அமேசான் இந்தியா உடன் இணைந்து வெற்றித் தொழில் முனைவோர் ஆன ட்ரக் ஓட்டுநர்கள்!
மின்வணிக ஜாம்பவான் அமேசான் நிறுவனத்தின் லாஜிஸ்டிக்ஸ் பிரிவில் இணைந்து ஏராளமானோர் தொழில்முனைவில் ஈடுபட்டு பலனடைந்ததுடன் பலருக்கு வேலை வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
பெங்களூருவைச் சேர்ந்தவர் கிரண் குமார் சிங். இவரது அப்பா ஒரு ட்ரக் ஓட்டுநர். 2015ம் ஆண்டு கிரணின் அப்பா ட்ரக் ஓட்டும்போது விபத்து நேர்ந்தது. மூன்று மாதங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கிரண் குமார் குடும்பப் பொறுப்புகளை சுமக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. எனவே கிரண் அப்பாவைப் போன்றே ட்ரக் ஓட்ட ஆரம்பித்தார்.
தொழில் முறையாக ட்ரக் ஓட்ட பயிற்சி பெறுவதற்குக் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆனது. குடும்பச் சூழலுக்காக ட்ரக் ஓட்டும் தீர்மானத்தை அவர் எடுத்தபோதும், லாஜிஸ்டிக்ஸ் பிரிவில் தொழில்முனைவில் ஈடுபடவேண்டும் என்கிற ஆர்வம் அவருக்கு ஏற்பட்டது.
ஜெயம் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் தெரிந்த நபர் ஒருவர் மூலம் இவருக்கு ஒரு தகவல் தெரியவந்தது. அதாவது அமேசான் இந்தியா நெட்வொர்க்கின் வழித்தடங்களில் நீண்ட தூர பயணங்களுக்கான வாகனங்களின் தேவை இருப்பதை கிரண் தெரிந்துகொண்டார்.
கிரண் தன்னை பார்ட்னராக இணைத்துக்கொண்டு செயல்படத் தொடங்கினார். அமேசானின் செயல்பாட்டு வழிகாட்டுதல்களை விரைவாகவே புரிந்துகொண்டார். அவரின் விடாமுயற்சியையும் தரமான சேவையையும் கவனித்த அமேசான் நிறுவனம், அவருக்கு தென்னிந்தியா முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் செயல்பட வாய்ப்பளித்தது.
“மூன்றாண்டுகளுக்குள்ளாகவே வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரித்தேன். என் அப்பா, சகோதரர், மாமா ஆகியோருடன் இணைந்து SDP லாஜிஸ்டிக்ஸ் என்கிற நிறுவனத்தை நடத்தி வருகிறேன். இதன் மூலம் 40 ட்ரக் ஓட்டுநர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கியிருக்கிறேன்,” என்கிறார் கிரண்.
விநியோகச் சங்கிலியில் முக்கியப் பங்கு வகிக்கும் ட்ரக்
மின்வணிக நிறுவனமான அமேசானின் லாஜிஸ்டிக்ஸ் பிரிவு அமேசான் ட்ரான்ஸ்போர்டேஷன் சர்வீசஸ். இந்நிறுவனமே கிரணின் தொழில்முனைவு பயணத்தை வெற்றியடையச் செய்துள்ளது.
அமேசான் இந்தியாவின் விநியோகச் சங்கிலி நெட்வொர்க் மிகவும் சிக்கலானது. ஃபுல்பில்மெண்ட் செண்டர், வகைப்படுத்தும் பிரிவுகள், டெலிவரி மையங்கள், இறுதியாக டெலிவர் செய்யப்படும் பகுதிகள் என பல பகுதிகளை உள்ளடக்கியது. சரியான பிராடக்டை, சரியான முகவரியில், சரியான நேரத்தில் கொண்டு சேர்க்கவேண்டும்.
