‘ட்விட்டர் தளத்தை முடக்கி விடுவேன்’ - ட்ரம்ப் மிரட்டல்!
ட்ரம்பின் இரண்டு பதிவுகளை தவறானது என்று ட்விட்டர் அடையாளப்படுத்தியதால் கோபமடைந்த அமெரிக்க அதிபர் ட்விட்டருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
முதல் முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ட்விட்டரில் பதிவிட்ட இரண்டு பதிவுகளை தவறானது என்று ட்விட்டர் அடையாளப்படுத்தியுள்ளது. இதனால் பொதுத்தேர்தலில் ட்விட்டர் தலையிடுவதாக ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன் சமூக வலைதளங்களை முடக்கப்போவதாகவும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தலில் தபால் வாக்குச் சீட்டு முறை பின்பற்றப்பட்டால் மோசடிகள் நடக்கும் என்று ட்ரம்ப் கருத்து தெரிவித்திருந்தார். ட்ரம்பின் இந்தப் பதிவு 'தவறானது' என்று ட்விட்டர் அடையாளப்படுத்தியுள்ளது.
“தபால் வாக்குச் சீட்டு நிச்சயம் மோசடிக்கு வழிவகுக்கும். தபால் வாக்குகள் சட்டத்திற்கு புறம்பாக அச்சிடப்படவும் கையொப்பமிடப்படவும் வாய்ப்புள்ளது. கலிஃபோர்னியா ஆளுநர் மில்லியன் கணக்கானோருக்கு வாக்கு சீட்டுகள் வழங்குகிறார்….” என்று ட்ரம்ப் ட்வீட் செய்திருந்தார்.
ட்ரம்பின் இரண்டு பதிவுகளைத் தவறானது என்று அடையாளப்படுத்தியுள்ள ட்விட்டர் அதிலுள்ள கருத்து குறித்த உண்மைத்தன்மையைத் தெரிந்துகொள்ளுமாறு பயனர்களுக்கு பரிந்துரை செய்துள்ளது.
ட்விட்டரில் ட்ரம்பை 80 மில்லியன் பேர் பின்தொடரும் நிலையில் சமூக வலைதளமான ட்விட்டர் கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் விதமாக செயல்படுவதாக ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.
“ட்விட்டர் 2020 பொதுத்தேர்தலில் தலையிடுகிறது. தபால் வாக்குச்சீட்டுகளில் மோசடி நிகழும் என்கிற என் கருத்தை தவறு என்று ட்விட்டர் அடையாளப்படுத்தியுள்ளது. போலியான செய்திகளை வழங்கும் சிஎன்என், வாஷ்ங்டன் போஸ்ட் போன்ற செய்தி நிறுவனங்களின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ட்விட்டர் இவ்வாறு அடையாளப்படுத்தியுள்ளது…” என்று ட்ரம்ப் ட்வீட் செய்துள்ளார்.
“ட்விட்டர் கருத்து சுதந்திரத்தை பறிக்கிறது. ஒரு அதிபராக என்னால் இதை அனுமதிக்கமுடியாது,” என்று மற்றொரு ட்விட்டர் பதிவில் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் முடக்கப்படும் என்றும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“கருத்து சுதந்தித்தை பறிக்கும் முயற்சியில் சமூக வலைதளங்கள் ஈடுபட்டிருப்பதாக குடியரசுக் கட்சியினர் உணருகின்றனர். இதை எங்களால் அனுமதிக்கமுடியாது. இவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து முடக்குவோம்,” என்று ட்ரம்ப் ட்வீட் செய்துள்ளார்.
“2016-ல் இத்தகைய முயற்சியில் ஈடுபட்டு தோற்றுப்போனதையும் நாங்கள் கண்டோம். இதையே மேலும் நவீனமான முறையில் முயற்சிப்பதை அனுமதிக்கமுடியாது…” என்று கடந்த தேர்தலில் ஹிலாரி கிளிண்டனை எதிர்த்து வெற்றி பெற்றதை ட்ரம்ப் சுட்டிக்காட்டினார்.
