ஜூன் 8 முதல் மால்கள் திறப்பு: பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்ன?
மத்திய அரசு அறிவித்திருந்த ‘அன்லாக் 1’ ஊரடங்கு தளர்வுகளின்படி, வரும் 8ஆம் தேதி முதல் கோயில்கள், மால்கள் மற்றும் ஹோட்டல்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மத்திய அரசு அறிவித்திருந்த ‘அன்லாக் 1’ ஊரடங்கு தளர்வுகளின்படி, வரும் 8ஆம் தேதி முதல் கோயில்கள், மால்கள் மற்றும் ஹோட்டல்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மால்களில் உள்ள உணவகங்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்கலாம் என்று அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஹோட்டல்களும், ரெஸ்டாரெண்டுகளும் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
மத்திய அரசு அறிவித்திருக்கும் இந்த தளர்வுகளை நடைமுறைப்படுத்துவது பற்றி மாநில அரசுகள் அவரவரின் மாநில நிலைக்கு ஏற்ப அமல்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ள ஊர்களில், ஷாப்பிங் மால்களைத் திறக்க, பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாராத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மால்கள் கடைப்பிடிக்கவேண்டிய நெறிமுறைகள்:
- மால்கள் நுழைவு வாயில்களில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
- தொற்று அறிகுறிகள் இல்லாதவர்களுக்கு மட்டுமே அனுமதி.
- சானிடைசர்கள்/ சோப்பு கொண்டு கைக்களை அவ்வப்போது சுத்தப்படுத்த வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- குறைந்தது 6 அடி தூரம் சமூக இடைவெளி மேற்கொண்டு மக்கள் நடக்கவேண்டும். அதை மால் ஊழியர்கள் கண்காணிக்கவேண்டும்.
- மால்களில் பணிபுரியும் ஊழியர்கள், கடைகளுக்குள் பணிபுரியும் ஊழியர்கள், மாலுக்குள் நுழையும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.
- தும்மல்/இருமல் வந்தால் கைககளால், தோள்பட்டையால் முகத்தை மூடிக் கொள்ளவேண்டும்.
- ஆரோக்ய சேது செயலியை பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.
- மால்களுக்குள் எச்சில் துப்புவது தடை செய்யப்பட்டுள்ளது.
- மால்களுக்குள் உள்ள கடைகளுக்கு வரும் சரக்குகள் கையாள்வதில் அதிக கவனம் தேவை, கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்துதல் வேண்டும்.
- லிப்ட்களில் குறைந்த நபர்கள் செல்வதை உறுதிபடுத்தவேண்டும்.
- கடைகளுக்குள் குறைவான வாடிக்கையாளர்கள், தகுந்த சமூக இடைவெளி மேற்கொண்டு இருப்பது உறுதி செய்யவேண்டும்.
- மால்களுக்குள் ஏசி குறிப்பிட்ட அளவில் வைத்திருக்கவேண்டும்.
- ஊழியர்கள் பயன்படுத்தும் மாஸ்க், கையுறை ஆகியவை சரியானபடி அப்புறப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும்.
- கழிவறைகள் அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படவேண்டும்.
- மால்களுக்குள் கூட்டம் கூடும் இடங்களுக்குத் தடை நீடிக்கிறது. சினிமா தியேட்டர்கள், குழந்தைகள் ப்ளே ஏரியா, கேமிங் பகுதிகள் செயல்பட முடியாது.
- மால்களில் உள்ள ஃபுட் கோர்ட்களில் தகுந்த சமூக இடைவெளியுடன் 50% மக்களுடன் செயல்பட மட்டுமே அனுமதி.
- கோவிட்-19 தொடர்பான பதாகைகள், போஸ்டர்கள் மற்றும் காணொளிகளை மால்களை ஆங்காங்கே வெளிப்படுத்தவேண்டும்.