வருங்கால சுஜித்களை காக்க பயன்படாத ஆழ்துளைக் கிணறுகளை நாம் என்ன செய்ய வேணும்?
தண்ணீர் தேடித் தோண்டப்பட்ட ஆழ்துளைக் கிணறு 2 வயது சிறுவன் சுஜித்துக்கு மரணக் குழியாக மாறி பெற்றோருக்கு கண்ணீரை மட்டுமே தந்திருக்கிறது. இந்த மரணங்களை தடுக்க நாம் என்ன செய்ய வெண்டும்?
பூமித்தாயின் கருவறைக்குள் அக்டோபர் 25ம் தேதி மாலை 5.30 மணியளவில் சரிந்து விழுந்த 2 வயது சிறுவன் சுஜித்திற்காக உலகமே பிரார்த்தனை செய்தது. திருச்சி மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த பிரிட்டோ ஆரோக்கியதாஸ், கலாமேரி தம்பதியின் இளைய மகன் சுஜித் வில்சன். பிரிட்டோ தனது வீட்டின் பின்புறம் 600 அடியில் அமைத்த ஆழ்துளை கிணற்றை தண்ணீர் கிடைக்காததால் மண்போட்டு மூடிவைத்துள்ளார்.
அண்மையில் பெய்த மழையில் மண் உள்வாங்கி ஆழ்துளை கிணறு திறந்ததை ஆரோக்கியதாஸ் கவனிக்காமல் விட்டுள்ளார். விவசாயப் பகுதியில் துள்ளி விளையாடிக் கொண்டிருந்த சுஜித் எதிர்பாராத விதமாக ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 27 அடியில் சிக்கிக்கொண்டான். உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் அங்கு படையெடுக்க மீட்புப்பணிகள் விறுவிறுப்பாக நடந்தது.
ஆழ்துளை கிணறுகளில் சிக்கிக்கொள்பவர்களை மீட்கும் குழுவினர் சுஜித்தின் கைகளை கயிறால் கட்டி மேலே இழுக்க முயன்றனர். அது தோல்வியடைந்ததால், பக்காவாட்டில் குழி தோண்டும் பணி தொடங்கியது. இந்த அதிர்வினால் சுஜித் இருந்த குழியில் மண்சரிவு ஏற்பட்டதால் 27 அடியில் இருந்த அச்சிறுவன் 88 அடிக்குச் சென்றான்.
தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், மாநில பேரிடர் மீட்புக்குழு, அண்ணா பல்கலை குழு, ஐஐடி வல்லுநர்கள், என ஆயிரக்கணக்கானோர் சுஜித்தை வெளியே கொண்டு வருவதற்காக இரவு பகல் பாராமல் உணவு, உறக்கமின்றி வேலையில் இறங்கினர். கடைசியில் சுஜித்தை வெளியில் எடுக்க ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகே 3 மீட்டர் இடைவெளியில் ரிக் இயந்திரம் கொண்டு 100 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி பக்கவாட்டில் சுரங்கம் அமைத்து குழந்தையை மீட்க முடிவு செய்தனர்.
நாடே தீபாவளி கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் ’சுஜித் நீ மீண்டு வந்தால் மட்டுமே உண்மையான தீபாவளி’ என்று பிரபலங்களும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
மிகக்கடினமான பாறைகளைக் கொண்ட பகுதி என்பதால் ரிக் இயந்திரம் அடிக்கடி பழுதானதோடு, மழை பணியைக் குறுக்கிட்டது. எல்லாத்தடைகளையும் முறியடித்து மீட்புப்பணிகள் தொடர்ந்தாலும் அது இறுதியில் பலன் கொடுக்கவில்லை.
சுஜித் உலகத்திற்கே செல்லப்பிள்ளை ஆகியிருந்து, அவன் உயிர் பிழைக்க பல லட்ச மக்கள் பிரார்த்தனை செய்தும், 80 மணி நேரத்தைக் கடந்து ஆயிரக்கணக்கானோர் எடுத்த பல்வேறு முயற்சிகள் நேற்று இரவு உடைந்து போனது.
சுஜித் விழுந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து அழுகிய துர்நாற்றம் வீசத் தொடங்கியதால் அவனது மரணம் உறுதி செய்யப்பட்டது. இருந்தாலும் தீயணைப்பு வீரர்கள் தொடர் முயற்சியால் ஆழ்துளைக் கிணற்றுக்குள் இருந்து சுஜித்தின் சடலத்தை மீட்டுக் கொண்டு வந்தனர்.
