உங்களிடம் உள்ள புகைப்படங்களை ஓவியங்களாக மாற்ற வேண்டுமா?
வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஹாஸ்டலில் மூன்று நண்பர்களிடையே தோன்றிய ஐடியா ஸ்டார்ட்-அப் ஆகி இன்று ஓர் ஆண்டில் 1.2 கோடி ரூபாய் விற்றுமுதல் பெற்றுள்ளது.
இன்றைய தலைமுறையினர் புகைப்படங்கள் எடுப்பதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். ஆனால் இவர்கள் எடுக்கும் பெரும்பாலான புகைப்படங்கள் போனில் சேமிக்கப்படுகிறது. மக்கள் இவ்வாறு எடுக்கும் புகைப்படங்களில் தங்களுக்கு பிடித்தமானவற்றை ஓவியங்களாக மாற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பளிக்கிறது புனேவைச் சேர்ந்த போர்ட்ரெயிட்ஃப்ளிப் (PortraitFlip) என்கிற நிறுவனம்.
ஒருவர் தனிப்பட்ட முறையில் சந்தித்தப் பிரச்சனையின் காரணமாக உருவான ஒரு திட்டம் ஒரு ஸ்டார்ட் அப்’பாக வளர்ந்தது. கடந்த ஆண்டு இந்த நிறுவனத்தின் விற்றுமுதல் 1.2 கோடி ரூபாய்.
2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை, வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தங்குமறையில்தான் போர்ட்ரெயிட்ஃப்ளிப் திட்டம் உருவாகியுள்ளது. 25 வயதான லவ்தீவ் சாஹல் என்கிற மெக்கானிக்கல் பொறியாளர் தனது அறையில் உடன் தங்கியிருந்த 23 வயதான சன்னி சௌத்ரியிடம் உதவி கேட்டு சென்றதுதான் இந்த முயற்சியின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.
அவர் தனது காதலியின் புகைப்படத்தை ஓவியமாகப் பெற விரும்பினார். இந்த சேவையை வழங்கும் வலைதளத்தை கண்டுபிடிக்க உதவி கோரினார்.
”நாங்கள் இதுகுறித்து ஆய்வு செய்தபோது இந்தப் பிரிவில் ’பெயிண்ட் யுவர் லைஃப்’ என்கிற வலைதளத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பதையும் இந்தியாவில் டெலிவர் செய்வதற்கு அதிக செலவாகும் என்பதையும் தெரிந்துகொண்டோம்,” என்று சன்னி நினைவுகூர்ந்தார்.
இந்தப் பகுதியில் இடைவெளி இருப்பதை உணர்ந்த நண்பர்கள் இருவரும் ஹாஸ்டலில் உடன் தங்கியிருந்த 23 வயதான சுபான்ஷு மகேஸ்வரியிடம் ஸ்டார்ட் அப் திட்டம் குறித்து பகிர்ந்துகொண்டனர். சுபான்ஷு அப்போது மின் பொறியியல் படித்துக் கொண்டிருந்தார். சுபான்ஷு வலைதளம் உருவாக்கும் பணியை உடனே தொடங்கினார். மூவரும் வலைதளம் தொடங்க தங்களது சேமிப்பில் இருந்து 15,000 திரட்டினர். நண்பர்களிடம் இருந்து 8,000 ரூபாய் சேகரித்தனர்.
’PortraitFlip’ 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது. புகைப்படங்களைக் கொண்டு கைகளால் ஓவியம் தீட்டுவதற்கான சிறந்த மையம் என்று விளம்பரப்படுத்தியது.
”புகைப்படங்களை ஓவியமாக மாற்றுவதைக் குறிப்பதால் ’போர்ட்ரெயிட்ஃப்ளிப்’ என்கிற பெயரைத் தேர்வு செய்தோம்,” என்றார் சன்னி.
புகைப்படங்களில் இருந்து ஓவியங்களை உருவாக்க போர்ட்ரெயிட்ஃப்ளிப் ஸ்டுடியோக்களுடனும் தனிப்பட்ட ஓவியர்களுடனும் ஒன்றிணைந்து செயல்படுகிறது. தற்சமயம் இந்த ஸ்டார்ட் அப் இரண்டு ஸ்டுடியோக்களுடனும் 30 தனிப்பட்ட ஓவியர்களுடனும் இணைந்துள்ளது. இதில் முழுநேரமாக உள்ளடக்கம் எழுதுபவர் ஒருவரும் முழு நேர கிராஃபிக் டிசைனர் ஒருவரும் இரண்டு இண்டெர்ன்களும் உள்ளனர்.
”இந்தியாவில் உள்ள ஓவியர்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்தே வணிகம் புரிய நாங்கள் உதவுகிறோம். இவர்களது படைப்புகளை உலகின் பல்வேறு மூலைகளில் இருப்போரிடம் கொண்டு சேர்க்கும் பணியை நாங்கள் மேற்கொள்கிறோம்,” என்றார் சன்னி.
செயல்பாடுகள்
பயனர் போர்ட்ரெயிட்ஃப்ளிப் வலைதளத்தில் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ததும் அவருக்கு தேவைப்படும் ஓவியத்தின் அளவையும் வகையையும் தேர்வு செய்யவேண்டும். ஓவியங்களைப் பொறுத்தவரை ஆயில், சார்கோல், வாட்டர்கலர், பென்சில், கலர் பென்சில், அக்ரிலிக் என ஆறு வகைகள் உள்ளன. ஓவியம் ரோல் செய்யப்பட்டோ (rolled) மர சட்டகத்துடன் பாதுகாக்கப்பட்டோ (gallery wrapped) ஃப்ரேம் செய்யப்பட்டோ (framed) ஃபினிஷ் செய்யப்படும்.
”எங்களுக்கு ஆர்டர் கிடைத்ததும் எங்களது பார்ட்னர் ஸ்டுடியோ அல்லது ஓவியர்களைத் தொடர்புகொள்வோம்,” என்றார் சன்னி. ஓவியர் ஓவியத்தை வரைந்து முடித்த பிறகு இவர்களது குழுவினர் ஓவியத்தைப் படம்பிடித்து வாடிக்கையாளர்களின் ஒப்புதலுக்கு அனுப்புகின்றனர்.
”வாடிக்கையாளர்களுக்கு திருப்தியில்லை என்றாலோ ஏதேனும் மாற்றங்களை பரிந்துரைத்தாலோ அவற்றை செய்து முடித்து மீண்டும் ஒப்புதல் பெறுகிறோம். வாடிக்கையாளர்கள் முழுமையாக திருப்தியடைந்த பிறகே நாங்கள் ஃப்ரேம் செய்யும் பணியைத் தொடங்குகிறோம். அதன்பிறகு வாடிக்கையாளரின் வீட்டிற்கு ஓவியத்தை அனுப்பி வைக்கிறோம்,” என்றார் சன்னி.
இந்த ஸ்டார்ட் அப் ஆரம்பத்தில் தாமதமாக டெலிவரி செய்யப்படுதல் போன்ற சவால்களை சந்தித்தது. “தாமதமாக டெலிவர் செய்யப்படுவதையும் முறையற்ற தகவல் பரிமாற்றத்தையும் தவிர்க்க DHL, FedEx போன்ற துறையின் முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டோம்,” என்றார் சன்னி.
போர்ட்ரெயிட்ஃப்ளிப் பழைய கருப்பு வெள்ளை புகைப்படங்களை புதுப்பிக்கும் சேவையையும் வழங்குகிறது.
புகைப்படங்கள் கலைப்படைப்புகளாக மாற்றப்படுகிறது
போர்ட்ரெயிட்ஃப்ளிப் கிரிஸ்துமஸ், தீபாவளி, தந்தையர் தினம், அன்னையர் தினம் போன்ற நாட்களில் பெரும்பாலான ஆர்டர்களைப் பெறுகிறது. திருமணங்களுக்காகவும் செல்லப் பிராணி வளர்ப்போரிடமிருந்தும் அதிக ஆர்டர்கள் வருகிறது.