2013ம் ஆண்டு இந்த மின்வணிக நிறுவனம் இந்திய சந்தையில் செயல்படத் தொடங்கியபோது விற்பனையாளர்களுக்கு நம்பகமான, வலுவான லாஜிஸ்டிக்ஸ் நெட்வொர்க் இல்லாததை கவனித்தது. எனவே போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் உள்ளூர் நிறுவனங்களுடனும் சிறு வணிகங்களுடனும் கைகோர்த்து அத்தகைய நெட்வொர்க்கை உருவாக்க ஆரம்பித்தது.
அப்போதிருந்து, அமேசான் வலுவான லாஜிஸ்டிக்ஸ் ஏற்பாடுகளுடன் இந்தியாவில் சிறப்பாக வளர்ச்சியடைந்து வருகிறது. ட்ரக் பார்ட்னர்கள் முக்கியப் பங்கு வகித்தார்கள். ஃபுல்ஃபில்மெண்ட் செண்டர் மற்றும் இறுதியாக டெலிவரி செய்யப்படவேண்டிய பகுதிகளுக்கும் இடையே விரைவாக பொருட்களைக் கொண்டு சேர்க்க இந்த ஏற்பாடு உதவியது.
அமேசான் ட்ரான்ஸ்போர்டேஷன் சர்வீசஸ் இந்தியா இயக்குநர் அபினவ் சிங் கூறும்போது,
“சரியான நேரத்தில் டெலிவர் செய்யப்படுவதில் ட்ரக்கிங் பார்ட்னர்கள் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். ட்ரக் ஓட்டுநர்கள் வருவாய் ஈட்டவும், பாதுகாப்பாக வாகனம் ஓட்டும் நுட்பங்களை உறுதிபடுத்தவும், வழித்தடங்கள் குறித்த அறிவு மற்றும் பராமரிப்பு கிடைக்கப்பெறவும், மிகப்பெரிய அசல் உபகரண உற்பத்தியாளர்கள் மூலம் பலனடையவும் உதவும் வகையில் லாஜிஸ்டிக்ஸ் பார்ட்னர்களுடன் இணைந்து பணிபுரிகிறோம்,” என்றார்.
ஓட்டுநர்களின் உடல்நலனை பாதுகாக்கவும் விபத்து காப்பீடு பலன்கள் கிடைக்கவும், தேவையான நேரத்தில் விரைவாக பண உதவி கிடைக்கவும் அமேசான் இந்தியா நிறுவனம் அதன் லாஜிஸ்டிக்ஸ் பார்ட்னர்களுக்கு உதவுகிறது. மேலும் ஓட்டுநர்கள் தங்களது லோட்களை முறையாகக் கண்காணித்து, செயல்படுத்தவும் Relay App உதவுகிறது.
“ஓட்டுநர் பாதுகாப்பிற்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். வாகனம் ஓட்டுவது, கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என ஒட்டுமொத்த பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்தும் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்களுக்கு பயிற்சியளித்துள்ளோம்,” என்கிறார் அபினவ்.
பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக அவர் மேலும் விவரிக்கும்போது,
”ஓட்டுநர்களுக்கான சுகாதார மற்றும் விபத்து காப்பீட்டிற்காக மூன்றாம் தரப்பு நிறுவனங்களுடன் இணைந்துள்ளோம். இதை அமேசான் நிறுவனம் திருப்பிச் செலுத்திவிடும்,” என்றார்.
லாஜிஸ்டிக்ஸ் தொழில்முனைவு – மேலும் சிலரின் வெற்றிப் பயணங்கள்
குருகிராமைச் சேர்ந்த நரேஷ் பால் ஷர்மாவும் நீண்ட தூர பயணங்களுக்கான வாகனங்களின் தேவை இருப்பதை அறிந்து, கிரண் போன்றே அமேசானின் லாஜிஸ்டிக்ஸ் பிரிவில் சேர்ந்துள்ளார்.
