தமிழகத்தில் தொழில் பழகுநருக்கான தேர்வு முகாம்!
பயிற்சி தேர்வுக்கு கட்டணமா அல்லது இலவசமா? தேர்வு முதல் முடிவு வரை பயனாளர் பணம் எதுவும் செலுத்த வேண்டுமா.? விபரம் உள்ளே...
மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகமும், தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநரகமும் இணைந்து, தொழில் பழகுநருக்கான தேர்வு முகாமை நடத்தவுள்ளன.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறையின் பயிற்சிப் பிரிவு இணை இயக்குநர் திரு ஸ்ரீனிவாச ராவ்,
"வருகிற 19 ஆம் தேதி தொடங்கி, மார்ச் 4 ஆம் தேதிவரை, தமிழகத்தில் செங்கல்பட்டு, சேலம், கோயம்புத்தூர், உளுந்தூர்பேட்டை, மதுரை, தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய ஏழு இடங்களில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையங்களில் (ITI) இந்த தொழில் பழகுநருக்கான தேர்வு முகாம் நடைபெறவுள்ளதாக," கூறினார்.
தொழிற்சாலைகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் எப்படி வேலை வாய்ப்பை பெறுவது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், இந்த முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
முகாமில் தேர்வு செய்யப்படுவோருக்கு, ஐசிஎஃப், இந்தியன் ஆயில், என்எல்சி, பிஹெச்இஎல் உள்ளிட்ட மத்திய-மாநில பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் முன்னணி தனியார் தொழில் நிறுவனங்களில் இரண்டாண்டு காலம் ஊதியத்துடன் கூடிய தொழில் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐடிஐ தேர்ச்சி மற்றும் 8 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை தேறியவர்கள் இந்த பயிற்சி முகாமில் பங்கேற்று, தங்களுக்கு ஆர்வமுள்ள துறையில் பயிற்சி பெறுவதன் மூலம், தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பை பெறலாம் அல்லது சொந்த தொழில் தொடங்கலாம் என்றும் ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்தார்.
இந்த பயிற்சியின் நிறைவில் தொழில் பயிற்சிக்கான தேசியக் குழுவினால் நடத்தப்படும் தேசிய அளவிலான தொழில் தேர்வு நடத்தப்பட்டு, இதில் தேர்ச்சி பெறுவோருக்கு தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சான்றிதழை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, உலகம் முழுவதும் வேலைவாய்ப்பு பெறலாம் என்றும் அவர் கூறினார்.
தகவல்: பிஐபி