போக்குவரத்து சிக்கல்களுக்கு தொழில் நுட்பம் மூலம் தீர்வு காணும் உபெர் மணிகண்டன் தங்கரத்னம்!
யுவர் ஸ்டோரியுடனான உரையாடலில், மணிகண்டன் தங்கர்தனம், உபெர் நிறுவனத்தில் இணைந்தது மற்றும் நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் பற்றிய கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார்.
கொரோனா தொற்று போக்குவரத்து துறையை பெரிதும் பாதித்துள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக, ஆட்டோமொபைல் துறை, இந்த ஆண்டு 7.5 மில்லியன் வாகனங்கள் குறைவாக உற்பத்தி செய்ய இருப்பதாக மெக்கின்சி நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது.
இதன் காரணமாக, வேலையிழப்பு, ஊதிய குறைப்பு போன்றவை ஏற்பட்டிருந்தாலும், இந்த துறை மணிகண்டன் தங்கரத்னம் போன்ற வர்த்தக தலைவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அமேசான் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களில் 20 ஆண்டுக்கும் மேலான அனுபவம் உள்ள மணிகண்டன், உபெர் நிறுவனத்தில், பெங்களூருவில் அதன் ரைடர் மற்றும் பொறியியல் மேடைக்கு மூத்த இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார்.
அமேசான் நிறுவனத்தில் பணியில் இருந்த போது, அதன் சென்னை அலுவலகம் மற்றும் பொறியாளர் குழுவை உருவாக்குவதில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். தற்போது, உபெர் இந்தியாவில் 85 பொறியாளர்களை பணிக்கு அமர்த்த உள்ளது. ஏற்கனவே 140 பணியாளர்கள் நியமனத்தை அறிவித்திருந்தது.
யுவர்ஸ்டோரி உடனான உரையாடலில், மணிகண்டன், 13 ஆண்டுகளுக்குப்பிறகு அமேசானில் இருந்து உபெர் நிறுவனத்திற்கு மாறியது பற்றியும், சமூக இடைவெளிக்கு மத்தியில் தொழில்நுட்பம் தீர்வு காணக்கூடிய பிரச்சனைகள் மற்றும் உபெர் நிறுவன எதிர்கால திட்டங்கள் குறித்து பேசினார்.
நேர்காணலில் இருந்து:
யுவர்ஸ்டோரி: அமேசானில் இருந்து உபெருக்கான மாற்றம் பற்றி கூறுங்கள். ஏன் இப்போது உபெரை தேர்வு செய்தீர்கள்? நீங்கள் தீர்க்க விரும்பும் பிரச்சனை என்ன?
மணிகண்டன் : பல்வேறு துறைகள் மற்றும் தொழில்களின் தொழில்நுட்பம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த பத்தாண்டுகளில், இசை, இ-காமர்ஸ், ஸ்மார்ட்போன், ஸ்டிரீமிங் உள்ளிட்ட துறைகளில் டிஜிட்டல் தொழில்நுட்பம் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் தான் போக்குவரத்து துறையில் தொழில்நுட்பத்தின் தாக்கத்தை காண்கிறோம். இந்தத் துறையில் தொழில்நுட்ப மாற்றம் இப்போது தான் துவங்கியுள்ளது என நினைக்கிறேன்.
இந்த துறையில் தொழில்நுட்ப புதுமையாக்கத்தில் உபெர் முன்னணியில் உள்ளது. இந்த பயணத்தில் நானும் பங்கு பெற விரும்புகிறேன். இதில் மகத்தான வாய்ப்பு உள்ளது. மக்கள் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வரும் விஷயங்களில் பணியாற்ற விரும்புகிறேன்.
யுவர்ஸ்டோரி: இந்தியாவில் உங்கள் தொழில்நுட்ப திட்டம் என்ன? இந்தியாவில் உபெர் தொழில்நுட்பத்தில் என்ன மாற்றத்தை கொண்டு வர உள்ளீர்கள்?
மணி: உபெரில், ரைடர், நிதிநுட்பம், உபெர்4பிஸ்னஸ், வரைபடங்கள், சந்தை, ஐடி பொறியியல், உள்கட்டமை, பரிவர்த்தனை, தரவுகள் என எல்லாவற்றுக்கும் தனித்தனியே குழுக்கள் உள்ளன.
இந்த ஒவ்வொரு பிரிவிலும் வளர்ச்சி வாய்ப்புள்ள சேவைகளை வழங்கி வருகிறோம். போக்குவரத்து துறையில் மாற்றத்தை கொண்டு வரும் நோக்கத்துடன் புதுமைகளை புகுத்தி வருகிறோம். இந்த புதுமைகளை நிறைவேற்ற சிறந்த திறமையாளர்களை பெற்றுள்ளோம்.
