இயற்கை விவசாயத்தில் கோடிகளில் வருவாய்; 9000 விவசாயிகள் லாபம் ஈட்ட உதவிடும் சகோதரர்கள்!
புனேவைச் சேர்ந்த சகோதரர்களான சத்யஜித் ஹங்கே, அஜின்கியா ஹங்கே வங்கிப் பணியை விட்டு விலகி ஆர்கானிக் விவசாயத்தைத் தொடங்கியதுடன் அதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வையும் விவசாயிகளிடையே ஏற்படுத்தி வருகின்றனர்.
புனே நகருக்கு அருகில் அமைந்துள்ளது போதனி கிராமம். இங்கு மண் வளம் நிறைந்த ஒரு பசுமையான இயற்கை நிலம் உள்ளது. இந்த நிலத்தை சகோதரர்கள் இருவர் பராமரித்து வருகின்றனர். இவர்களது ஆண்டு விற்றுமுதல் 12 கோடி ரூபாய்.
சகோதரர்களான 39 வயது சத்யஜித் ஹங்கே, 36 வயது அஜின்கியா ஹங்கே இருவரும் வங்கியில் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் 2014ம் ஆண்டு இயற்கை விவசாயத்தில் ஈடுபட தங்கள் பணியை விட்டு விலகினார்கள். Two Brothers Organic Farm (TBOF) என்கிற பிராண்டைத் தொடங்கினார்கள். இந்தச் சகோதரர்கள் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இருப்பினும் இவர்கள் சிறு வயது முதலே விவசாயத்தில் ஆர்வம் காட்டவில்லை.
இவர்கள் தங்களது மழலையர் படிப்பு முதல் பட்டப்படிப்பு வரை புனேவில் முடித்தனர். அங்கேயே சில ஆண்டுகள் பணிபுரிந்தனர். இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் ஏழு முதல் எட்டு ஆண்டுகள் வரை இருந்தனர். அதன் பிறகே இவர்களுக்கு விவசாயத்தில் ஆர்வம் ஏற்படத் தொடங்கியது.
“எங்கள் சிறு வயதில் விவசாயம் லாபகரமான தொழில் அல்ல. எங்கள் கிராமத்திற்கு வெளியேதான் படித்தோம். விடுமுறை நாட்களில் எங்கள் நிலத்திற்கு சென்று பார்வையிடுவோம். இதுவே விவசாயத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தியது,” என்று சத்யஜித் சோஷியல்ஸ்டோரி இடம் தெரிவிக்கிறார்.
“விவசாயம் எங்களுக்கு அதிக மகிழ்ச்சியளித்தது. விவசாயத்தின் மீதுள்ள ஆர்வத்தால் நாங்கள் வங்கிப் பணியை விட்டு விலகி விவசாயத்தில் ஈடுபட்டோம்,” என்றார்.
விவசாயத்தின் மீது ஆர்வம்
நிலங்களில் விளைச்சல் மிகவும் குறைவாகவே இருப்பதாக விவசாயத்தில் ஈடுபட்டவர்களிடமிருந்து இந்த சகோதரர்கள் தெரிந்துகொண்டனர்.
“நாங்கள் எங்கள் முயற்சியைத் தொடங்குவதற்கு முன்பு, மண் வளம் குறைவாக இருப்பதாலேயே பெரும்பாலான நிலங்களில் விளைச்சல் குறைவாக இருக்கிறது என்பதை உணர்ந்தோம். அத்துடன் தண்ணீர் பற்றாக்குறையும் தொழிலாளர்கள் கிடைப்பதும் பிரச்சனையாக இருந்தது,” என்று சத்யஜித் விவரித்தார்.
“நாங்கள் இயற்கை விவசாயம் குறித்து அறிந்திருந்தோம். ஆனால் பலர் அதை பின்பற்றவில்லை. இந்தியா முழுவதும் வழக்கமான முறையில் அல்லாமல் புதிய விவசாய முறைகளைப் பின்பற்றும் விவசாயிகளை சந்திக்கத் தொடங்கினோம்,” என்றார்.
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இயற்கை விவசாய நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. ஆனால் பொருளாதார ரீதியாக லாபகரமாக இருக்கவில்லை.
“நிலங்களில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிந்ததும் நாங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டோம். எங்கள் செடிகளுக்கு உரமாக மாட்டு சாணத்தைப் பயன்படுத்தினோம்,” என்றார் சத்யஜித்.
