விண்வெளிக்குச் செல்லும் ‘Vyom Mitra’ என்னெல்லாம் செய்வாள் தெரியுமா?
விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முன்னர் பெண் ரோபோவை களமிறக்குகிறது இஸ்ரோ.
விண்வெளி ஆய்வுகளில் இந்தியா வல்லரசு நாடுகளுக்கு இணையாக வளர்ச்சி கண்டு வருகிறது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ராக்கெட்கள், செயற்கைக்கோள்கள் என்று படிப்படியாக உயர்ந்து வருகிறது இந்திய விண்வெளி ஆய்வு மையம். இதன் அடுத்த பரிமாணமாக விண்வெளிக்கு ரோபோவை அனுப்பி அங்கிருந்து தகவல்களைப்பெற திட்டமிட்டுள்ளது.
2022ம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை நோக்கி இஸ்ரோ விஞ்ஞானிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். விண்வெளி செல்லும் வீரர்கள் 4 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. மனிதனை அனுப்பும் முன்னர் சோதனை ஓட்டமாக மனித உருவிலான ரோபோவை 2020 டிசம்பர் மற்றும் 2021 ஜூன் மாதத்திலும் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
மனித உருவத்தினாலான ரோபோ ‘வியோம் மித்ரா’ (vyom mitra) கலக்கலாக தயாராகி இருக்கிறார். தொலைவில் இருந்து பார்ப்பவர்கள் மனிதனா, ரோபோவா என்று சந்தேகப்படும் தோற்றத்தில் வியோம் மித்ரா காண்பவர்களை ஆச்சரியப்படுத்துகிறார். ஃபார்மல் உடையில், அழகிய சிகையலங்காரம், சிமிட்டும் கண்கள், எதிர் நிற்பவர்களுடன் மென்மையான கலந்தரையாடல் என்று வியக்க வைக்கிறார் வியோம் மித்ரா.
வியோம் மித்ராவை இஸ்ரோ தலைவர் சிவன் பத்திரிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். வந்திருந்தவர்களுக்கு வணக்கம் தெரிவித்துக் கொண்டு பேச ஆரம்பித்தார் வியோம்.
நான் முதல் மனித உருகொண்ட ரோபோ. என்னால் விண்வெளி ஆராய்ச்சியாளர்களை அடையாளம் கண்டு, அவர்களுடன் உரையாடவும், கேள்விகளுக்கு பதிலளிக்கவும் முடியும். விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் செய்யும் பணிகளான ஸ்விச் பேனல் ஆபரேசன், எச்சரிக்கும் பணிகள் மற்றும் விண்வெளி வீரர்களுடன் சக பயணியாக பயணித்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும் என்று கூறினார்.
வியோம் மித்ரா என்பதன் சமஸ்கிருத அர்த்தம் ’விண்வெளி நண்பன்’. வியோமித்ரா குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரோ தலைவர் சிவன்,
மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் முன்னர் மனித உருவிலான ரோபோவை அனுப்பி சோதனை நடத்த உள்ளோம். மனிதன் செய்யும் அனைத்துப் பணிகளையும் ரோபோ விண்வெளியில் செய்யும், திட்டம் சரியான முறையில் சென்று கொண்டிருக்கிறதா என்று கண்காணித்து தகவல்களை அனுப்பும், என்றார்.
ககன்யான் திட்டத்தை நோக்கி நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டில் இதற்காக பல்வேறு சோதனைகள் நடத்தப்பட உள்ளன. இந்த ஆண்டு இறுதியில் ஆளில்லா விண்கலனையும், ரோபோவையும் விண்வெளிக்கு அனுப்பி பரிசோதனை நடத்த உள்ளோம்.
ரோபோ வியோமித்ரா சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, விண்வெளியில் environment control life support system மனிதர்களுக்கு பொருந்துகிறதா என்பதும் ரோபோ மூலம் சரிபார்க்கப்படும் என்றும் சிவன் கூறியுள்ளார்.
எந்த ஒரு செயலையும் உருவாக்குவது பெண்களே, இஸ்ரோவின் வரலாற்றில் மைல்கல் பதிக்கப் போகும் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் முதல் ஆளாக களமிறங்கும் வியோம் மித்ரா வெற்றியோடு திரும்புவாள்!