அமெரிக்கா செல்ல விருப்பமா? உஷார், உங்கள் சமூக ஊடக பதிவுகள் அதைத் தீர்மானிக்கலாம்!
நீங்கள் சமூக ஊடகங்களில் தீவிரமாக இருந்து, அமெரிக்கா செல்லும் கனவிலும் இருப்பவர் என்றால், உங்கள் சமூக ஊடக செயல்பாட்டில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. ஏனெனில், விசா வாய்ப்பை உங்கள் சமூக ஊடக பதிவுகள் தீர்மானிக்க வாய்ப்பிருக்கிறது.
ஆம், அமெரிக்காவில் அண்மையில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதிமுறைகளின் படி, அந்நாட்டு விசாவுக்கு விண்ணப்பிப்பவர்கள், வழக்கமாக சமர்ப்பிக்கும் மற்ற தகவல்களுடன், தங்கள் சமூக ஊடக கணக்கு விவரங்களையும் சமர்பிக்க வேண்டும். விசா பரிசீலனையின் போது, ஐந்து ஆண்டு கால சமூக ஊடக பதிவுகளில் உள்ள தகவல்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
அமெரிக்கா விசாவுக்காக விண்ணப்பிக்கும் 15 மில்லியன் பேரை இந்த விதி பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம், முதல் ஆன்லைன் விசா விண்ணப்பப் படிவத்தில் சமூக ஊடக தகவல்களை சமர்ப்பிப்பதற்கான அம்சம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்த புதிய விதி குறிப்பிட்ட சில ராஜங்க பணிகளுக்காக விண்ணப்பிப்பவர்கள் தவிர அனைவருக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
”அமெரிக்காவுக்கு நியாயமான காரணங்களுக்காக பயணம் செய்வதை ஆதரிக்கும் அதே நேரத்தில், அமெரிக்க மக்களை பாதுகாப்பதற்கான வடிகட்டல் (ஸ்கிரீனிங்) முறையை மேம்படுத்த முயற்சித்துக் கொண்டே இருக்கிறோம்,” என இந்த விதிமுறைக்காக அறிவிப்பில் அமெரிக்க அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சென்றவர்களின் சமூக ஊடக கணக்குகள் மட்டுமே சோதிக்கப்பட்டு வந்தன. தற்போது இது அனைத்துத் தரப்பினருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறையின்படி, விசாவுக்கு விண்ணப்பிப்பவர்கள், தங்கள் சமூக ஊடக கணக்கு பெயர்களை சமர்ப்பிக்க வேண்டும். தளத்தில் இல்லாத வேறு சமூக ஊடக கணக்குகளில் செயல்பாடு கொண்டிருந்தால் அவற்றுக்கான தகவல்களை தாமாக முன்வந்து சமர்பிக்க வேண்டும்.
சமூக ஊடகங்களை பயன்படுத்தவில்லை எனக் கூறலாம் என்றாலும், இந்த தகவல் பொய்யானது என தெரியவந்தால், விளைவுகள் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டில், அமெரிக்க அதிபர் டிரம்ப், விசா பெறுபவர்கள் விவரங்களை பரிசீலிப்பதற்காக, சீரான வடிகட்டல் மற்றும் பரிசீலனை நெறிமுறைகளை வகுக்குமாறு கூறியிருந்தந்தார். அதன் அடிப்படையில் புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, ஒபாமா ஆட்சியின் போது, இத்தகைய விவரங்கள் விருப்பத்தின் பேரில் சமர்ப்பிக்க கோரப்பட்ட என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா விசாவுக்கான இந்த புதிய நெறிமுறைகள், அந்நாட்டுக்கு உயர் கல்வி மற்றும் பணி வாய்ப்புக்காக செல்பவர்களுக்கு ஒருவிதமான கவலையை ஏற்படுத்துவதாக இருக்கிறது என்றால், இந்த வகை கண்காணிப்பு தனியுரிமை மீறலாக அமைகிறது எனும் கவலையையும் பொதுவாக ஏற்படுத்தியுள்ளது.
சராசரி பயனாளிகள், சமூக ஊடகங்களில் தாங்கள் தெரிவித்த கருத்துகளும், பகிர்ந்து கொண்ட தகவல்களும் விசா வாய்ப்பை எந்த விதத்தில் பாதிக்கும் எனும் கவலையில் மூழ்கும் நிலை வரலாம். அது மட்டும் அல்ல, சமூக ஊடக பதிவுகளை கண்காணிப்பதால் விசா விண்ணப்பம் பரிசீலிக்கப்படுவதற்கான காலமும் அதிகமாகும் என கூறப்படுகிறது.
“விண்ணப்பப் பரிசீலனை காலம் அதிகமாகும். விசாரணைக்குழு, தகவல்கள் அடிப்படையில் ஆய்வு செய்து, நபர்களை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்கவும் செய்யலாம்,” என்று குடியுரிமை சட்ட வல்லுனரான ஷீலா மூர்த்தி தி இந்து நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.
இன்னொரு பக்கம் இது கண்காணிப்பு நடவடிக்கை எனும் கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. “குடிமக்கள் மற்றும் குடிமக்கள் அல்லாதவர்கள் மீது அசாதாரணமான பரவலான கண்காணிப்பை மேற்கொள்வதற்கான முயற்சியின் ஒரு அங்கமாக இது அமைகிறது,” என அமெரிக்காவின் கொலம்பியா சட்ட பல்கலையில் உள்ள குடியுரிமைக்கான மையத்தின் இயக்குனரான எல்லோரா முகர்ஜி இது தொடர்பாக நியூயார்க் டைம்சிடம் கூறியுள்ளார்.
இது மிகவும் பிரச்சனைக்குரியது மற்றும் ஆபத்தானது என அமெரிக்க சிவில் உரிமைகள் பாதுகாப்புத் திட்டத்தின் இயக்குனர் ஹினா ஷாம்சி கூறியுள்ளார்.
சமூக ஊடக வலைப்பின்னல் என்பது நம்முடைய தொடர்புகள், நபர்கள், பழக்கங்கள், முன்னுரிமைகள் ஆகியவற்றின் வரைப்படமாக திகழ்கின்றன. இத்தகைய சமர்பிப்புத் தேவை, பயணிகள் மற்றும் அவர்கள் நண்பர்கள் மீதான கண்காணிப்பு அச்சத்தை உண்டாக்கும் என அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, சமூக ஊடக தகவல்களை கண்காணிப்பது எந்த வகையிலும் உள்நாட்டு பாதுகாப்புக்கு உதவியாக அமைகிறது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இது தனியுரிமை மற்றும் கருத்து சுதந்திரத்தை பாதிப்பதாகவே அமையும் என்றும் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.