இந்திய ஸ்டார்ட் அப்’களுக்கு சுதந்திரம் என்றால் என்ன?
இந்தியா 73 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், மூலதனம் உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் ஸ்டார்ட் அப்களுக்கு சுதந்திரம் என்றால் என்ன என்பது பற்றி ஒரு பார்வை.
இந்தியா தனது 73வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், நாட்டின் ஸ்டார்ட் அப்களும் ஏஞ்சல் டாக்சில் இருந்து விடுதலை எனும் பரிசை முன்கூட்டியே பெற்றுள்ளன. ஆகஸ்ட் 10ம் தேதி வெளியிட்ட அறிவிக்கையில், நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம், ஸ்டார்ட் அப்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இனி இந்த வரிக்கு இலக்காக மாட்டார்கள் என தெரிவித்துள்ளது.
இதற்கு முன், நாட்டின் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தலைக்கு மேல் தொங்கிய கத்தியாக ஏஞ்சல் டாக்ஸ் இருந்தது. பல ஆண்டு போராட்டம் மற்றும் அரசுடனான உரையாடல்களுக்குப் பிறகு, ஸ்டார்ட் அப்களின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது.
அரசு மற்றும் ஸ்டார்ட் அப் சூழலில் உள்ளவர்கள், தற்போதுள்ள நிலையை அலசி ஆராய்ந்து முன்னேறுவதற்கான பாதையில் கவனம் செலுத்துவது இப்போது அவசியமாகிறது. உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட் அப் சூழல் எனும் நிலையில் உள்ள இந்தியா மிக விரைவில் இரண்டாவது இடத்தை பிடிக்க உள்ளது.
2016ல் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தை அறிவித்ததன் மூலம் அரசும் ஸ்டார்ட் அப் துறைக்கு தேவையான ஊக்கத்தை வழங்கியுள்ளது.
சவால்கள்
இருப்பினும், நாட்டில் ஸ்டார்ட் அப் சூழல் பல்வேறு சவால்களை இன்னமும் சந்திக்கும் நிலை உள்ளது. மூலதனம், மார்க்கெட் தேவை மற்றும் வர்த்தகம் செய்யும் தன்மை உள்ளிட்ட சவால்கள் உள்ளன.
லோக்கல் சர்கிள்ஸ் நிறுவன தலைவர் சச்சின் டப்பாரியா, தேவை மற்றும் ரொக்க புழக்கம், ஸ்டார்ட் அப்களுக்கான பெரிய சவாலாக இருப்பதாக கூறுகிறார். பிடித்தம் செய்யப்படும் வரியை திரும்பப் பெறுவதில் தாமதம் ஏற்படுதவால், தற்போதுள்ள ஜிஎஸ்டி வரி முறை ஸ்டார்ட் அப்களுக்கு அணுகூலமாக இல்லை.
மொத்த ரொக்க புழக்கமும் பாதிக்கப்படுவதால் இது ஸ்டார்ட் அப்களுக்கு பெரிய தடையாக அமைகிறது. ஒரு மாத கால தாமதம் கூட அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம்.
”நாட்டில் ஸ்டார்ட் அப்கள் தொழில் செய்வதை மேலும் எளிதாக்க வேண்டும் என்கிறார், எக்ஸ்பினிட்டி வென்சர்ஸ் தலைவர் வி.பாலகிருஷ்ணன். ஒரு ஸ்டார்ட் அப்பை துவக்குவது மற்றும் மூடுவதில் உள்ள சிக்கல்களை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
அதே நேரத்தில் இந்திய ஸ்டார்ட் அப்களுக்கு மூலதனமும் சிக்கலாக இருக்கிறது. நிலைபெற்ற ஸ்டார்ட் அப்களுக்கு இது ஒரு பிரச்சனை இல்லை என்றாலும், புதிய நிறுவனங்கள் தடுமாறுகின்றன.
நிதி
ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்ய அரசு, ரூ.10,000 கோடி நிதியை ஏற்படுத்தினாலும் இந்த நிதி முழுவதும் பயன்படுத்தப்படவில்லை. மத்திய பட்ஜெட்டில் இந்த நிதி அதிகரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை.
“நாட்டுக்குள் இருக்கும் மூலதனம், ஸ்டார்ட் அப் முதலீடாக மாறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,” என்கிறார் 3ஒன்4கேபிடல் நிறுவன பாட்னர் சித்தார்த் பை.
உள்ளூர் மூலதனம், தங்கம், ரியல்ஸ் எஸ்டேட் மற்றும் பங்குகளில் முதலீடு செய்யப்படுவதாக ஒரு கருத்து இருக்கிறது. ஸ்டார்ட் அப்களுக்கான பிரத்யேக பங்குச்சந்தை மேடையும் தேவை என்று கருதப்படுகிறது. செபி இது தொடர்பான முயற்சியை மேற்கொண்டு வந்தாலும், இன்னமும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
ஊக்கம்
இது போன்ற பிரச்சனைகள் நிலவி வரும் சூழலில், ஸ்டார்ட் அப்கள் தேவையை பெருக்கிக் கொள்ள அரசை எதிர்நோக்கியுள்ளன. கொள்முதலில் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஸ்டார்ட் அப்களுக்கு என்று அரசு ஒதுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
“மத்திய அரசு கொள்முதலில் 20 சதவீதம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களிடம் இருந்து பெற வேண்டும் என ஏற்கனவே விதி உள்ளது. ஆனால், இது களத்தில் நிகழவில்லை. இதற்கு உந்துசக்தி தேவைபப்டுகிறது,” என்கிறார் சச்சின்.
இந்திய ஸ்டார்ட் அப்கள் பல்வேறு துறையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அவற்றுக்குத் தேவையான ஊக்கத்தை அளிப்பதன் மூலம் பெரிய அளவிலான வளர்ச்சிக்கு வித்திடலாம்.
ஆங்கிலத்தில்: திம்மையா பூஜாரி | தமிழில்: சைபர்சிம்மன்