தேர்தல் 2019: ஓட்டு போடப் போகும் முன் இதை படிச்சிட்டு போங்க!
ஏப்ரல் 18ம் தேதி வாக்களிக்க உள்ள தமிழக மக்களே நீங்கள் ஓட்டு போட போவதற்கு முன்னர் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களை தெரிந்து கொண்டு வாக்குச்சாவடிக்குச் சென்றால் சிரமம் இருக்காது. குறிப்பாக முதல் முறை வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் இதை படிச்சிட்டு போங்க.
2019 பொது தேர்தலை ஒட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரங்கள் ஓய்ந்துள்ள நிலையில் வாக்களிக்கத் தயாராக இருக்கிறார்கள் வாக்காளர்கள். வாக்குச் சாவடிக்குச் செல்லும் முன்னர் வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்களை இங்கே காணலாம்.
இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் அனைவருமே வாக்களிக்க முடியாது. தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் மட்டுமே நீங்கள் வாக்களிக்க முடியும். கடந்த முறை வாக்களித்த உங்களது பெயர் இந்தமுறை வாக்காளர் பட்டியலில் இல்லையென்றால் உங்களால் வாக்களிக்க முடியாது.
உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இருக்கிறது ஆனால் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என தெரியவில்லையா கவலை வேண்டாம். ஆன்லைனிலேயே இதனை சரி பார்த்துக் கொள்ள முடியும்.
உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் தேடுவது எப்படி?
தேசிய வாக்காளர் சேவைதளமான NVSP-யின் (https://www.nvsp.in/) பக்கத்தில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை இரண்டு வழிகளில் அறிந்துகொள்ள முடியும். உங்களைப் பற்றிய தகவல்களை உள்ளீடு செய்தும், வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கும் EPIC எண்ணைப் பதிவு செய்து தெரிந்துகொள்ள முடியும்.
EPIC எண் வைத்து தேடுவது எப்படி?
1. NVSP Electoral Search (எலக்ட்ரோல் தேடல்) பக்கத்தில் Search by EPIC No என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
2. அதில் EPIC எண்ணைப் பதிவுசெய்த பிறகு, மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து பின்னர் தேடுக பட்டனை அழுத்த வேண்டும்.
3. உங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும்பட்சத்தில், Search பட்டனுக்குக் கீழ் உங்களின் பெயரை காண்பிக்கும்.
EPIC எண் இல்லாதவர்கள் எப்படி தேடுவது?
1. NVSP Electoral Search (எலக்ட்ரோல் தேடல்) பக்கத்திலேயே Search by Details (தகவல்களை உள்ளீடு செய்து) என இருப்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
2. அதில் உங்களின் பெயர், பாலினம், வயது, தொகுதி உள்ளிட்ட விவரங்களைப் பதிவிட்ட பின் தேடல் பட்டனை அழுத்த வேண்டும்.
3. வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கும் பட்சத்தில் தேடுக பட்டனுக்குக் கீழ் உங்களின் பெயர் காண்பிக்கப்படும்.
என்விஎஸ்பி இணைய தேடல் பக்கத்தைப் போலவே இந்திய தேர்தல் ஆணைய பக்கத்திலும் வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை சரிபார்க்க முடியும்.
1. இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ பக்கமான https://eci.gov.in/ க்கு செல்லவும்
2. அதன் கீழ் பகுதியில் உள்ள 'SEARCH NAME IN VOTER LIST' க்கு செல்லவும்
3. அங்கு உங்களைப்பற்றிய தரவுகளை உள்ளீடு செய்து, தேடுக பொத்தானை அழுத்தவும்
4. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் அந்த விவரங்களைக் காட்டும்
அல்லது
1. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் நேரடியாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் http://www.elections.tn.gov.in/voterservices.aspx அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்லவும்.
2. தங்களது பெயர் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணைக்கொண்டு தேடி விபரங்களை காணலாம்.
இணையதள பக்கங்களுக்கு செல்லாமல் மொபைல் மூலமும் வாக்காளர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெற முடியும். உங்களது மொபைலில் EPIC என்று டைப் செய்துகொள்ள வேண்டும். இடம் விட்டு, உங்களது வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணை டைப் செய்து 7738299899 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால், வாக்குப்பதிவு குறித்து தகவல் மொபைலுக்கே வந்துவிடும்.
தேர்தல் ஆணையத்தின் உதவி எண்ணான 1950 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு வாக்குப்பதிவு மையம் உள்ளிட்ட அனைத்து விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.
தேர்தல் ஆணைய தேடுதல் பக்கங்கள் மட்டுமின்றி மாநகராட்சிகளில் உள்ள வாக்காளர்கள் அவர்கள் சார்ந்த மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திலும் தங்களுக்குத் தேவையான விவரங்களை பெற்றுக் கொள்ளலாம். உதாரணமாக சென்னை மாநகராட்சி வாக்காளர்கள் http://www.chennaicorporation.gov.in என்ற பக்கத்தில் loksabha elections 2019 என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து அதில் இருந்து தங்களது வாக்குச்சாவடி குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
கூகுள் ப்ளே ஸ்டோரில் voters helpline என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலியை பதிவிறக்கம் செய்தும் வாக்காளர்கள் தங்களுக்குத் தேவையான விவரங்களை பெற்றுக் கொள்ளலாம். Voter helpline ஆப் டவுன்லோட் செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.eci.citizen&hl=en_IN
அரசியல் கட்சிகள் மட்டுமே பூத் ஸ்லிப்புகளை வழங்கி வந்த நிலையில் இதிலும் வாக்காளர்களுக்கு சங்கடங்கள் இருக்கக் கூடாது என்பதற்காக தேர்தல் அதிகாரிகளை வைத்து பூத் ஸ்லிப்புகளை வழங்கி வருகிறது தேர்தல் ஆணையம். பூத் லெவல் அதிகாரிகள் பொதுமக்களை நேரடியாக சந்தித்து இதனை வழங்கி வருகின்றனர். பூத் ஸ்லிப் கிடைக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம் மேலே குறிப்பிட்ட என்விஎஸ்பி இணையதள பக்கத்திலேயே எந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க வேண்டும் உள்ளிட்ட விவரங்களை ஆன்லைனிலேயே தெரிந்து கொள்ளலாம்.
ஒரு வழியாக வாக்காளர் பட்டியலில் பெயரை சரிபார்த்து, வாக்குச்சாவடி எது என்பதையெல்லாம் தேடி கண்டுபிடித்து விட்டாலும் வாக்காளர் அடையாள அட்டை எங்கே என்று தெரியவில்லையா? பதற்றம் வேண்டாம், புகைப்படத்துடன் கூடிய எந்த அடையாள அட்டை இருந்தாலும் அதை எடுத்துச் சென்று வாக்களிக்கலாம், அதனை தவறவிட்டவர்கள் வாக்களிக்க வசதியாக 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்து வந்து வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதிக்கிறது.
அந்த ஆவணங்கள் இவைதான்
1. பாஸ்போர்ட்
2. ஓட்டுநர் உரிமம்
3. ஆதார் அட்டை
4. பான் கார்டு
5. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை
6. புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப்புத்தகங்கள்
7.தேசியமக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை
8. மகாத்மாகாந்தி தேசிய ஊரகவேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணிஅட்டை
9. தொழிலாளர் நலஅமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவகாப்பீட்டு ஸ்மார்ட் அட்டை
10. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்,
11. நாடாளுமன்ற சட்டமன்ற சட்டமேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாளஅட்டை.
கட்டுரையாளர் : கஜலட்சுமி