யுவர்ஸ்டோரி: கொரோனா தொற்றுக்கு மத்தியில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளிக்கான தேவை மத்தியில் தொழில்நுட்பம் எப்படி தீர்வுகள் அளிக்கும் என நினைக்கிறீர்கள்?
மணி: கொரோனா தோற்று காரணமாக போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஈடு கொடுக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம். போக்குவரத்துத் துறையில் எங்களது தொழில்நுட்பத்தை கொண்டு, டெலிவரி பிரிவில் சேவைகளை வழங்கி வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தியுள்ளோம்.
தொற்று புதுமையாக்கத்திற்கான புதிய வழிகளை திறந்துள்ளது. இதன் பயன்பாடுகள் புதிதாக, தனித்தன்மை மிக்கதாக உள்ளன. செயலியின் முகக்கவச சோதனை, டிரைவர்களுக்கு உதவ மெய்நிகர் பச்சை அரங்குகள், கொரோனா பகுதிகளை விளக்கும் வரைபடம் ஆகிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்த சவால்களை தொழில்நுட்பம் கொண்டு தீர்ப்பதில் உபெர் முனைப்புடன் செயல்படும்.
யுவர்ஸ்டோரி: தொழில்நுப்ட மையம் உருவாக்க உள்ள வேலைவாய்ப்புகள் பற்றி?
மணி: ஏற்கனவே அறிவித்தது போல, இந்தியாவில் 225 இடங்களை உருவாக்கி, நியமனம் செய்து வருகிறோம். போக்குவரத்து மற்றும் டெலிவரி ஆகிய துறைகளில் எங்களுடன் சேர்ந்து, புதுமையாக்கத்தில் ஈடுபட்டு மாற்றத்தை ஏற்படுத்தகூடியவர்களை நாடி வருகிறோம். இந்தியா முதன்மையான தொழில்நுட்ப மையமாக திகழ்கிறது. உலகிற்கு புதுமை படைக்கும் குழுக்களை இங்கு உருவாக்குகிறோம்.
யுவர்ஸ்டோரி: உபெர் இந்தியாவில் இருந்து உலகிற்கு பல சேவைகளை உருவாக்கியுள்ளது. இந்த ஆண்டுக்கான திட்டம் என்ன? இந்தியாவுக்கான குறிப்பிட்ட பிரச்சனைகளை எப்படி தீர்க்க உள்ளீர்கள்?
மணி: ரியல்டைம் புதுமையாக்கம் மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்திற்காக உபெர் அறியப்படுகிறது. பல்வேறு சுவாரஸ்யமான பிரச்சனைகளுக்கான தீர்வுகளை உருவாக்கி வருகிறோம். இவை சந்தியின் தேவைக்கேற்ப அறிமுகமாகும். இந்தியா உபெருக்கு முக்கியமாக இருக்கிறது. இந்திய வாடிக்கையாளர்களுக்காக தொடர்ந்து புதுமை செய்வோம்.
நாடுகளின் வேறுபட்ட தேவைகளுக்கான தீர்வுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறோம். கொரோனா காலத்தில் இந்தியா பொதுமுடக்கத்தை அமல் செய்த போது, அத்தியாவசியப் பொருட்கள் டெலிவரிக்கு உதவ எங்கள் குழு இரவு பகலாக செயல்பட்டது. உபெர் மெடிக் போன்ற சேவைகளை அறிமுகம் செய்தோம். உபெர் எசன்ஷியல்ஸ் மருத்துவப் பணியாளர்களுக்கு சேவை வழங்கியது.
யுவர்ஸ்டோரி : உபெர் எதிர்கால திட்டம் என்ன?
மணி: போக்குவரத்து மற்றும் டெலிவரி பிரிவுகளில் உபெர் பெரிய மற்றும் அன்றாட வாழ்க்கை பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்கிறது. இந்த நோக்கத்தில் நானும் பங்கேற்க விரும்புகிறேன். சரியான திறமையாளர்களை நியமிப்பது மற்றும் சரியான நிறுவன கலாச்சாரம் மூலம் இதை அடையலாம் என நம்புகிறேன்.
உபெர் பெரிய நோக்கத்தை நிறைவேற்றும் பாதையில் அவர்களும் வெற்றியை உணரும் வகையில், ஒவ்வொரு பொறியாளருடனும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறேன்.
ஆங்கிலத்தில்: சிந்து காஷ்யப் | தமிழில்: சைபர்சிம்மன்