குடியரசுக் கட்சி வேட்பாளரான ட்ரம்ப் சமீப காலமாக தபால் வாக்குச்சீட்டு குறித்து ட்விட்டரில் அதிகம் பதிவிட்டு வருகிறார். நாட்டில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் கலிஃபோர்னியா மிச்சிகன் போன்ற மாகாணங்களில் ஆட்சியில் இருக்கும் ஜனநாயகக் கட்சி கொரோனா வைரஸ் சூழலைப் பயன்படுத்தி தபால் வாக்குச் சீட்டை விநியோகித்து வருகிறது.
ட்விட்டர் தனது தளத்தில் பதிவிடப்படும் போலிச் செய்திகள் அல்லது மக்களை தவறாக வழிநடத்தும் தகவல்கள் ‘தவறானவை’ என அடையாளப்படுத்தப்படும் என்று உறுதியளித்திருந்தது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தினமும் ட்விட்டர் பயன்படுத்தி வருகிறார். உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளை பணிநீக்கம் செய்யவும் இந்தத் தளத்தைப் பயன்படுத்தி வருகிறார். அத்துடன் அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களுடன் சண்டையிடவும் இந்தத் தளத்தைப் பயன்படுத்தி வருகிறார்.
“தபால் வாக்குச் சீட்டுகளில் மோசடி நிகழும் என்கிற அதிபர் ட்ரம்பின் ஆதரமற்ற தகவலின் உண்மைத்தன்மை சரிபார்க்கப்படவேண்டும் என்று ட்விட்டர் அடையாளப்படுத்தியுள்ளது,” என்று நேஷனல் பப்ளிக் ரேடியோ தெரிவித்துள்ளது.
“தபால் வாக்குச் சீட்டு குறித்த ட்விட்டர் பதிவு மக்கள் வாக்களிப்பதைப் புறக்கணிக்கத் தூண்டும் விதத்தில் அமையவில்லை என்பதால் ட்விட்டரின் விதிகளுக்கு புறம்பானது இல்லை என்றாலும் வாக்களிக்கும் செயல்முறை பற்றி, குறிப்பாக தபால் வாக்குச்சீட்டு முறை பற்றி தவறாக வழிநடத்தும் விதத்தில் அமைந்துள்ளது,” என்று என்பிஆர்-இடம் ட்விட்டர் செய்தித் தொடர்பாளர் ட்ரெண்டன் கென்னடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள வாக்காளர்களுக்கு அதிபர் தகவல்களைக் கொண்டு சேர்க்க விரும்பும் நிலையில் ட்விட்டர் அதில் தேவையின்றி தலையிடுவதாகவும் `தி ட்ரம்ப் கேம்பெயின்’ குற்றம் சாட்டுகிறது.
“அதிபர் ட்ரம்ப் வாக்காளர்களிடையே தகவல்களைக் கொண்டு சேர்க்க விரும்பும் நிலையில், சிலிக்கான் வேலி இதில் நிச்சயம் தலையிடும் என்பதை நாங்கள் அறிவோம்,” என்று ட்ரம்ப் 2020 பிரச்சார மேலாளர் பிராட் பார்ஸ்கேல் குறிப்பிட்டுள்ளார்.
“ட்விட்டர் போலியான செய்திகளை வழங்கும் நிறுவனங்களோட இணைந்து அரசியல் நோக்கோடு களங்கம் ஏற்படுத்த முற்படுகிறது. பல மாதங்களுக்கு முன்பே ட்விட்டர் தளத்தில் இருந்து எங்கள் விளம்பரங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டோம். ட்விட்டர் தளம் அரசியல் நோக்கத்தோடு பாரபட்சத்துடன் செயல்படுவதும் அதற்கு முக்கியக் காரணம்,” என்று பார்ஸ்கேல் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவி வரும் தற்போதைய சூழலில் வெளியில் சென்று வாக்குப்பதிவு செய்ய விரும்பவில்லை என்று 66 சதவீத அமெரிக்கர்கள் சமீபத்திய ஆய்வில் கருத்து தெரிவித்துள்ளதாக Pew Research Centre சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் இந்த சிக்கலுக்கு தீர்வுகாண தபால் வாக்கு சீட்டு முறையை அமல்படுத்துவதற்கான அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
தகவல்: பிடிஐ