பாகிஸ்தான் போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய அபிநந்தனுக்கு 'வீர் சக்ரா விருது'
பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி சாகசம் படைத்த இந்திய விமானப்படை விமானி, விங் கமேனடர் அபிநந்தனுக்கு வீர தீரச்செயலுக்கான ’வீர் சக்ரா’ விருது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று வழங்கப்பட்டது. பாகிஸ்தானின் பாலகோட்டில் தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்த ஐந்து விமானிகளுக்கு வாயுசேனா விருது வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், சிபிஆர்.அப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பாகிஸ்தானில் இருந்து இயங்கும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. இதில் 72 வீரர்கள் பலியானார்கள்.
இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை, பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து பாலகோட்டில் செயல்பட்டு வந்த தீவிரவாத பயிற்சி முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு மறுநாள் பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றன. அப்போது இந்திய விமானப்படை விமானங்கள், பாகிஸ்தான் விமானங்களை சுற்றி வளைத்து விரட்டியடித்தன.
இந்த தாக்குதலின் போது, இந்திய விமானப்படை விமானி, பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்தினார். எனினும் அவரது விமானமும் சேதமடைந்து, அவர் பாகிஸ்தான் கட்டுப்பாட்டுப் பகுதிகுக்குள் தரையிறங்கி அவர்களிடம் பிடிபட நேர்ந்தது.
இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் தந்த அழுத்தம் காரணமாக, அபிநந்தன் மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். பாகிஸ்தானில் இருந்த போது அபிநந்தன் எந்த கேள்விகளுக்கும் பதில் அளித்து தகவல்களை வெளியிட மறுத்துவிட்டார்.
போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காகவும், எதிரிகளிடம் எந்த தகவலையும் சொல்லாமல் உறுதி காத்ததற்காகவும் அபிநந்தன் பெரிதும் பாராட்டப்படுகிறார். இந்திய மக்கள் அவரை நாயகனாக கொண்டாடினர். அவரது தாக்கத்தால், அவரைப்போலவே இளைஞர்கள் மீசை வைத்துக்கொண்டனர்.
அபிநந்தன், தமிழகத்தைச்சேர்ந்தவர். முன்னாள் விமானப்படை அதிகாரி வர்த்தமானின் மகன். இந்நிலையில், அபிநந்தனின் வீரதீரச் செயலை பாராட்டி அவருக்கு, ’வீர் சக்ரா’ விருது அறிவிக்கப்பட்டது. வீர் சக்ரா விருது வீரதீரச்செயலுக்கான நாட்டின் மூன்றாவது பெரிய விருதாகும்.
இன்று நடைபெறும் சுதந்திரத் தின விழா கொண்டாட்டங்களின் போது அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. மேலும், பாகிஸ்தானின் பாலகோட்டில் தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்த ஐந்து விமானிகளுக்கு வாயுசேனா விருது வழங்கப்படுகிறது.
தமிழில்: சைபர்சிம்மன்