ஜூன் 21, 28 ‘முழு ஊரடங்கு’ - தளர்வுகள் கிடையாது...
ஜூன் 21 முதல் ஜூன் 28 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தில் எந்தவித தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும்.
சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோய் பரவலை கருத்தில்கொண்டு, இன்று மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொதுச் சுகாதார வல்லுனர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையிலும், அமைச்சரவைக் கூட்டத்தின் ஆலோசனை அடிப்படையிலும், பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 கீழ்,
ஜூன் 19 அதிகாலை 12 மணி முதல் ஜூன் 30 இரவு 12 மணி வரை 12 நாட்களுக்கு, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தில் மட்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வந்துள்ளது.
அதைத்தவிர, இந்த நான்கு மாவட்டங்களில் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகள் முழு ஊரடங்கு பின்பற்றப்படும் என அறிவிப்பும் வந்துள்ளது.
ஜூன் 21 மற்றும் ஜூன் 28 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கண்ட எந்த வித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். அதாவது 20 ஜூன் அன்று நள்ளிரவு 12 மணி முதல் 22 ஜூன் காலை 6 மணி வரையிலும், அதேபோன்று 27 ஜூன் அன்று நள்ளிரவு 12 மணி முதல் 29 ஜூன் காலை 6 மணி வரை எந்தவித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்படும், என அரசு தெரிவித்துள்ளது.
இவ்விரு நாட்களிலும் பால் வினியோகம், மருத்துவமனைகள், மருந்து கடைகள், மருத்துவமனை ஊர்திகள் மற்றும் அமரர் ஊர்திகள் தவிர வேறு எந்தவித செயல்பாடுகளும் அனுமதி கிடையாது அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படுகிறது.
கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்த விதமான செயல்பாடுகளும் அனுமதிக்கப்படமாட்டாது. முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் காலத்தில் இது மிகவும் தீவிரமாக கண்காணிக்கப்படும். கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்யும். இந்தப் பகுதிகளில் ஒரு நாளைக்கு இருமுறை கிருமி நாசினி தெளிக்கப்படும்.
முழு ஊரடங்கின் கட்டுப்பாடுகள் என்ன?
- 104 (கட்டுப்பாட்டு அறை) மற்றும் 108 (அவசர கால ஊர்தி) ஆகிய சேவைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும்.
- அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் மற்றும் ஆபத்துக்கால மருத்துவ உதவி ஆகியவற்றை சிறப்புக் கட்டுப்பாட்டு அறைகள் மூலம் ஒருங்கிணைக்கப்படும்
ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு,
- பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளிலும்,
- திருவள்ளூர் மாவட்டத்தில் பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்,
- செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும், மற்றும் காட்டாங்களத்தூர் ஊராட்சி ஒன்றியப் பக்திகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்,
- காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில்,
வசிக்கும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். அதே போன்று மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு மற்றும் பல்வேறு துறையில் உள்ள பிற உறுப்பினர்களுக்கும் 1000 ரூபாய் நிவாரணமாக அரசு வழங்கும்.
அரசு ஊரடங்கு அமல் படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் மக்களின் ஒத்துழைப்பு இல்லை என்றால் இந்த நோய் பரவலை தடுக்க இயலாது. பொதுமக்கள் வெளியில் செல்லும் போது பொது இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கைகளை கழுவுவது, வெளியிடங்களில் முகக்கவசத்தை அணிந்து செல்வதும், சமூக இடைவெளியை தவறாமல் கடைப்பிடிப்பதும் அவசியம். தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு தரக் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.