முகநூல் விளம்பரம் வாயிலாக முதல் வாடிக்கையாளரைப் பெற்ற இந்த ஸ்டார்ட் அப் இதுவரை 4,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவையளித்துள்ளது. கைகளால் தீட்டப்படும் இவர்களது ஓவியம் உலகம் முழுவதும் அனுப்பப்படுகிறது.
”எங்களது வாடிக்கையாளர்களில் எழுபது சதவீதம் பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். 15 சதவீதம் பேர் யூகே, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள்,” என்றார் சன்னி.
இவர்களது மற்ற ஆர்டர்கள் இந்தியாவில் இருந்து பெறப்படுகின்றன. இலவச டெலிவரி பிரிவின்கீழ் போர்ட்ரெயிட்ஃப்ளிப் 24 நாட்களுக்குள் ஓவியங்களை டெலிவர் செய்கிறது. எக்ஸ்பிரஸ் சேவைகளுக்கு டெலிவரி கட்டணம் வசூலிக்கிறது. இதில் 14 நாட்களில் டெலிவர் செய்யப்படும்.
”உலகின் அனைத்து பகுதிகளுக்கும் சேவையளிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்,” என்றார்.
ஓவியங்களின் அளவையும் வகையையும் பொறுத்து அவற்றிற்கு 1,900 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணத்திங்களின் மூலமாகவே வருவாய் ஈட்டப்படுகிறது.
”வருவாயைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே ஒவ்வொரு மாதமும் 30 சதவீதம் வளர்ச்சியடைந்து வருகிறோம்,” என்றார் சன்னி.
இந்த ஸ்டார்ட் அப்பின் கடந்த ஆண்டு விற்றுமுதல் 1.2 கோடி ரூபாய். இதில் பெரும்பாலான ஆர்டர் அமெரிக்காவில் இருந்தே பெறப்பட்டது. இந்த நிதியாண்டில் 4 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதை இந்நிறுவனம் இலக்காகக் கொண்டுள்ளது.
”லாபத்தொகை மீண்டும் வணிகத்தில் முதலீடு செய்யப்படுகிறது,” என்றார் சன்னி.
சந்தை மதிப்பீடு மற்றும் எதிர்காலத் திட்டம்
Visual arts industry in India: Painting the future என்கிற தலைப்பில் KPMG மற்றும் FICCI வெளியிட்ட அறிக்கையின்படி 2016-ம் ஆண்டில் உலகளவில் கலைத் துறையின் மொத்த விற்பனை அளவு 56.6 பில்லியன் டாலராக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
போர்ட்ரெயிட்ஃப்ளிப் Paint Your Life, My Da Vince போன்ற அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களுடன் போட்டியிடுகிறது. வாடிக்கையாளர்கள் எண்ணற்ற முறை திருத்தங்கள் செய்ய வாய்ப்பளிக்கப்படுவதே இந்நிறுவனத்தின் தனித்துவமான அம்சம் என நிறுவனர்கள் கருதுகின்றனர்.
“ஒவ்வொரு வாடிக்கையாளரும் 100 சதவீதம் திருப்தியடைவதை நாங்கள் உறுதிசெய்கிறோம்,” என்றார் சன்னி.
செல்லப் பிராணிகள் வளர்ப்போரிடமிருந்து 70 சதவீத ஆர்டர்களைப் பெறும் இந்த ஸ்டார்ட் அப் செல்லப்பிராணிகள் சந்தையை மேலும் ஆராய்வதில் ஆர்வம் காட்டி வருகிறது. அதுமட்டுமின்றி 2020-ம் ஆண்டின் முதல் காலாண்டில் நிதி உயர்த்தவும் போர்ட்ரெயிட்ஃப்ளிப் திட்டமிட்டுள்ளது,” என்றார் சன்னி.
ஆங்கில கட்டுரையாளர்: டெபோலினா பிஸ்வாஸ் | தமிழில்: ஸ்ரீவித்யா