மண்ணுக்கு அனைத்து வகையான ஊட்டசத்துக்களும் கிடைப்பதை பாரம்பரிய உரமான மாட்டு சானம் உறுதிசெய்கிறது. மண் வளம் அதிகரிக்க ஆர்கானிக் கழிவுகள் பயன்படுத்துகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து ஒரே பயிர் வகையை விளைவிப்பதால் ஒரு குறிப்பிட்ட ஊட்டச்சத்து குறையும். வெவ்வேறு பயிர்களை வளர்ப்பதால் மண் வளம், மண் துகள்களின் அளவு, நீர் தக்கவைக்கும் திறன் போன்றவை மேம்படுகிறது.
“பல வகையான பயிர்களை பயிரிட்டு சோதனை செய்யத் தொடங்கினோம். பல்வேறு பழங்கள், காய்கறிகள், மருத்துவ குணம் கொண்ட 25 முதல் 30 வகையான செடிகள் போன்றவற்றை எங்கள் நிலத்தில் பயிரிட்டோம்,” என்றார் சத்யஜித்.
சந்தை தேவை
ஆரம்பத்தில் பப்பாளியை பயிரிட்டு சோதனை செய்தனர். இதன் வெளித்தோற்றம் கண்கவர் வகையில் இல்லை என்றாலும் அதிக சுவையுடன் இருந்தது. ஆனால் சந்தையில் பழங்களின் வெளித்தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் இவர்களது விலையை சந்தையில் ஏற்கவில்லை.
“TBOF என்கிற எங்கள் பிராண்டை உருவாக்கத் தொடங்கினோம். விளைச்சலை மால்களுக்கும் சந்தைகளுக்கும் கொண்டு சேர்த்தோம். தற்போது ஆன்லைனிலும் செயல்படத் தொடங்கியுள்ளோம்,” என்கிறார் சத்யஜித்.
நான்காண்டுகள் பல கட்டமாக ஆய்வு மேற்கொண்டனர். அதன் பிறகு உள்நாட்டு விதைகளைப் பயிரிட்டனர். சொந்த உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்தினார்கள். இதனால் விவசாய செலவு வெகுவாகக் குறைந்தது.
“எங்கள் விளைச்சல் தரம் மிகுந்ததாக இருந்தது. உள்ளூர் சந்தை விலையைக் காட்டிலும் மூன்று முதல் நான்கு மடங்கு அதிக விலை கிடைத்தது. பல்வேறு முயற்சிகள் மூலம் இயற்கையான விளைச்சல்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். உள்ளூர் விவசாயிகளுக்கும் எங்கள் முயற்சியைக் கண்டு ஊக்கம் பிறந்தது,” என்றார் சத்யஜித்.
மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்
TBOF படிப்படியாக பலரைச் சென்றடைந்தது. இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் மட்டுமின்றி 14 நாடுகளைச் சேர்ந்த விவசாயிகளும் இதன் விவசாய நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்கத் தொடங்கினார்கள். இவர்களது விவசாய நடைமுறைகள் குறித்து தெரிந்துகொள்ள மகாராஷ்டிரா அரசாங்கம் மற்ற விவசாயிகளை இவர்களிடம் அனுப்பி வைத்தது.
கடந்த ஆறு முதல் ஏழாண்டுகளில் சத்யஜித், அஜின்கியா இருவரும் 9,000-க்கும் அதிகமான விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தில் பயிற்சியளித்துள்ளனர். அவர்களது நிலத்தையும் பார்வையிட்டு விளைச்சலை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை பரிந்துரைத்தனர்.
மேலும் இந்தச் சகோதரர்கள் தங்கள் கிராமத்தைச் சுற்றியுள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து இயற்கை விவசாயத்தில் ஈடுபட ஊக்குவித்தனர். அவர்களது விளைச்சலை சந்தைப்படுத்துவதிலும் உதவுகின்றனர்.
“எங்களிடம் பயிற்சி எடுத்துக்கொண்ட விவசாயிகளின் விளைச்சலை நாங்கள் பரிசோதனை செய்கிறோம். இதற்கு வெளியில் கிடைக்கும் விலையைக் காட்டிலும் 35 முதல் 50 சதவீதம் அதிக விலையை நாங்கள் கொடுக்கிறோம்,” என்றார்.
