மானித்தேன்,” என்றார்.
இதைத் தொடர்ந்து மாநகர காவல் துறை குழு ஒன்றை அமைத்தது. இதில் அஞ்சபள்ளியும் அவரது குழுவினரும் மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கைகளைத் தகர்த்தெறிய வீதி நாடகங்கள் நடத்தினர்.
இத்தகைய சமூக நடவடிக்கைகள் மூலம் பணம் சம்பாதிப்பதில்லை என்றும் மக்கள் மீதுள்ள அன்பின் காரணமாகவே இதில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது இந்தப் போக்குவரத்து காவலர் பல்வேறு பிரிவுகளாகப் பிரித்துக்கொண்டு சமூக சேவையில் ஈடுபட்டுள்ளார்.
உதாரணத்திற்கு சாலை விபத்துகளுக்கு முதலுதவி, அவசர காலங்களில் ரத்த தானம், தொலைதூர கிராமங்களில் மூடநம்பிக்கைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சமூக வலைதளங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள், ஏழை மக்களுக்கு வீடு மற்றும் பண உதவி வழங்குவது ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளதாக ’தி லாஜிக்கல் இண்டியன்’ தெரிவிக்கிறது. அஞ்சபள்ளி தனது வருங்கால திட்டம் குறித்து கூறும்போது,
“தெலுங்கு மொழியில் உள்ள என்னுடைய பாடல்களை இந்தியில் மொழிபெயர்த்து இந்தியா முழுவதும் வெளியிடத் திட்டமிட்டுள்ளேன். விபத்து என்பது அனைத்து இடங்களுக்கும் பொதுவான ஒன்றுதான். என்னுடைய பாடல்கள் இந்தியா முழுவதும் பயணிக்கவேண்டும் என்று விரும்புகிறேன்,” என்று தெரிவித்ததாக ’தி நியூஸ் மினிட்’ குறிப்பிடுகிறது.
கட்டுரை: THINK CHANGE INDIA