இனி விண்வெளிக்கும் சுற்றுலா போகலாம்: ஆனா டிக்கெட் விலை எவ்வளவுனு தெரிஞ்சா...!
விண்வெளிக்கு அனுப்புவதை பெரிய சாதனையாக கருதிய காலம் கடந்துவிட்டது. இப்போது அந்த விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் காலம் கைகூடிவிட்டது. என்னது விண்வெளிக்கு சுற்றுலாவா என்று ஆச்சரியமாக இருக்கிறதா...
ஆம்! இதை சாத்தியப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளது விர்ஜின் கேலக்டிக் நிறுவனம்.
ரிச்சர்ட் பிராசன் என்னும் இங்கிலாந்து தொழிலதிபரின் நிறுவனம் தான் Virgin Galactic. இந்நிறுவனம் மக்களை விண்வெளி பயணத்திற்கு அழைத்துச்செல்லும் முயற்சியில் முழு மூச்சாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்களை 90 நிமிட சுற்றுலாவாக அழைத்து செல்லுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அண்மையில் இந்நிறுவனம் விண்வெளி பயணத்துக்காகத் தயாராகிவரும் ஆகாய கப்பல் 'விஎஸ்எஸ் யூனிட்டியின்' (VSS unity) பயணிகள் அமரும் இருக்கை மற்றும் அறையின் வடிவத்தை இணையத்தில் வெளியிட்டது.
புவியிலிருந்து 97 கிலோமீட்டர் வரை அழைத்துச் செல்லும் ஆகாய கப்பலில் இருந்து பரந்த நம் பூமியின் அழகைக் காண பெரிய வட்டவடிவ ஜன்னல்கள் பார்ப்பதற்காக அழகாக காட்சியளிக்கின்றன.
இதில் ஆறு பயணிகள் மற்றும் இரண்டு குழு உறுப்பினர்கள் அமரலாம். பயணிகளின் எடை மற்றும் உயரத்திற்கு தகுந்தாற்போல வசதியாக அமரும் இருக்கைகளைக் கொண்டுள்ளது. மேலும் பயணிகள் அனைவரும் தங்களுடனும், இரண்டு விமானிகளிடமும் தொடர்பு கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் ஆகாய கப்பலினுள் ஸ்மார்ட்போன் உபயோகிப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அறிந்ததே. இதன்காரணமாக, மக்கள் தங்கள் பயணத்தை இன்னும் அழகாக்கிக்கொள்ள, நினைவுகளாக்கி அதை புகைப்படமாக சேமிக்கவும் புதிய வழிமுறையை ஏற்படுத்தியுள்ளது இந்நிறுவனம்.
அதாவது, ஆகாயக் கப்பலைச்சுற்றி 16 புகைப்படக் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இரண்டு வீடியோ கருவிகளும் இருக்கும் என ஜார்ஜ் வயிட்சைட்ஸ் என்னும் விர்ஜின் கேலக்டிக்கின் முதன்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.
விர்ஜின் நிறுவனத்தின் தலைமையிடமான மெக்ஸிக்கோவில் இருந்து விண்வெளிக்கு மக்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். ஒரு விண்வெளி டிக்கெட் 250,000 டாலர்களுக்கு விற்பனை ஆகிறது. இந்திய மதிப்பில் இது 1,82,54,375 ரூபாய்.
விண்வெளி சுற்றுலா செல்ல இதுவரை 60 பேர் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் விண்வெளி சுற்றுலா போட்டோஸ் என மக்கள் பொதுமக்கள் பதிவிடும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை!