‘இந்த ஒரே கார்டில் மெட்ரோ டு எம்டிசி பஸ் வரை பயணிக்கலாம்’ - ‘சிங்காரச் சென்னை அட்டை’ பெறுவது எப்படி?
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள சிங்காரச் சென்னை அட்டை மூலம் வங்கிக் கணக்கு இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிற சிறப்பம்சங்கள் என்ன என விரிவாக பார்க்கலாம்...
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 'சிங்காரச் சென்னை அட்டை' மூலம் வங்கிக் கணக்கு இல்லாமல் ஏடிஎம்-இல் பணம் எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிற சிறப்பம்சங்கள் என்ன என விரிவாகப் பார்க்கலாம்...
'சிங்காரச் சென்னை அட்டை'
சென்னை மெட்ரோ ரயில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் இணைந்து தேசிய பொது இயக்க அட்டை (NCMC) அல்லது சிங்காரச் சென்னை அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது.
சிஎம்ஆர்எல் இயக்குநர் (சிஸ்டம் மற்றும் ஆபரேஷன்ஸ்) ராஜேஷ் சதுர்வேதி கூறுகையில்,
“தற்போது இந்த கார்டுகளை சென்னை மெட்ரோ ரயில் சேவைகளுக்கு பயன்படுத்த முடியும் என்றும், ஒரு மாதத்தில் சில்லறை விற்பனை நிலையங்களிலும் இதைப் பயன்படுத்தலாம் மற்றும் பல்நோக்கு அட்டையாகவும் செயல்பட முடியும்,” எனத் தெரிவித்தார்.
விரைவில், வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்படும் புதிய ரூபே என்சிஎம்சி கார்டுகள் பயணிகளுக்குக் கிடைக்க உள்ளன. மேலும், இது டெபிட் கார்டாகவும், போக்குவரத்து அமைப்புகளில் பயன்படுத்தக்கூடிய பயண அட்டையாகவும் செயல்பட உள்ளது. பயணிகள் தங்களுக்கு அருகேயுள்ள எஸ்பிஐ வங்கி கிளைகளில் இருந்து என்சிஎம்சி வசதியுள்ள ரூபே கார்டுகளை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
வசதிகள் என்னென்ன?
- சிங்காரச் சென்னை அட்டை மூலம் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலும், இந்தியாவில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்கள் எம்.எம்.ஆர்.டி.ஏ மும்பை லைன், பெங்களூரு மெட்ரோ, டெல்லி மெட்ரோ மற்றும் விமான நிலையம், கான்பூர் மெட்ரோ, மும்பை மற்றும் கோவாவில் கடம்பா போக்குவரத்து பேருந்துகள் ஆகிய இடங்களில் பயன்படுத்த முடியும்.
- எதிர்காலத்தில், MTC பேருந்துகள், புறநகர் ரயில்கள், பார்க்கிங் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் பயணம் செய்ய பயணிகள் இந்த அட்டைகளை பயன்படுத்த முடியும்.
- சென்னையில் இயக்கம் தடையற்றது மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், நகரத்தில் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தவும் இந்த அட்டையை பயன்படுத்தப்பட உள்ளது.
- சிங்காரச் சென்னை அட்டையை மெட்ரோ ரயில், எம்டிசி பேருந்துகள் மற்றும் புறநகர் ரயில் சேவைக்கான டிக்கெட் பெற பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்காக பொருத்தப்பட்டிருக்கும் இயந்திரத்தில் கார்டை ஸ்வைப் செய்து, போகும் இடத்தை பதிவிட்டாலே போதும் அதற்கான கட்டணம் எடுத்துக்கொள்ளப்படும். இதனால் பயணிகள் வெகு நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
- தற்போது மெட்ரோவில் மட்டுமே இந்த கார்டை பயன்படுத்த முடியும். அடுத்த 2 மாதத்தில் புறநகர் ரயில் நிலையங்களிலும், 10 மாதங்களில் அரசுப் பேருந்துகளில் டிக்கெட் பெறும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் எஸ்பிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- பணம் செலுத்தும் நிறுவனமான பேகிராஃப்ட், சென்னை மெட்ரோவிற்கான End to End டிக்கெட் முறையை நிர்வாகிக்க உள்ளது. இந்நிறுவனம் புனே மெட்ரோவில் வெற்றிகரமாக இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து, தற்போது சென்னை மெட்ரோவில் இரண்டாவது டிக்கெட் அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏடிஎம்-மில் பணம் எடுக்கும் வசதி:
குறைந்தபட்ச KYC கொடுத்தால் ரூ.10 ஆயிரம் வரையிலும், முழு KYC கொடுத்தால் ரூ.2 லட்சம் வரையிலும் இந்த அட்டையில் வைத்துக் கொள்ளலாம். மேலும், முறையான KYC கொடுத்தால் ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதியும் வழங்கப்படும்.
இதன் மூலம் வங்கிக் கணக்கு இல்லாமல் ஏடிஎம் மூலம் பணம் எடுத்துக் கொள்ளலாம். ஆன்லைன் மூலம் பல்வேறு பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். தினசரி ரூ.50 ஆயிரம் வரை இந்த அட்டை மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.
கார்டு பெறுவது எப்படி?
கோயம்பேடு, சென்னை சென்ட்ரல், சென்னை விமான நிலையம், உயர்நீதிமன்றம், ஆலந்தூர் மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட ஏழு ரயில் நிலையங்களில் இந்த கார்டுகளை பயணிகள் வாங்கலாம் என்றும், அதிகபட்சமாக 2,000 ரூபாய்க்கு மேல் கட்டணம் செலுத்தலாம் என்றும் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்டேஷன்களில் எஸ்பிஐ மூலம் கார்டு இலவசமாக வழங்கப்பட்டாலும், பயணிகள் அடையாளச் சான்றிதழை வழங்க வேண்டும் என்றும், கார்டை ரீசார்ஜ் செய்யும் தொகையில் 1.8% கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் கழக சிறப்பு அலுவலர் ஜெயக்குமார் கூறுகையில்,
“இந்த கார்டுகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அதிக மக்கள் வாங்கும் வகையில், 1.8% கட்டணத்தை குறைக்க திட்டமிட்டு வருகிறோம்,” எனத்தெரிவித்தார்.
ரீசார்ஜ் செய்வது எப்படி?
புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கவும் ரீசார்ஜ் செய்யவும் எஸ்பிஐக்கு பிரத்யேக இணையதளம் (https://transit.sbi/swift/customerportal?pagename=cmrl) உள்ளது. கார்டு இருப்புத்தொகையை ரொக்கம் மூலமாகவும் ஆன்லைன் வங்கிக் கணக்குகள் மூலமாகவும் நிரப்பிக்கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த அட்டை பயன்படுத்துபவர்களிடம் இருந்து ஆண்டு பராமரிப்புக் கட்டணம் எதுவும் வசூல் செய்யப்படாது.
சிங்காரச் சென்னை 2.0: குப்பைகளின்றி சென்னை அழகாய் மிளிர திறம்பட உழைக்கும் ‘உர்பசேர்-சுமீத்’