பொட்டலம் போல தார்ப்பாயில் சுற்றி எடுக்கப்பட்ட சுஜித்தை பார்த்து பெற்றோர் மட்டுமல்ல, மீட்புப்பணியில் ஈடுபட்டவர்கள், அந்த கிராம மக்கள் என உலகமே அவனுக்காக கண்ணீர் விட்டது. சுஜித்தின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஆழ்துளை கிணறுகளால் பயன்பாடு இல்லை என்றால் அதனை முறையாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது. அதனை பலரும் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. 2009ம் ஆண்டு முதல் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளின் சுஜித்தையும் சேர்த்து 13 குழந்தைகள் ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்திருக்கின்றன. இவர்களில் 2 பேர் தவிர மற்ற குழந்தைகள் பரிதாபமாக உயிழந்தன. தமிழகத்தைப் போலவே அதிக ஆழ்துளை கிணறு விபத்துகளை சந்திக்கும் மாநிலம் பஞ்சாப்.
குழந்தைகளை காவு வாங்கும் ஆழ்துளை கிணறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அந்த மாநில முதல்வர் தனது 'தந்துருஸ்த் பஞ்சாப் மிஷன்' எனும் தூய்மை சுற்றுச்சூழல் திட்டத்தின் கீழ் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளின் உரிமையாளர்கள் அனைவர் மீதும் சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகள் குறித்து தகவல் தருபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என அறிவித்தும் பயனற்ற ஆழ்துளை கிணறுகளின் இருப்பிடத்தை கண்டறிந்தனர்.
ஆழ்துளை கிணற்றிற்குள் குழந்தை விழுந்த பின்னர் பதற்றப்படுவதைவிட அவற்றில் பயனற்றவற்றை முன்கூட்டியே கண்டறிந்தால் உயிர்ப்பலியை தவிர்க்கலாம்.
ஆழ்துளை கிணறு விபத்துகளை தவிர்க்க என்ன செய்யலாம் என்பதற்கான சில வழிகள் இதோ:
1. தமிழகத்தில் 2015ம் ஆண்டு வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட சட்டத்தில் பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணறுகளை ஏற்கனவே இருந்த நிலத்தின் சமத்திற்கே களிமண், சிமெண்ட் கொண்டு முழுவதுமாக பூசி மூட வேண்டும். அல்லது இரும்புத் தகடு கொண்டு மூடி பாதுகாப்பாக சீலிட வேண்டும். இந்தச் சட்டத்தை மாவட்ட நிர்வாகிகள் தீவிரமாக அமல்படுத்த வேண்டும். விதிகளை மீறுவோருக்கு 3 ஆண்டு முதல் 7 ஆண்டு வரை தண்டனையும் கொடுக்க சட்டத்தில் இடம் இருக்கிறது.
2. பயனற்ற ஆழ்துளைக் கிணறுகள், பாழுங்கிணறுகள் உங்கள் ஊரில் இருந்தால் முதல்வரின் பிரத்யேக குறைதீர் பெட்டிக்கு இந்தத் தகவலை அனுப்ப முடியும். [email protected] என்ற முகவரிக்கு மூடப்பாடாத அல்லது ஆபத்தான நிலையில் இருக்கும் ஆழ்துளை/ கிணறுகள் குறித்த முழு விபரங்களை மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது http://cmcell.tn.gov.in இணைய தளத்திலும் இதுகுறித்த முழுமையான விவரங்களுடன் புகாரினைப் பதிவு செய்யலாம்.
3. பயனற்றுக் கிடக்கும் ஆழ்துளை கிணறுகளைச் சுற்றி பாதுகாப்புச் சுவர் எழுப்பி பைப்புகள் அமைத்து சுற்றுப்புறத்தில் வீணாகப் போகும் மழை நீரை வடிகட்டிகள் மூலம் சுத்தமான நீராக ஆழ்துளை கிணற்றுக்குள் விடலாம் . பல ஆயிரங்கள் செலவு செய்து வீணாகக் கிடக்கும் ஆழ்துளைக் கிணறுகளை சில ஆயிரங்கள் செலவு செய்தாலே மழைநீர் சேமிப்புக் குழாய்களாக பயன்படுத்தலாம்.
இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருங்கால சுஜித்களை காக்க நாமும் கைக்கோர்ப்போம்.