‘கனவுகளின் காதலி; நீர் சறுக்கலின் நாயகி’ - யார் இந்த விலாசினி சுந்தர்?!
சென்னையைச் சேர்ந்த விலாசினி, நீர் சறுக்கல் மீதான காதலால் இந்திய அளவில் பல போட்டிகளில் வெற்றி வாகை சூடியவர். இவருக்கு சர்ஃபிங் மீதான ஆர்வம் வரக் காரணம் என்ன?
கனவுகள் ஒருபோதும் தடைகள் பற்றி கவலைப்படுவதேயில்லை. அவர்கள் நாள்தோறும் கனவு காண்கிறார்கள். அதை லட்சியமாக்கி, அதனை நோக்கி நடைபோடுகிறார்கள். தினமும் அந்த கனவுக்கு உரமிட்டு, நாளடைவில் வெற்றிக்கனியை பறித்துவிடுகிறார்கள். விலாசினி சுந்தரும் அப்படித்தான் தனது கனவை நோக்கி நகரந்துகொண்டேயிருந்தார். இன்று சாதனை நாயகியாக உருவெடுத்திருக்கிறார்.
யார் இந்த விலாசினி சுந்தர்?
சென்னையைச் சேர்ந்தவர் விலாசினி. சர்ஃபிங் எனும் நீர் சறுக்கல் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். ஏசியன் சர்க்யூட் போட்டிகளில் இந்தியா சார்பில் போட்டியிட்டு வெற்றிக் கண்டவர். அதுமட்டுல்ல நீர் சறுக்கல் போட்டியில் தமிழ்நாட்டிலிருந்து பங்கேற்கும் முதல் பெண் விலாசினி.
சிறுவயது முதல் நீச்சல், விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டதால் ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் துறையை தேர்ந்தெடுத்து முதுகலை பட்டப்படிப்பை முடித்துள்ளார் விலாசினி.
சென்னையை அடுத்துள்ள கோவளத்தில் மீனவ கிராமத்து இளைஞர்கள் மூலம் நீர் சறுக்கல் விளையாட்டை கற்றுக்கொண்டார். அந்த இளைஞர்களின் பயிற்சிதான் விலாசினிக்கு பெரும் உந்துதலாக இருந்துள்ளது.
நான்கு வயது இருக்கும்போதே விலாசினி நீச்சல் பயிற்சியை முறையாக கற்றுக்கொண்டவர். ஆறாவது படிக்கும்போது தேசிய அளவிலான சாம்பியன் ஷிப் போட்டிகளில் காலடி எடுத்து வைத்து அதில் வெற்றியும் பெற்றவர் விலாசினி. 10ஆண்டுகளுக்கும் மேலாக நீச்சலில் ஆர்வம் கொண்டிருந்தவர் 2013ம் ஆண்டு முதல் தனது கவனத்தை சர்ஃபிங் பக்கம் திருப்பினார்.
நீச்சல் போட்டிகளில் வெற்றி பெற்று வரும் நீ வீணாக ஏன் சர்பிங் செய்ய விரும்புகிறாய்?? என்பது போன்ற கேள்விகளை விலாசினி எதிர்கொண்டார். இருந்தாலும் தொடர்ந்து அதில் கவனம் செலுத்தியவர், நீர் சறுக்கல் விளையாட்டில் தனக்கான தனி முத்திரையை பதித்துள்ளார்.
“எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் வீராங்கனையாக உச்சம் தொட வேண்டும். இந்த இலக்கை அடையும் வரை எனது கனவுகள் ஓயாது,” என்கிறார் 24 வயதேயான விலாசினி சுந்தர்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் 'சர்ஃபிங்' விளையாட்டுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆனால் இந்தியாவில் இப்போட்டிக்கு இன்னமும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்கப்பட்ட பிறகும் இந்திய அரசு இதை அங்கீகரிக்கவில்லை. இதனை அங்கீகரிப்பதன் மூலம் பல்வேறு வீரர், வீராங்கனைகளை உலக அளவில் இந்தியாவிலிருந்து உருவாக்க முடியும்.
தகவல் உதவி - shethepeople.tv| படங்கள்: விலாசினி ஃபேஸ்புக் | தமிழில்: மலையரசு