7 நாட்கள் ஆக்சிஜன் செறிவூட்டிகள் இலவசமாக வழங்கி பலரின் உயிரைக் காத்த தன்னார்வலர் குழு!
O2 Free Air For All நிறுவனர் வரீந்தர் சிங் தன்னார்வலர் குழுவை ஒருங்கிணைத்து நன்கொடைகள் திரட்டி ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்களை 7 நாட்கள் வரை நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கி 500-க்கும் மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்றியுள்ளார்.
கொரோனா இரண்டாம் அலையில் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்தது. மருத்துவமனை வாசல்களில் நோயாளிகள் வரிசையாக ஆம்புலன்ஸ்களில் ஆக்சிஜனுக்காகக் காத்திருந்தக் காட்சி காண்போரைக் கலங்கச் செய்தது.
மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன்கூடிய படுக்கைகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது. ஏற்கெனவே ஆக்சிஜன் படுக்கைகள் ஒதுக்கப்பட்ட நோயாளிகள் குணமாகி சென்றால் மட்டுமே அடுத்த நோயாளிக்கு ஆக்சிஜன் கொடுக்கமுடியும் என்கிற நிலை இருந்ததால், ஏராளமானோர் மருத்துவமனை வாசலில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு காத்திருந்தனர்.
வீட்டிலேயே ஆக்சிஜன் கொடுக்க முடியும் என்கிற நிலையில் இருந்த நோயாளிகள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். இதுபோன்ற நோயாளிகளும் ஆக்சிஜன் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளின் வீடுகளுக்கேச் சென்று 7 நாட்கள் வரை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் O2 Free Air For All என்கிற முயற்சி மூலம் ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்களைக் கொடுத்து உதவியுள்ளனர் தன்னார்வலர்கள் அடங்கிய குழு. இந்த முயற்சியை நிறுவியவர் வரீந்தர் சிங். இவர் இருபதாண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சமூக நலப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
தொடக்கம்
வரீந்தர் சிங் மக்களின் உயிர்காக்கும் இந்த முயற்சியை மே மாதம் 6-ம் தேதி தொடங்கியுள்ளார்.
”என் நண்பரின் அப்பாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு குணமாகிவிட்டது. ஆனால் ஆக்சிஜன் கான்சன்ட்ரேடர் தேவைப்படுவதாக என்னிடம் உதவி கேட்டார். நானும் வாங்கித் தருவதாக சொன்னேன். ஆனால் அந்த நண்பர் பேசி முடிக்கும் தருவாயில் தன் அப்பாவை வீட்டிற்கு கூட்டிச் சென்றால் மட்டுமே அடுத்த நோயாளிக்கு ஆக்சிஜன் வசதியுடன்கூடிய படுக்கை கிடைக்கும் என்றார். இந்த வார்த்தைகளே என்னை சிந்திக்க வைத்தது. நான் கொடுக்கவிருக்கும் ஒரு இயந்திரத்தால் இருவர் உயிர்பிழைக்க முடியும் என்றால் இதை சற்று பெரியளவில் செய்தால் மேலும் பலரது உயிரைக் காப்பாற்றலாமே என்று யோசித்தேன்,” என்று இந்த முயற்சிக்கான துவக்கப்புள்ளி குறித்துப் பகிர்ந்துகொண்டார் வரீந்தர் சிங்.
வரீந்தர் சிங் இந்த உதவியை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்று மேலும் பலருக்கு உதவ நினைத்தார். தன்னுடைய நட்பு வட்டத்திடம் பகிர்ந்துகொண்டார். ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரம் வாங்கி நோயாளிகளுக்கு உதவ இருக்கும் முயற்சியில் ஆர்வமுள்ளவர்கள் இணைந்துகொள்ளுமாறு கேட்டுள்ளார்.
பலர் ஊக்கமளித்ததுடன் உதவவும் முன்வந்துள்ளனர். பணமாகவும் இயந்திரமாகவும் பலர் நன்கொடை அளித்துள்ளனர்.
தன்னார்வக் குழு செயல்பாடுகள்
ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்களை 7 நாட்கள் வரை இலவசமாகக் கொடுத்து உதவும் பணியில் 40 தன்னார்வலர்கள் கிட்டத்தட்ட 5440 மணி நேரம் செலவிட்டு 500-க்கும் மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர். 10,000 தொலைபேசி அழைப்புகளை ஏற்றுள்ளனர். சென்னை முழுவதும் 10,000 கி.மீட்டருக்கும் மேல் பயணித்துள்ளனர். 34 நாட்கள் வரை செலவிட்டு 105 ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்களை நோயாளிகளிடம் கொடுத்து வாங்கி உதவியுள்ளனர்.
மேலும், படப்பை சாயி மருத்துவமனையில் நிமிடத்திற்கு 50 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடிய ஆலையை நிறுவியுள்ளனர். இதுதவிர நிமிடத்திற்கு 283 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தன்னார்வலர்கள் நன்கொடையாகக் கொடுத்த 1.35 கோடி ரூபாயைக் கொண்டு இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
O2 Free Air For All முயற்சி மூலம் ஆக்சிஜன் தேவையுள்ள சரியான நோயாளிகளைச் சென்றடையவேண்டும் என்பதற்காக தன்னார்வலர்கள் நோயாளிகளிடம் ஆதார் கார்டு, ஆர்டிபிசிஆர் முடிவுகள், மருத்துவர் சீட்டு போன்ற முக்கியத் தகவல்களை தன்னார்வலர்கள் திரட்டியுள்ளனர்.
இதேபோன்ற சேவை வழங்கிய மற்றவர்களும் வரீந்தர் சிங்கைத் தொடர்புகொண்டு ஆலோசனைகள் கேட்க அவர்களுக்கும் வழிகாட்டியுள்ளார்.
ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள் முதலில் யூவி அறையில் சானிடைஸ் செய்யப்பட்டு அதைத் தொடர்ந்து கெமிக்கல் ஸ்டெரிலைஸ் செய்யப்பட்டு நோயாளிக்கு வழங்கப்பட்டுள்ளது.
டெலிவரியில் ஈடுபட்டிருந்த தன்னார்வலர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது சவாலாக இருந்தது என்கிறார்.
”சில நோயாளிகள் இரண்டாவது மாடி அல்லது மூன்றாவது மாடியில் இருப்பார்கள். ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரத்தின் எடை அதிகம். தன்னார்வலர்கள் எத்தனையோ சிரமங்களைக் கடந்து உயிர்காப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டார்கள். Oxgen For All முயற்சியின் வெற்றிக்கு தன்னார்வலர்களின் கூட்டு முயற்சியே காரணம்,” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் வரீந்தர் சிங்.
இந்தத் திட்டத்தின் நிறைவு அறிக்கையை, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் வழங்கியுள்ளார் O2 Free Air For All நிறுவனர் வரீந்தர் சிங்.
பேரிடர்களும் உயிர்கொல்லிகளும் வெவ்வேறு வடிவங்களில் மக்களின் உயிரைக் குடிக்க வந்தாலும் இவரைப் போன்ற தன்னார்வலர்களின் சேவை அவற்றை முறியடித்து மனிதம் வெல்லும் என்பதை உணர்த்துகிறது.