சமூக வலைதளம் 'ஷேர்சாட்டை' வாங்கத் துடிக்கும் ட்விட்டர் - என்ன காரணம் தெரியுமா?
1.1 மில்லியன் அமெரிக்க டாலரை செலுத்த ட்விட்டர் முடிவு!
ட்விட்டர் நிறுவனம் உள்நாட்டு சமூக வலைதளமான ஷேர்சாட்டை வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ட்விட்டர் நிறுவனம் இந்திய சந்தையில் அதன் வர்த்தகத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. அதன் ஒருபடியாக உள்நாட்டு சமூகவலைங்களில் முக்கியமாகக் கருதப்படும் ஷேர்சாட்டை (ShareChat) வாங்க திட்டமிட்டுள்ளது.
ட்விட்டர், ஷேர் சாட்டை வாங்க மற்றொரு முக்கியமான காரணம், உலக அளவில் ஷார்ட் வீடியோ தளங்களில் சிறந்து விளங்கும் டிக்-டாக்கை மோஜ் வீடியோ தளம் மூலமாக வீழ்த்த வேண்டும் அல்லது அதற்கு இணையாக கொண்டுவரவேண்டும் என்பதே ட்விட்டரின் நோக்கம்.
அடிப்படை முதலீடுக்கான 900 மில்லியன் உள்பட 1.1 மில்லியன் அமெரிக்க டாலரை செலுத்த ட்விட்டர் முன்வந்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக ட்விட்டர் அல்லது ஷேர்காட் ஆகியவற்றிலிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை. இது தொடர்பாக எந்தவித ஒப்பந்தமும் முடிவாகவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஷேர்சாட்-க்கு சொந்தமான, ‘Moj' மோஜ் ஏற்கனவே 80 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டிருக்கிறது. மோஜ் மற்றும் பிற உள்நாட்டு குறுகிய வீடியோ தளங்களின் எழுச்சி 2020 ஜூன் மாதம் இந்தியாவில் டிக்டோக்கிற்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னணியாக பார்க்கப்படுகிறது.
இன்றுவரை சுமார் 260 மில்லியன் டாலர் திரட்டிய ஷேர்சாட், கூகிள் மற்றும் ஸ்னாப் உள்ளிட்ட பிற முதலீட்டாளர்களுடன் கூடுதல் நிதி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் டெக் க்ரஞ்ச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 160 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட ஷேர்சாட், குறிப்பாக பிராந்திய மொழி பயனர்களிடையே பிரபலமானது.
அண்மையில் ட்விட்டருக்கும் இந்திய அரசுக்கு சில ட்விட்டர் கணக்குகளை முடக்குவது தொடர்பாக விவாதம் எழுந்தது. இதனையடுத்து ட்விட்டருக்கு இணையாக koo என்ற உள்நாட்டு செயலி பிரபலமடையத் தொடங்கியது. இந்த சூழலில் தான் உள்நாட்டு செயலியான ஷேர்சாட்டை வாங்க துடிக்கிறது ட்விட்டர் நிறுவனம். மேலும் ட்விட்டரின் இந்த முடிவு தற்போது வேகமெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த மாத தொடக்கத்தில் குறைந்தது 90-95% கணக்குகளை ட்விட்டர் நிறுத்தி வைத்ததால் இந்திய அரசுக்கும் - ட்விட்டருக்குமான இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தகவல் உதவி: தி நியூஸ் மினிட்