கேரளாவில் அமைச்சராகும் முதல் பத்திரிக்கையாளர் வீணா ஜார்ஜ்!
கேரளாவில் ஆட்சியைப் பிடித்திருக்கும் பினராயி 2.0 ஆட்சியில் முதல் முறையாக பெண் பத்திரிக்கையாளரான வீணா ஜார்ஜ் அமைச்சராக பொறுப்பேற்கிறார்.
கேரள வரலாற்றில் முதன் முறையாக அரசியல்வாதியாக மாறிய பெண் பத்திரிக்கையாளர் அமைச்சர் பொறுப்பேற்கிறார். ஆளும் கட்சியான இடதுசாரி ஜனநாயக முன்னணி, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 140 தொகுதிகளில் 99 இடங்களில் வெற்றி பெற்று பினராயி தலைமையிலான அரசு 2வது முறையாக பொறுப்பேற்கிறது. மே 20ம் தேதி முதலமைச்சர் மற்றும் புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்கின்றனர்.
பினராயி 2.0 அமைச்சரவையில் கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிக்கையாளராக இருந்த வீணா ஜார்ஜ்-க்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. 45 வயதாகும் வீணா, இந்திய மாணவர் சங்கத்தில் இருந்து தன்னுடைய அரசியல் பணியைத் தொடங்கினார். இவர் பத்தனம்திட்டா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினராவார். கேரள செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் களத்தில் செய்தி சேகரிப்பவராகவும் பணியாற்றி இருக்கிறார் வீணா.
மக்கள் சார்பு நிலையோடு செய்திகளை வழங்கியதால் இவர் பிரபலமானார். 2012 அமெரிக்கத் தேர்தல் குறித்த செய்திகளை சேகரிப்பதற்காக இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பத்திரிக்கையாளர்களில் இவரும் ஒருவர். இந்தியாவிஷன் எனும் சேவை மூலம் மக்கள் மனதை கைராலி கொள்ளை கொள்வதற்குக் காரணமாக இருந்தவர் வீணா, எம்என் நியூஸ், ரிப்போர்டர் சேனல்கள் உள்ளிட்டவற்றிலும் இவர் சிறப்பாகப் பணியாற்றி இருக்கிறார்.
மலையாள ஊடகத்தில் முதல் பெண் இயக்குனராகவும் இவர் திகழ்ந்திருக்கிறார், தற்போது அரசின் நாம் முன்னேறி இருக்கிறோம் என்ற நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருக்கிறார்.
கேரள பல்கலைக்கழகத்தில் முதுநிலை இயற்பியல் மற்றும் பி.எட்டி படிப்பில் முதல் தர வரிசையில் வென்றவர் வீணா. ஏசியா விஷன், டிபி வியூவர்ஸ், ஷபாமதி, பி பாஸ்கரன் ஃபவுண்டேஷன், சுரேந்திரன் நீலேஸ்வரம், கேரளா டிவி விருது (சிறந்த நெறியாளர்), ராஜூவ் காந்தி அறக்கட்டளை, வட அமெரிக்க பத்திரிக்கையாளர் சங்கம், UAE கிரன் சாய்ஸ் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வாங்கி இருக்கிறார்.
2016ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் ஆரன்முலா தொகுதியில் வெற்றி பெற்று கேரள சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைத்தார் வீணா. காங்கிரஸின் கோட்டையாகக் கருதப்பட்ட அந்தத் தொகுதியில் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தன்வசமாக்கினார்.
பத்தனம்திட்டா மாவட்டத்தின் அதே தொகுதியில் இந்த முறை 19 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றிருக்கிறார். மலைப் பகுதியான ஆரன்முலாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வீணா செய்து வந்த வளர்ச்சிப் பணிகளும், முன்நோக்குத் திட்டங்களின் பலனே இந்தத் தேர்தல் முடிவுகள்.
வீணாவின் கணவர் டாக்டர். ஜார்ஜ் ஜோசப், மலங்கரா ஆர்தோரடக்ஸ் தேவாலயத்தின் ஆசிரியர் மற்றும் முன்னாள் செயலாளர். இவர்களுக்கு அன்னா, ஜோசப் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
மக்களுக்கான நிலைப்பாடுகளில் உறுதியாக இருப்பவர் வீணா ஜார்ஜ், அர்ப்பணிப்பு உணர்வுடன், தொட்ட காரியங்கள் அனைத்திலும் ஜெயம் காணும் வெற்றியாளர் இவர் என்று கேரள ஊடகங்கள் இவரை பாராட்டுகின்றன.
மக்கள் மனதில் இடதுசாரிக்கு இருக்கும் நம்பிக்கையே இரண்டாவது முறையும் பினராயி அரசு அமோக வெற்றி பெற்றிருப்பதற்குக் காரணம் என்றும் ஆரன்முலாவில் சுமார் 19 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை வெற்றி பெறச் செய்திருப்பது இதுவரை தான் செய்த வந்த பணிகளை விட தொகுதியில் மேலும் அதிக வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கான பொறுப்பை மக்கள் தங்களுக்கு வழங்கி இருப்பதாக வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.