தமிழகத்தில் 2.2 கோடி பேரை கொரோனா தாக்கி இருக்கிறது: ‘ஹெர்ட் இம்யூனிட்டி’ என்றால் என்ன?
கொரோனா உள்ளுக்குள் வந்து போனதே தெரியாமல் குணமானவர்கள் ஏராளம் என்பது புதிய ஆய்வு முறையான `செரோ’ மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
என்ன நடக்கிறது, கொரோனாவோடு நாம் வாழப் பழகி விட்டோமோ இல்லை கொரோனா நம்மோடு வாழப் பழகி விட்டதா என்ற சந்தேகம் நமக்கே ஏற்பட்டுவிடும் போலிருக்கிறது. ஆனால், அதற்கெல்லாம் பதில் ஆய்வுகள் மூலம் கிடைத்தது. ஆம், கொரோனா அரக்கனிடமிருந்து இந்திய மக்களை அப்போது காப்பாற்றியது ஹெர்ட் இம்யூனிட்டி (Herd immunity) எனப்படும் மந்தை நோய் எதிர்ப்பாற்றல் தான்.
தமிழ்நாட்டில் இதுவரை 8 லட்சத்து 42 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். முறைப்படி நடத்தப்பட்ட பரிசோதனையின் மூலம் கூறப்படும் எண்ணிக்கைதான் இது. ஆனால், கொரோனா உள்ளுக்குள் வந்து போனதே தெரியாமல் குணமானவர்கள் ஏராளம் என்பது தற்போது புதிய ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதை ‘செரோ’ 'Sero' என்ற கொரோனா ஆய்வு முறையில் கண்டுபிடித்து வருகின்றனர். நமது உடலில் கொரோனா தாக்கி இருந்தால் அதை எதிர்த்து போராடுவதற்காக ஆன்டிபாடி எனும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கும். ரத்த மாதிரியை எடுத்து ஆன்டிபாடி டெஸ்ட் மூலம் பார்க்கும் போது அதை கண்டுபிடிக்க முடியும்.
இதற்கு செரோ தொழில்நுட்ப முறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது சம்மந்தமாக இந்தியா முழுவதும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் அமைப்பான தேசிய தொற்றுநோய் மையம் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழக பொதுச் சுகாதாரத்துறை சார்பில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பர் வரை இது தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டது. மொத்தம் 37 மாவட்டங்களில் 26 ஆயிரத்து 640 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்ட இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 31.6 சதவீதம் பேருக்கு கொரோனா தாக்கி இருப்பது தெரியவந்தது.
தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை 7 கோடியே 20 லட்சம் ஆகும். இந்த ஆய்வின் கணக்கின்படி நவம்பர் 2020 வரை, 2 கோடியே 20 லட்சம் பேரை கொரோனா தாக்கி இருக்கிறது. அதாவது தமிழ்நாட்டில் 10-ல் 3 பேருக்கு கொரோனா தாக்கம் இருந்துள்ளது இதில் தெரியவந்துள்ளது.
அக்டோபர் மாத புள்ளிவிவரப்படி தமிழ்நாட்டில் 6 லட்சத்து 70 ஆயிரத்து 392 பேரை கொரோனா தாக்கி இருந்ததாக அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டு இருந்தது. ஆனால், இந்த ஆய்வுப்படி அதைவிட 36 மடங்கு அதிகமான மக்கள் கொரோனா தாக்குதலுக்கு ஆளானதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொருத்தவரை நகரப் பகுதிகளில் 36.9 சதவீதம் பேருக்கும், கிராமப் பகுதிகளில் 26.9 சதவீதம் பேருக்கும் கொரோனா நோய் ஏற்பட்டுள்ளது.
இவ்வளவு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அது ஏன் வெளியில் தெரியவில்லை என்ற சந்தேகம் வரலாம். அதற்குக் காரணம் நோய்ப் பாதிப்புக்கு ஆளான பலரும் ஏசிம்ட்மாட்டிக் எனப்படும் அறிகுறி இல்லாத நிலையில் இருந்தது தான். சாதாரண காய்ச்சல், சளி, இருமல் என்ற நினைப்பிலேயே கொரோனாவைப் பலர் ஜெயித்திருக்கிறார்கள். ஆனால் இதன் மூலம் தான் தமிழகத்தில் ஹெர்ட் இம்யூனிட்டி அதிகரித்துள்ளது.
