‘திருமணமாகாத பெண்களுக்கு கருவை கலைக்கும் உரிமை உண்டு’ - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு முழு விவரம்!
திருமணமான அல்லது திருமணமாகாத அனைத்துப் பெண்களுக்கும் கர்ப்பமாகி 24 வாரங்கள் வரை பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வ கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு என பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.
திருமணமான அல்லது திருமணமாகாத அனைத்துப் பெண்களுக்கும் கர்ப்பமாகி 24 வாரங்கள் வரை பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வ கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு என பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.
கருக்கலைக்க பெண்களுக்கும் உரிமை உண்டு:
ஒரு பெண்ணின் திருமண நிலையை தேவையற்ற கர்ப்பத்தை கலைக்கும் உரிமையை பறிக்க முடியாது. கர்ப்பத்தின் 24 வாரங்கள் வரை மருத்துவக் கருவுறுதல் சட்டம் மற்றும் விதிகளின்படி திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்கள் அனைவருமே கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு என்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.
கருக்கலைப்பு சட்டங்களின் கீழ் திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்களுக்கு இடையே வேறுபாடு காட்டுவது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பதை சுட்டிக்காட்டியுள்ள, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஜே.பி. பர்திவாலா மற்றும் ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு அனைத்து பெண்களும் பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வமான கருக்கலைப்பு செய்ய உரிமை உள்ளது என தீர்ப்பளித்துள்ளது.
ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை என்ற காரணத்தைக் கூறி அந்த பெண்ணின் கருக்கலைப்பு உரிமையை பறிக்க முடியாது, திருமணம் ஆகாத பெண்கள் கூட 24 வாரங்களுக்குள் தேவையற்ற கர்ப்பத்தை கலைக்க உரிமை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
1971 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மருத்துவ கருக்கலைப்பு (எம்டிபி) சட்டமானது திருமணமான பெண்களைப் பற்றியது என்றாலும், 2022ம் ஆண்டிலும் காரணங்களை பற்றி ஆராயமல் திருமணமானவர் மற்றும் திருமணமாகாதவர் என்று வேறுபடுத்துவது தேவையற்றது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
திருமணத்தால் விருப்பமில்லாத கர்ப்பம்:
சம்மதம் இல்லாமல் உடலுறவு கொள்வதும், துணையின் சம்மதம் இல்லாமல் கட்டாயப்படுத்துவதும் பாலியல் வன்கொடுமை எனத் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம்,
"கணவரின் சம்மதமற்ற செயலால் ஒரு பெண் கர்ப்பமாகலாம். பாலினம் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை அனைத்து வடிவங்களிலும் குடும்பங்களில் இடம் பெற்றுள்ளது," எனக்கூறியுள்ளது.
திருமண பந்தம் மூலமாக பெண்ணின் சம்மதம் இல்லாமல் கணவன் மூலமாக பெண்கள் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யபடுவது, “திருமண பாலியல் வன்கொடுமை” என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், மருத்துவ கருக்கலைப்பு சட்டமானது,
“கட்டாய கர்ப்பத்திலிருந்து பெண்ணைக் காப்பாற்ற முக்கியமானது, என்றும், பெண்ணின் சம்மதம் இல்லாமல் ஏற்பட்டதாகக் கூறப்படும் எந்தவொரு கர்ப்பமும் பாலியல் வன்கொடுமையே," என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
என் உடல் என்னுரிமை - நீதிபதிகள் கருத்து:
“என் உடல் என் உரிமை” என்ற போராட்டம் பல்வேறு நாடுகளில் பிரபலமானது. பெண்கள் தங்கள் மீது சுமத்தப்படும் பல்வேறு தடைகளுக்கு எதிராக இந்த போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், பெண்களுக்கு உடல் சார்ந்த முடிவுகள் மற்றும் இனப்பெருக்க உரிமைகள் மீது சுயமாக முடிவெடுக்கும் அதிகாரம் இருக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
ஒவ்வொரு பெண்ணின் சூழ்நிலையும் வெவ்வேறு விதமானதாக இருக்கலாம் எனவே குழந்தையை பெற்றுக்கொள்வதும், வேண்டாம் என முடிவெடுக்கவும் அவர்களுக்கு உரிமை உண்டு. ஒரு பெண்ணுக்கு தேவையற்ற கர்ப்பம் தொடர்வதால் ஏற்படும் பாதிப்பு மற்றும் சமூக அந்தஸ்து போன்றவற்றை கணக்கில் கொள்ள வேண்டும். எம்டிபி சட்டப்பிரிவு 3 (b) மற்றும் (c) என்பது விதவை மற்றும் விவகாரத்து ஆனாவர்கள் கருக்கலைப்பு செய்து கொள்வதை அங்கீகரிக்கிறது.
“ஒவ்வொரு பெண்ணும் அவளது பொருளாதாரச் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுப்பது சிறப்பானது. பல்வேறு பொருளாதார, கலாச்சார அல்லது சமூக காரணிகள் ஆகியன முக்கிய பங்கைக் கொண்டுள்ளன. கரு பெண்ணின் உடலைச் சார்ந்துள்ளதால், அது அவர்களது தனிப்பட்ட முடிவுக்கு உட்பட்டது. திருமணமாகாத பெண்களுக்கு கருவை கலைக்க உரிமையில்லை என்பது பெண்களின் உரிமைகளைப் பறிக்கும் மற்றும் அவர்களின் கண்ணியத்தை அவமதிக்கும் செயலாகும்.”
பெண்களின் உரிமைகளை வலுப்படுத்தயுள்ள நீதிமன்றம், கருத்தடை முறையைத் தேர்ந்தெடுக்க பெண்களுக்கு உரிமை உள்ளது, அவர்கள் விரும்பும் குழந்தைகளின் எண்ணிக்கையைத் தேர்ந்தெடுக்கும் மற்றும் கருக்கலைப்பு செய்யவும் உரிமை உள்ளது என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருக்கலைப்பை அனுமதிப்பது ஏன்?
பாதுகாப்பான கருக்கலைப்பு உரிமைகள் தாய்வழி நோய் மற்றும் இறப்பைத் தடுக்கலாம் என்றும், பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளைத் தடுக்க உதவும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 67 சதவீத கருக்கலைப்புகள் பாதுகாப்பற்றவை என்றும், தினமும் கிட்டத்தட்ட எட்டு பெண்கள் இதனால் இறக்கின்றனர் என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
கருக்கலைப்புக்கான அணுகலை மறுப்பது, ஒரு பெண் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு முறைகளை நாடுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது எனவே பாதுகாப்பான மற்றும் சட்ட ரீதியான கருக்கலைப்பை மேற்கொள்ள அனைத்து பெண்களுக்கும் உரிமை உள்ளது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வழக்கின் பின்னணி என்ன?
டெல்லியைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் கடந்த ஜூன் மாதம் தனது ஆண் நண்பரால் தான் கர்ப்பம் அடைந்துள்ளார். ஆனால் அந்த நபர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டதால், தனது கர்ப்பத்தை கலைக்க முடிவெடுத்து மருத்துவர்களை நாடியுள்ளார்.
ஆனால், அவருக்கு கருக்கலைப்பு செய்ய மருத்துவர்கள் மறுத்துள்ளனர். இதனையடுத்து, டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடினார். ஆனால் அங்கு அவரது கோரிக்கைக்கு எதிராகவே தீர்ப்பு வந்தது. அதன்பின்னர்,
அவர் உச்ச நீதிமன்றத்தை நாடினார், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்ட பெண்ணை எய்ம்ஸ் மருத்துவர்கள் பரிசோதித்து, 24 வாரம் அளவில் கரு வளர்ச்சி அடைந்துள்ள கருவை கலைக்கலாம் என சான்றிதழ் வழங்கினால் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் என அனுமதி அளித்துள்ளனர்.
அப்படி கருக்கலைப்பு செய்து கொள்வது பெண்ணின் உயிருக்கு ஆபத்தானது எனும் பட்சத்தில் அந்த குழந்தையை பெற்று காப்பகத்தில் ஒப்படைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தொகுப்பு - கனிமொழி
48% இந்திய பெண்கள் குடும்பத்தை கவனிக்க பணியில் இருந்து பாதியில் விலகுவதாக ஆய்வில் தகவல்!