ஆரக்கிள் நிறுவன இயக்குனர் குழுவில் இணைந்த இன்போசிஸ் முன்னாள் சி.இ.ஓ!
இன்போசிஸ் நிறுவன முன்னாள் சி.இ.ஓ விஷால் சிகா, சர்வதேச நிறுவனமான ஆரக்கிள் இயக்குனர் குழுவில் இணைந்திருக்கிறார்.
அண்மையில் வியானை சிஸ்டம்ஸ் எனும் செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் துவக்கிய, இன்போசிஸ் நிறுவன முன்னாள் சி.இ.ஓ விஷால் சிகா, சர்வதேச தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள் இயக்குனர் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
52 வயதான சிகா, செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் நுட்பங்களில் உலகின் முன்னணி வல்லுனர்களில் ஒருவராக இருப்பவர், வர்த்தக மதிப்பு மற்றும் மாற்றத்திற்கு ஏற்ற செயல்பாட்டில் ஆரக்கிள் நிறுவனத்திற்கு வழிகாட்டுவார் என ஆரக்கிள் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இயக்குனர் குழுவில் விஷால் சிகா நியமிக்கப்படுவதை அறிவித்த ஆரக்கிள் நிறுவன தலைவர் லாரி எலிசன்,
“விஷால் சிகா, செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றலில் உலகின் முன்னணி வல்லுனர்கள் ஒருவர் என தெரிவித்துள்ளார்.
வியானை நிறுவனத்தை துவக்குவதற்கு முன் விஷால் சிகா, எஸ்.ஏ.பி நிறுவனத்தில் உயர் பொறுப்பிலும், இன்போசிஸ் நிறுவன சி.இ.ஓவவாகவும் இருந்திருக்கிறார்.
சிகாவின் அனுபவம் மற்றும் நிபுணத்துவம், ஆரக்கிள் நிறுவனம் மற்றும் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்ட, பொருத்தமான நபராக கருதச்செய்துள்ளது என்று லாரி எலிசன் கூறியுள்ளார்.
"ஒரு நிறுவனத்தின் டிஜிட்டல் மாற்றம், கிளவுட் சேவைகள் மற்றும் தீர்வுகளுக்கு அது எத்தனை வேகமாக மாறுகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு அமைகிறது என்று ஆர்க்கிள் நிறுவன சி.இ.ஓ சப்ரா காட்ஸ் கூறியுள்ளார்.
பல ஆண்டுகளாக, உலகில் உள்ள ஒவ்வொரு பெரிய நிறுவனத்தின் இதயத்துடிப்பாக ஆரக்கிள் டேட்டாபேஸ் இருப்பதாக, விஷால் சிகா தெரிவித்துள்ளார்.
"இன்று, எண்டர்பிரைஸ் அப்ளிகேஷன் சூட்ஸ் மற்றும் பாதுகாப்பான உள்கட்டமைப்பு வசதிகள் இரண்டையும் ஒற்றை கிளவுட் சேவையில் அளிக்கும் நான்கு முன்னணி கிளவுட் சேவை நிறுவனங்களில் ஒன்றாக ஆரக்கிள் இருக்கிறது. ஆரக்கிளின் தனித்தன்மை வாயந்த நிலை, எதிர்வரும் காலத்தில் புதுமை மற்றும் வளர்ச்சிக்கான சாத்தியங்களை கொண்டுள்ளது என்றும் சிகா கூறியுள்ளார்.
ஆகஸ்ட் மாதம் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோளின் படி, இந்திய சமூகத்தின் நலனுக்கேற்ப செயற்கை நுண்ணறிவை பெரிய அளவில் எப்படி பயன்படுத்தலாம் என்று நிட்டி ஆயோக் அமைப்பிற்கு விஷால் சிகா காட்சி விளக்கம் அளித்தார். இந்த காட்சி விளக்கத்தின் போது 20 அமைச்சக பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதற்கு, கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கழகங்கள் மூலம் திறமையானவர்களை கொண்டு வருவதற்கான உள்கட்டமைப்பு வசதி தேவை என்றும் அவர் கூறினார்.
செய்தி: பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்