Infosys நிறுவன பங்குகள் ஒரே நாளில் 17% சரிந்ததன் பின்னணி என்ன?
உலகின் இரண்டாவது பெரிய மென்பொருள் நிறுவனமான இன்போசிஸின் பங்குகள் ஒரே நாளில் சரிந்ததற்கு என்ன காரணம்?
ஆசியாவிலேயே 2வது பெரிய மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் தலைவர்களின் சர்ச்சை பேச்சுகளால் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. இந்தியாவின் தொழில்நுட்ப ஜாம்பவானாகத் திகழும் இந்த நிறுவனம் ஊழியர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரி சலீல் பரேக் மற்றும், தலைமை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய் ஆகியோர், குறுகிய கால வருவாய் மற்றும் லாபத்தை உயர்த்துவதற்காக, நெறிமுறையற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாக, 'நெறிமுறை கொண்ட ஊழியர்கள்' என்ற பெயரில், ஒரு குழுவினரால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தலைமை நிர்வாகிகள் இருவரும் கடந்த 2 காலாண்டுகளாக சில நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து வர்த்தகம் தொடர்பாக தவறான தகவல்களையும், உண்மையை திரித்தும் மறைத்தும் பங்குச் சந்தை உள்ளிட்ட சட்ட அமைப்புகளுக்கு அளித்திருப்பதாகவும் ஊழியர்கள் குழு குற்றம்சாட்டியுள்ளது. தங்களது மோசடிகளை இவர்கள் ஆடிட்டர் குழுவிற்கும், இன்போசிஸ் நிறுவனத்திற்குமே கூட தெரியாத அளவிற்கு பார்த்துக் கொண்டுள்ளதாகவும் இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவர்களின் மோசடி தொடர்பான ஈமெயில்கள், வாய்ஸ் ரெக்கார்ட்டுகள் சில தங்களிடம் உள்ளதாக கூறும் ஊழியர்கள் குழு கடந்த செப்டம்பர் மாதத்தில் இது தொடர்பாக இன்போசிஸ் நிறுவனத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர்.
எனினும் அந்தப் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அமெரிக்காவில் இருக்கும் விஸ்டில் ப்ளோயர் புரோகிராம் அலுவலகத்திற்கு ஊழியர்கள் குழு கடிதம் எழுதியுள்ளது. இதனையடுத்து விஸ்டில் ப்ளோயர் இன்போசிஸ் நிறுவனத்திடம் இது குறித்து விளக்கம் கேட்டதையடுத்து இந்த விவகாரம் வெளிவந்துள்ளது.
இன்போசிஸ் தலைமை நிர்வாகிகள் மீதான குற்றச்சாட்டுகளை அடுத்து அக்டோபர் 22ம் தேதி ஒரே நாளில் அந்த நிறுவனத்தின் பங்குகள் சுமார் 17 சதவிகிதம் சரிந்தது. இதனால், நிறுவனத்தின் சந்தை மதிப்பும், 53 ஆயிரத்து, 451 கோடி ரூபாய் அளவுக்கு குறைந்தது.
இரண்டு உயரதிகாரிகள் மீது, ஊழியர்கள் குழுவினர் குற்றம் சாட்டியிருக்கும் நிலையில், நிறுவனத்தின் நடைமுறைப்படி இந்த புகாரானது தணிக்கைக் குழுவுக்கு அனுப்பப்பட்டு துறை ரீதியான விசாரணையானது தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் இன்போசிஸ் பங்குகள் 1 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
தகவல் உதவி : தி எகனாமிக் டைம்ஸ் | கட்டுரையாளர் : கஜலெட்சுமி