Herd Immunity என்றால் என்ன?
ஹெர்ட் இம்யூனிட்டி, என்கிறார்களே அப்படி என்றால் என்ன என்பது தானே உங்களது அடுத்த சந்தேகம். இதோ ஹெர்ட் இம்யூனிட்டி அதாவது மந்தை நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன? அது எப்படி கொரோனாவுக்கு எதிராக வேலை செய்கிறது என்பதைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
இது பற்றி வைரலாஜிஸ்ட் மருத்துவர் ஜெயஸ்ரீ கூறுகையில்,
“ஹெர்ட் இம்யூனிட்டி என்றால் பாப்புலேஷன் இம்யூனிட்டி என்று கூறலாம். அதாவது குறிப்பிட்ட ஏரியாவில், எடுத்துக்காட்டிற்கு சென்னை என எடுத்துக் கொண்டால், இங்கு 30லிருந்து 40 சதவீதம் வரை மக்கள் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அவர்களில் அறிகுறி இல்லாமல் ஏசிம்டமேட்டிக்காக இருப்பவர்கள் தானாகவே நோய்ப் பாதிப்பிலிருந்து குணமாகி வந்து விடுவார்கள். இதனால் இயற்கையாகவே அவர்களது உடம்பில் சம்பந்தப்பட்ட நோய்க்கு எதிரான எதிர்ப்பாற்றல் வந்து விடும். இப்படியாக அந்தப் பகுதியில் 70 சதவீதம் பேர் சம்பந்தப்பட்ட நோய்த்தாக்குதலுக்கு ஆளாகி நோய் எதிர்பாற்றலைப் பெறும் போது, மீதமுள்ள 30 சதவீதம் பேருக்கு நோய்ப் பரவாமல் தடுக்கப்பட்டு, தானாகவே அந்த நோயில் இருந்து காப்பாற்றப்பட்டு விடுவர். இதுதான் ஹெர்ட் இம்யூனிட்டி,” என்கிறார்.
எல்லா வைரஸ்களுக்கு எதிராக ஒரு ஆன்டிபாடி உடம்பில் இருக்கும். அதைத்தான் ஹெர்ட் இம்யூனிட்டி என்கிறோம். இந்த ஹெர்ட் இம்யூனிட்டியானது இயற்கையாகவோ அல்லது தடுப்பூசிகள் மூலமாக உருவாகலாம்.
சமீபத்தில் நடத்தப்பட்ட செரா ஆய்வில் 30 சதவீதம் பேருக்கு ஆண்டிபாடி பாசிட்டிவ்வாக வந்துள்ளது. இதன்மூலம் ஏசிம்டமேட்டிக்காக அவர்கள் கொரோனாவைக் கடந்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் தான் ஹெர்ட் இம்யூனிட்டி உருவாகி, தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ச்சியாக குறைந்து வந்துள்ளது.
“நமது உடம்பில் மெமரி செல்கள் உள்ளன. அவை ஏற்கனவே பாதிக்கப்பட்ட நோய் மீண்டும் தாக்க வரும் போது, அதற்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கி விடும். ஆன்டிபாடி மறைந்தாலும்கூட, இந்த மெமரி செல்கள் எதிர்காலத்தில் கொரோனாவிற்கு எதிராகப் போராடும் என இப்போதைக்கு நாம் நம்புகிறோம். இன்னமும் நாம் கொரோனா பயத்தில் இருந்து முழுமையாக விடுபடவில்லை. தொடர்ந்து கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து வருவதால், நாம் செய்ய வேண்டிய ஆராய்ச்சிகள் அதிகம் உள்ளது.
எனவே, ஹெர்ட் இம்யூனிட்டி உள்ளது என அலட்சியமாக இருக்காமல், அனைவரும் சரியான தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளும் வரை தொடர்ந்து மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் போன்றவற்றைப் பின்பற்றுவது கட்டாயம்,” என்கிறார் மருத்துவர் ஜெயஸ்ரீ.