வாட்ஸ் அப் செய்திகளை ஃபார்வேடு செய்வதில் இனி கட்டுப்பாடு...
கொரோனா வைரஸ் தொடர்பான தவறான தகவல்கள் வைரலாக பரவுவதை தடுக்கும் வகையில் வாட்ஸ் அப், கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான, வாட்ஸ் அப், கொரோனா வைரஸ் தொடர்பான தவறான தகவல்கள் பரவலை தடுக்கும் வகையில் தனது சேவையில், செய்திகளை ஃபார்வேர்டு செய்யும் வரம்பை குறைத்துள்ளது.
ஒரு நேரத்தில், ஒரு சாட் மட்டுமே ஃபார்வேர்டு செய்ய முடியும் என வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. ஒரு செய்தி ஏற்கனவே ஐந்து அல்லது மேற்பட்ட முறை ஃபார்வேர்டு செய்யப்படும் போது இந்த வரம்பு பொருந்தும்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைரலாகப் பரவுவதை கட்டுப்படுத்த மற்றும் பயனாளிகள் செய்திகளை அனுப்புவதில் வரம்பை கொண்டு வர, இந்த வகை செய்திகள் தொடர்பாக மேற்கொண்டு தகவல்கள் அறியவும் வாட்ஸ் அப் வழி செய்துள்ளது.
"அடிக்கடி ஃபார்வேர்டு செய்யப்படும் செய்தி அருகே பூதக்கண்ணாடி அடையாளம் தோன்றும். இதன் மூலம் பயனாளிகள் அது தொடர்பாக இணைய தேடல் மேற்கொண்டு செய்திகள் அல்லது மற்ற தகவல்களை தெரிந்து கொள்ளலாம். ஃபார்வேர்டு செய்வதற்கு முன் தகவல்களை சரி பார்த்துக்கொள்வது வதந்திகள் பரவுவதை குறைக்கும். இந்த வசதி சோதனை முறையில் உள்ளது. விரைவில் அப்டேட் செய்யப்படும்,” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் அண்மைக்காலமாக தவறான செய்திகளுக்கு எதிராகப் போராடி வருவதாக தெரிவித்துள்ளது. 2019 ஜனவரி மாதம், வைரல் தன்மையை குறைக்க, ஒரு செய்தி ஐந்து முறை மட்டுமே ஃபார்வேர்டு செய்யப்பட முடியும் எனும் வரம்பை கொண்டு வந்தது. புதிய பிரைவசி அமைப்புகளையும் அறிமுகம் செய்தது.
மொத்த அல்லது தானியங்கி செய்திகளை கட்டுப்படுத்த மாதந்தோறும் இரண்டு மில்லியன் கணக்குகளை தடை செய்வதாகவும் வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. இந்த முயற்சி தொடர்பான வெள்ளை அறிக்கையையும் வெளியிட்டது.
கொரோனா வைரசை எதிர்த்து போராடும் முயற்சியாக, உலக சுகாதார அமைப்பு மற்றும் யூனிசெப் உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து வாட்ஸ் அப், கொரோனா வைரஸ் தகவல் மைய வசதியை துவக்கியுள்ளது. சுகாதாரப் பணியாளர்கள், கல்வியாளர்கள், சிறு வணிகர்கள் பரஸ்பரம் உதவிக்கொள்ள இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அண்மையில், 24 மணி நேரமும் நம்பகமான தகவல்களை அளிக்க, WHO கொரோனா வைரஸ் சுகாதார அலெர்ட் சேவையை அறிமுகம் செய்தது. இந்தியாவில், அரசுடன் இணைந்து MyGov Corona Helpdesk சேவை வாட்ஸ் அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களிலும் இதே போன்ற சேவை அறிமுகம் ஆகியுள்ளது. இவற்றை அணுக: (தில்லி+91 88000 07722, மகாராஷ்டிரா +91 20 2612 739, குஜராத் +91 74330 00104,தெலுங்கானா +91 90006 58658 கேரளா +91 90722 20183. இந்த சேவை மூலம் நம்பகமான தகவல்களை ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழிகளில் பெறலாம். மேலும் உதவி எண்கள் அறிமுகம் ஆக உள்ளன.
ஆங்கிலத்தில்: ராஷி வர்ஷினி | தமிழில்: சைபர்சிம்மன்