இவர் 1993ம் ஆண்டு ட்ரக் ஓட்டுநராக தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார். பல நுணுக்கங்களைக் கற்றறிந்துள்ளார். சாலை விபத்து மற்றும் பாதுகாப்பு குறித்த அனுபவமும் கிடைத்துள்ளது. சிக்கல்களை சந்தித்திருப்பினும் ட்ரக் ஓட்டுவதில் ஆர்வம் குறையாமல் அதிகரிக்கவே செய்தது.
2017-ம் ஆண்டு அமேசானில் பார்ட்னராக சேர்ந்தார். பல்வேறு வழித்தடங்களில் செயல்பட்டார். இவரது வாகனங்கள் 40 என்கிற எண்ணிக்கையில் விரிவடைந்தது. இன்று NRS ட்ரான்ஸ்போர்ட் சர்வீசஸ் என்கிற இவரது வணிகத்தில் இவரது மகன் ராகுல் உதவி வருகிறார். நரேஷ் கூறும்போது,
“பொதுவாகவே நம் சமூகத்தில் ட்ரக் குறித்த நேர்மறையான கண்ணோட்டம் மக்களிடையே இருப்பதில்லை. என்னுடைய ஆர்வத்தை என் குடும்பத்தினர், உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் போன்றோர் புரிந்துகொண்டார்கள். மற்ற பணிகளைப் போன்றே என்னுடைய தொழிலுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன். ஆர்வத்துடன் ஒரு பணியை மேற்கொள்ளும்போது எந்த ஒரு வேலையும் தாழ்வானது அல்ல,” என்றார்.
கிரண், நரேஷ் இருவருமே வெவ்வேறு பின்னணி கொண்டவர்கள். இருவரும் லாஜிஸ்டிக்ஸ் தொழில்முனைவில் ஈடுபடத் தொடங்கினார்கள். மொத்தத்தில் 80-க்கும் அதிகமான ட்ரக் ஓட்டுநர்களுக்கு இவர்கள் வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளார்கள்.
விகாஷ் குமார் பெங்களூருவைச் சேர்ந்த கல்பவிருக்ஷா லாஜிடெக் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் நிறுவனர். அமேசான் இந்தியா நிறுவனத்துடன் இவரது லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் ஏற்படுத்திக்கொண்ட இணைப்பு நேரடியாகவும் மறைமுகமகாவும் கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவியுள்ளது.
தன்பாத் பகுதியைச் சேர்ந்தவர் பிரேந்திர குமார் சிங். ஜோதி சர்வீசஸ் என்கிற சிறு லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தை இவர் நடத்தி வருகிறார். அமேசான் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் மற்றொரு பயனாளியான இவர் கூறும்போது,
“நான் கூரியர் நிறுவனம் ஒன்றில் டெலிவரி ஊழியராக என் பணிவாழ்க்கையை தொடங்கினேன். 2019ம் ஆண்டு லாஜிஸ்டிக்ஸ் பிரிவில் செயல்படத் தொடங்கி அமேசான் நிறுவனத்துடன் இணைந்தேன். எட்டு வாகனங்கள் 56 வாகனங்களாக அதிகரித்தது. நான் முன்னர் வேலை செய்த கூரியர் நிறுவனம் ஒரு நிகழ்ச்சிக்கு என்னை விருந்தினராக அழைத்தது முக்கியத் தருணமாக அமைந்தது,” என்றார்.
2019-2025 ஆண்டுகளிடையே லாஜிஸ்டிக்ஸ் துறை 10.5 சதவீதம் வருடாந்திர வளர்ச்சி விகிதத்துடன் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் லாஜிஸ்டிக்ஸ் தொழில்முனைவில் மேலும் பலர் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி இந்தத் துறையில் முதலீடு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முதலீடு எளிதாகக் கிடைக்கப்பெறவும் வெளிப்படைத்தன்மை இருக்கவும் அரசாங்கம் ஏராளமான திட்டங்களை வகுத்துள்ளதாக 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இந்தத் துறையின் வளர்ச்சிக்கு மின்வணிக துறை மிகப்பெரிய அளவில் பங்களிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா