ஏப்ரல் 1 முதல் UPI பரிவர்த்தனைக்கு கட்டணமா? - உண்மையான விளக்கம் இதோ!
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டணம் வசூலிக்க தேசிய பரிவர்த்தனை கழகம் முடிவெடுத்துள்ளதாக பரவிய தகவல் வதந்தி என்பது தெரியவந்துள்ளது.
யுபிஐ வாலட் பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டணம் வசூலிக்க தேசிய பரிவர்த்தனை கழகம் முடிவெடுத்துள்ளதாக பரவிய தகவல் வதந்தி என்பது தெரியவந்துள்ளது.
இந்தியா முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் முறை முன்னணியில் உள்ளது. போன்பே, கூகுள் பே, பேடிஎம் போன்ற ஆப்கள் மூலமாக பெட்டி கடை முதல் மால்கள் வரை வாடிக்கையாளர்கள் யுபிஐ பரிவர்த்தனை மூலம் சில நிமிடங்களில் பணம் செலுத்தி வருகின்றனர்.
இதுவரை யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ள கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 1.1% கட்டணம் வசூலிக்க தேசிய பரிவர்த்தனை கழகம் (NPCI) முடிவு செய்துள்ளதாக சோசியல் மீடியா மற்றும் செய்திகளில்கூட தீயாய் தகவல் பரவியது.
UPI2 வாலட் பரிவர்த்தனை:
யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) நெட்வொர்க்கில் மொபைல் வாலட்கள் போன்ற ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ரூமென்ட் (பிபிஐ) மூலம் தொடங்கப்படும் வணிக பரிவர்த்தனைகளுக்கான பரிமாற்றக் கட்டணத்தை 1.1% என இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) நிர்ணயித்துள்ளதாகக் கூறப்பட்டது.
அதாவது, ஏப்ரல் 1ம் தேதி முதல், பயனர்கள் தங்களது யுபிஐ வாலட்டில் இருந்து வியாபாரிகளுக்கு பணம் செலுத்தும் போது அதற்குக் கட்டணமாக 1.1% கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாகவும், பயனர்கள் தங்களது யுபிஐ வாலட்டில் 2 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை பரிமாற்றம் செய்யும் போது, அதற்கான சேவை கட்டணமாக 15bps (அடிப்படை புள்ளிகள்) வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
குறிப்பாக எரிபொருளுக்கு 0.5 சதவீதம், தொலைத்தொடர்பு, அஞ்சல், கல்வி, விவசாயம் 0.7 சதவீதம், பல்பொருள் அங்காடிக்கு 0.9 சதவீதம், மியூட்வல் பண்ட் அரசு, காப்பீடு, ரயில்வே டிக்கெட் புக்கிங் போன்றவற்றிற்கு ஒரு சதவீதமும் கட்டணமாக வசூலிக்கப்படும் என்றெல்லாம் தேசிய பரிவர்த்தனை கழகம் வெளியிட்டது போன்ற போலி ஆவணங்கள் வைரலாகி வந்தன. ஆனால் அதன் உண்மை நிலவரம் என்ன என்பது தற்போது வெளியாகி வருகிறது.
உண்மை நிலவரம் என்ன?
யுபிஐ இனி இலவசம் இல்லை, ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று வாட்ஸ்அப் ஃபார்வர்டு வந்ததா? கவலைப்பட வேண்டாம், இதுபோன்ற செய்திகள் தவறானவை மற்றும் போலியானவை என்பது தெரியவந்துள்ளது. Google Pay, Phone Pay மற்றும் Paytm போன்ற UPI ஆப்ஸ் மூலம் வங்கியிலிருந்து வங்கிக்கு பணம் செலுத்துவது முற்றிலும் இலவசம் என்று நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வெளிப்படுத்தியுள்ளது.
நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்த உண்மையை விளக்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது என்பதை தெளிவுப்படுத்தியுள்ளது.
ஆனால், ப்ரீபெய்ட் பேமெண்ட் கருவிகளுக்கு (பிபிஐ) பரிமாற்றக் கட்டணங்கள் பொருந்தும். அதாவது, வாலட்கள், கிரெடிட் கார்டுகள் போன்ற PPI-கள் மூலம் செய்யப்படும் UPI பரிவர்த்தனைகளுக்கு 1.1% பரிமாற்றக் கட்டணம் இருக்கும் எனக்கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து NPCI வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“சமீபத்திய காலங்களில் இலவசமான வேகமான, பாதுகாப்பான மற்றும் தடையற்ற அனுபவத்தை வழங்குவதன் மூலம் UPI டிஜிட்டல் கட்டணத்தின் விருப்பமான முறையாக உருவெடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக யுபிஐ பரிவர்த்தனைக்காக ஆன்லைன் பேமெண்ட் ஆப்களுடன் வங்கிக் கணக்கை இணைப்பது முக்கியமானதாக உள்ளது. அவ்வாறு இணைக்கப்படும் வங்கி கணக்கிலிருந்து வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்களுக்கிடையே மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனையானது முற்றிலும் இலவசமாக இருக்கும்,” என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டணம் வசூல் யாருக்கெல்லாம் பொருந்தும் என்ற கேள்வியும், குழப்பமும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களின் பல பதிவுகளில் என்பிசியின் பரிந்துரைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, ஏப்.1-ம் தேதி முதல் அனைவரும் இந்தக் கட்டணச் சுமையை ஏற்கவேண்டியது வருமோ என்று கவலைப்படுகின்றனர்.
ஆனால், யாரெல்லாம் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை என்பிசிஐயின் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
யாரெல்லாம் கட்டணம் செலுத்த வேண்டும்?
என்பிசிஐ-யின் அறிக்கையில் வாடிக்கையாளர்கள் 1.1 சதவீத கட்டணத்தை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று தெளிவு படுத்தப்பட்டுள்ளது. பிபிஐ எனப்படும் பிரீப்பெய்டு பேமென்ட் கருவியினைக் கொண்டு, ரூ.2000-க்கு அதிகமாக செய்யப்படும் பரிமாற்றத்திற்கு வணிகர்கள் மேற்கொள்ளும் பரிமாற்றத்துக்குதான் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
“சமீபத்திய ஒழுங்குமுறை வழிகாட்டுதல்கள், ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ரூமென்ட்கள் (பிபிஐ வாலட்ஸ்) ஒன்றோடொன்று இயங்கக்கூடிய UPI அமைப்பின் ஒரு பகுதியாக இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. அறிமுகப்படுத்தப்பட்ட பரிமாற்றக் கட்டணங்கள் பிபிஐ வணிகப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் ஏதுமில்லை. மேலும், வங்கிக் கணக்கிலிருந்து வங்கிக் கணக்கு அடிப்படையிலான UPI பேமெண்ட்டுகளுக்கு (அதாவது சாதாரண UPI பேமெண்ட்கள்) கட்டணங்கள் எதுவும் இல்லை, முற்றிலும் இலவசம்,” என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது, கடன் அட்டை, வாலட்களைக் கொண்டு பிபிஐ மூலம் செய்யப்படும் யுபிஐ பரிமாற்றங்களுக்கும் இந்தக் கட்டணம் பொருந்தும். முக்கியமாக, க்யூஆர் கோடு மூலம் செய்யப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கே இந்த பரிமாற்றக் கட்டணம் பொருந்தும்.
NPCI சமீபத்தில் வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, ஏப்ரல் 1 முதல் ப்ரீபெய்ட் பேமெண்ட் கருவிகள் (PPI) வணிகர் பரிவர்த்தனைகளுக்கு 0.5 சதவீதம் முதல் 1.1 சதவீதம் வரை வசூலிக்க தேசிய கொடுப்பனவு கழகம் பரிந்துரைத்துள்ளது. NPCI ஆனது PPI வணிகர் கொடுப்பனவுகளுக்கு மட்டுமே என்றும் வங்கியிலிருந்து வங்கி பரிவர்த்தனைகள் முற்றிலும் இலவசம் என்றும் அறிவித்துள்ளது. பிபிஐ மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள் ரூ.2000க்கு மேல் இருந்தால், அந்த பரிவர்த்தனைகளுக்கு 1.1 சதவீதம் வரை பரிமாற்றக் கட்டணம் விதிக்கப்படும்.
வாடிக்கையாளர் ஒருவர் யுபிஐ பரிவர்த்தைனைக்காக தனது டிஜிட்டல் வாலெட்டில் பணம் ஏற்றும்போது, அந்த பிபிஐ வழங்குபவர் வாடிக்கையாளரின் வங்கிக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதில் வாடிக்கையாளர் எந்த விதத்திலும் பாதிக்கப்பட போவதில்லை. ஆனால், இந்தக் கூடுதல் கட்டணத்தை வால்ட் வழங்குபவர் வாடிக்கையாளிடம் வசூலிக்க நினைத்தால், அவர் பாதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.