கிராமியக் கலைகளை மீட்டெடுக்கும் கோவை கலையரசனுக்கு ‘குளோபல் காம்பேக்ட் விருது’
கிராமிய புதல்வன் அகாடமி நடத்தி வரும் கோவை கலையரசனுக்கு இந்தியாவில் முதல் முறையாக ஐ.நா. சார்பாக குளோபல் காம்பேக்ட் விருது வழங்கப்பட்டுள்ளது.
ஐ.நா. சபையின் 75-வது பவள விழாவையொட்டி கோவையைச் சேர்ந்த கலையரசன் என்ற கிராமையக் கலைஞருக்கு, அவரது சேவையை பாராட்டும் விதமாக ‘குளோபல் காம்பேக்ட் விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராமியக் கலைகள் என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல. அது கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது. கிராமியக் கலைகள் மூலமாகவே ஒரு நாட்டின் பண்பாட்டை புரிந்துகொள்ள முடியும். ஆனால் இத்தகைய கிராமியக் கலைகள் மெல்ல அழிந்து வருகின்றன. வெகு சிலரே பாரம்பரியமான கிராமியக் கலைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கலையரசன். இவர் கோவையின் சேரன்மாநகர் பகுதியில் 'கிராமிய புதல்வன் அகாடமி’ நடத்தி வருகிறார். இந்த அகாடமியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பறையிசை, கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்கால் குதிரை, கம்பாட்டம், கோலாட்டம், காவடி ஆட்டம் போன்ற பல்வேறு கிராமியக் கலைகளை கற்றுக்கொடுக்கிறார். இந்தச் சேவையை இவர் இலவசமாக செய்து வருகிறார்.
நம் பாரம்பரியத்தை போற்றும் வகையில் இந்தியாவில் மட்டுமின்றி வெளி நாடுகளுக்கும் பயணித்து கிராமியக் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
கிராமியக் கலையில் இவருக்குள்ள ஈடுபாட்டையும் பங்களிப்பையும் கௌரவிக்கும் விதமாக கலைச்சேவகர், கிராமிய புதல்வன், கலைகளின் அரசன் என பல பட்டங்களும் விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது ஐ.நா. சபையின் 75-வது பவள விழாவையொட்டி கலையரசனின் கிராமியக் கலை சேவையை பாராட்டும் விதமாக ‘குளோபல் காம்பேக்ட் விருது' வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக கலையரசனுக்கு இந்த கிராமிய விருது வழங்கப்பட்டுள்ளது.
இளம் சமூகத்தினருக்கு கிராமியக் கலைகளின் பெருமைகள் தெரிவதில்லை. இவற்றை நாம் மறந்து வருகிறோம். ஒவ்வொருவரும் இந்தக் கலைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே இவரது விருப்பம்.
இதற்காக ஆரம்பக் கல்வி முதல் பட்டப்படிப்பு வரை கிராமியக் கலைகள் தொடர்பான பாடதிட்டங்களை உருவாக்கி இணைக்கவேண்டும் என்பதே இவரது கோரிக்கையாக உள்ளது.
தகவல் உதவி: கோவைமெயில், படங்கள்: விகடன்