OrganicWe என்கிற லாப நோக்கமற்ற அமைப்பு இயற்கை விவசாயிகள் தங்கள் விளைச்சலை விற்பனை செய்ய உதவும் தளமாக விளங்குகிறது. இதுபோன்ற அமைப்புகளுக்கு TBOF ஆதரவளிக்கிறது. OrganicWe உடன் இணைந்து இவர்கள் ‘Project 100 Organic Farmers’ என்கிற முயற்சியைத் தொடங்கினார்கள். விவசாயிகள் நிலையான விவசாய நடைமுறைகளைப் பின்பற்றி நிலையான வருவாய் பெற உதவுவதே இந்த முயற்சியின் நோக்கம்.
விவசாயிகள் பலரை ஒருங்கிணைத்து இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் நன்மைகளையும் எடுத்துரைத்தனர் இந்தச் சகோதரர்கள்.
நிதி மற்றும் விற்றுமுதல்
“ஆரம்பத்தில் எங்கள ஆர்கானிக் பழங்களை தள்ளுவண்டியில் எடுத்துச் சென்று விற்பனை செய்தோம். இயற்கையான முறையில் கிடைக்கும் விளைச்சலின் நன்மைகள் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்தோம். இந்த காலகட்டத்தில் எங்கள் வாடிக்கையாளர்கள் அதிகரித்தனர். இந்தியா தவிர 34-க்கும் அதிகமான நாடுகளில் 664 நகரங்களில் 45,000-க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு எங்கள் விளைச்சல்களை வழங்கியுள்ளோம்,” என்றார் சத்யஜித்.
இவர்களது விற்பனையில் இடைத்தரகர்கள் தலையீடு இருப்பதில்லை. அனைத்தும் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது. ஆர்டர் கொடுக்கப்பட்ட நான்கு முதல் ஐந்து நாட்களுக்குள் விநியோகிக்கப்படுகிறது.
“2016-ம் ஆண்டு ஆண்டு விற்றுமுதல் 2 லட்ச ரூபாயாக இருந்தது. தற்போது சராசரியாக 12 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நீண்ட பயணத்தைக் கடந்து இந்த நிலையை எட்டியுள்ளோம்,” என்கிறார் அஜின்கியா.
கெடாமல் அதிக நாட்கள் நீடித்திருக்கும் பொருட்களுக்கே இவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். பாரம்பரியமான, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நெய், வெல்லம், முருங்கை பொடி போன்றவற்றில் கவனம் செலுத்துகின்றனர். அதுமட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய தனித்துவமான பொடியை ஊட்டச்சத்து நிபுணர் லூக் கோடின்ஹோ உதவியுடன் தயாரித்து அறிமுகப்படுத்தியுள்ளனர்.
“வேர்கடலை வெண்ணெய், கடலை எண்ணெய், பாரம்பரிய கோதுமை மாவு, சோளம் வகைகள், ஊட்டச்சத்து மிக்க அரிசி உள்ளிட்ட 24 தயாரிப்புகளை வழங்குகிறோம்,” என்றார் அஜின்கியா.
வருங்காலத் திட்டம்
சமீபத்தில் TBOF குழு 3.6 கோடி ரூபாய் மதிப்புடைய பங்குகளை மாடு மேய்ப்பவர்கள் முதல் ஓட்டுநர்கள் வரை அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து இவர்களது சங்கிலியில் இணைந்துள்ள அனைவரும் தற்போது பங்குதாரர்களாக உள்ளனர்.
“விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டுகின்றனர். இன்று சுயாதீனமாக விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். விவசாயிகளின் வளர்ச்சிக்கும் பல்வேறு பயிர்களை அறுவடை செய்யவும் உதவும் வகையில் பயிற்சி மையம் ஒன்றைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.
மழை, ஒளிர்திறன், காற்று போன்ற காரணிகள் குறித்து விவசாயிகள் தெரிந்துகொள்ள உதவும் வகையில் தொழில்நுட்பத் தீர்வை உருவாக்குவதில் இந்தச் சகோதரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
”இயற்கை விவசாயம் மூலம் உள்ளூர் சமூகம் வளர்ச்சியடையவும் பல வகையான உள்நாட்டு பயிர்கள் ஊக்குவிக்கப்படவும் உதவுகிறோம். உள்ளூர் விவசாயிகளுக்கு சக்தியளிப்பதும் உலகம் முழுவதும் இந்த நடைமுறையைக் கொண்டு சேர்ப்பதுமே எங்கள் நோக்கம்,” என்றார் சத்யஜித்.
ஆங்கில கட்டுரையாளர்: அஞ்சு அன் மேத்யூ | தமிழில்: ஸ்ரீவித்யா