Truecaller 'டிஜிட்டல் டைரக்டரி' - அரசு அதிகாரிகளின் வெரிஃபை செய்யப்பட்ட தொடர்பு எண்கள் அறிமுகம்!
அரசு அதிகாரிகள் போல் மொபைல் போனில் அழைத்து எத்தனையோ விதமான மோசடிகளில் இன்று பலர் ஈடுபட்டு வரும் சூழலில் நம்பிக்கையை ஏற்படுத்தும் ட்ரூகாலர் செயலியின் இந்த முன்னெடுப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
செயலி இந்திய அரசின் டிஜிட்டல் டைரக்டரியை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆயிரக்கணக்கான அரசு அதிகாரிகளின் தொடர்பு எண்கள் இருக்கும். இவை அனைத்துமே சரிபார்க்கப்பட்ட நம்பகமான எண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் அரசு அதிகாரிகளுடன் எந்தவித அச்சமும் இன்றி தொடர்பில் இருக்க இந்த டைரக்டரி உதவும்.
அரசு அதிகாரிகள் போல் மொபைல் போனில் அழைத்து எத்தனையோ விதமான மோசடிகளில் இன்று பலர் ஈடுபட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் நம்பிக்கையை ஏற்படுத்தும் ட்ரூகாலர் செயலியின் இந்த முன்னெடுப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
ஹெல்ப்லைன்கள், சட்ட அமலாக்க முகமைகள், தூதரகங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட முக்கியத் துறைகளின் தொடர்பு எண்கள் இந்த டைரக்டரியில் கிடைக்கும். 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த சேவை தற்போது அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்த டைரக்டரியில் இருக்கும் தகவல்கள் நேரடியாக அதிகாரப்பூர்வமாக அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்டவை. 240 மில்லியனுக்கும் மேற்பட்ட ட்ரூகாலர் பயனர்கள் எந்தவித சிக்கலும் இல்லாமல் நம்பகமான முறையில் அரசு அதிகாரிகளைத் தொடர்புகொள்ள உதவுவதே இந்த முயற்சியின் நோக்கம்.
பொதுமக்களிடம் போன் மூலம் அரசு அதிகாரிகள் என்கிற பெயரில் ஆள்மாறாட்டம் செய்து பலர் ஏமாற்றி வருகின்றனர். பொதுமக்களிடம் உரையாடி ட்ரூகாலர் இந்தப் பிரச்சனையின் தீவிரத்தன்மையை உணர்ந்தது. ட்ரூகாலர் அதன் பயனர்களிடம் நம்பகத்தன்மையை ஏற்படுத்தி அவர்களை மோசடியிலிருந்து பாதுகாப்பதில் தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
இதைத் தொடர்ந்து ஆள்மாறாட்ட மோசடி பிரச்சனைக்குத் தீர்வுகாணும் வகையில் தற்போது இந்த டைரக்டரியை அறிமுகம் செய்துள்ளது.
பயனர்கள் போன் செய்யும்போதோ அல்லது அழைப்பை ஏற்கும்போதோ பச்சை நிறத்தில் பேக்கிரவுண்ட் தெரிவதையும் ப்ளூ டிக் ஒன்றையும் பார்க்கமுடியும். அது சரிபார்க்கப்பட்ட எண் என்பதற்கு இதுவே அத்தாட்சி.
பயனர்கள் தெரிவிக்கும் கருத்தை அடிப்படையாகக் கொண்டு அடுத்த கட்டமாக மாவட்ட மற்றும் நகராட்சி அளவில் டைரக்டரியை விரிவுபடுத்த ட்ரூகாலர் திட்டமிட்டுள்ளது. இதற்காக வெவ்வேறு அரசுத் துறைகளுடன் இணைந்து ட்ரூகாலர் பணியாற்றி வருகிறது.
இந்தப் புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்படுவது குறித்து ட்ரூகாலர் பொது விவகார இயக்குநர் பிரக்யா மிஸ்ரா கூறும்போது,
“ட்ரூகாலர் கால் செய்பவர்களை அடையாளம் காட்டும் வெறும் காலர் ஐடெண்டிஃபிகேஷன் செயலி என்பதைத் தாண்டி சிறப்பாக வளர்ச்சி அடைந்திருக்கிறது. இன்று இந்தியாவின் நகர்புற மற்றும் கிராமப்புற சந்தைகளுக்கு இடையில் இருக்கும் டிஜிட்டல் இடைவெளியை ட்ரூகாலர் நிரப்புகிறது. டிஜிட்டல் தகவல் தொடர்பில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தி இதை சாத்தியப்படுத்துகிறது.
“அரசு அதிகாரிகள் என்கிற பெயரில் ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபடுபவர்களிடமிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்தப் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறோம். இதன் மூலம் மக்கள் தேவையான சமயத்தில் சரியான அரசு அதிகாரிகளைத் தொடர்புகொள்ள முடியும். இது அரசு அதிகாரிகளின் தொடர்பு எண்களைக் கொண்டிருக்கும் முதல் டிஜிட்டல் டைரக்டரி. பயனர்களின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்து எங்கள் சேவைகளை மேம்படுத்தி பாதுகாப்பான தகவல் தொடர்பை உறுதிசெய்வோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
Explainer - டிஜிட்டல் வங்கி யூனிட் என்றால் என்ன? பயனர்கள் எப்படி பெறலாம்?