கொரோனோ எப்போது முடிவுக்கு வரும்?
உலகம் முழுவதும் உள்ள மக்கள் மனதில் உலவும் ஒரே கேள்வி கொரோனாவில் இருந்து எப்போது விடிவு கிடைக்கும்? இதற்கு பிரபல விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் சொல்லும் ரியல் சயின்ஸ்!
உலக உருண்டையை போர்த்தி இருக்கிறது கொரோனா வைரஸ் எனும் மற்றொரு உருண்டை மருத்துவ உலகிற்கு சவால் விடுக்கும் இந்த வைரஸை கட்டுப்படுத்தும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் கட்டுப்படுத்த முடியாமல் போய்க்கொண்டிருக்கிறது நோய் பரவலும், உயிர்பலிகளும்.
கொரோனாவால் மக்களுக்கு இருக்கும் அச்சங்கள் குறித்து மத்திய அரசின் விஞ்ஞான் பிரசாரில் பணியாற்றும் முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் இடம் யுவர் ஸ்டோரி தமிழ் முன்வைத்த கேள்விகளும் அதற்கான பதில்களும் இதோ:
கொரோனா வைரஸ்-ன் பரவல் இந்தியாவில் எந்த அளவில் இருக்கிறது?
கொரோனா நோய் பரவலைப் பார்ப்பதற்குச் சாதாரணமாக இருக்கலாம், முதல் நாள் ஒருவருக்கு தொற்று இருக்கும், 3வது நாள் 4 பேருக்கு இருக்கும். உலக நாடுகள் இந்த நோயையா பார்த்து அலறுகின்றன என்று தோன்றும். ஆனால் இதே விகிதத்தில் நோய் பரவலைக் கணக்கிட்டால் 12வது நாளில் 1 லட்சம் பேருக்கு நோய் பரவல் ஏற்பட்டிருக்கும். மற்ற நாடுகளைப் போலத் தான் இந்தியாவிலும் நோய் பரவலானது தொடங்கி இருக்கிறது. ஆனால் அமெரிக்கா, இதாலியை ஒப்பிடும் போது அவர்கள் செய்த தவறை செய்யாமல் இந்தியா முன்னரே ஊரடங்கு நடவடிக்கையை முன் எடுத்திருக்கிறது.
இந்தியர்களுக்கு அதிக நோய் எதிர்ப்புச் சக்தி இருப்பதால் கொரோனா தாக்காது என்பது உண்மையா?
இந்தியர்களுக்கு அதிக நோய் எதிர்ப்புச் சக்தி இருப்பதால் கொரோனா தாக்காது. இங்கு அதிக வெயில் இருப்பதால் நோய் தாக்காது, பிசிஜி தடுப்பூசி போடப்படுவதால் நோய் தாக்காது என்றெல்லாம் மக்கள் மத்தியில் கருத்துகள் பரவுகிறது. இவையாவுமே நமக்கு இருக்கும் நப்பாசை தானே தவிர வேறெதுவும் இல்லை. இப்படி உலா வரும் தகவல்கள் உண்மை தான் என்பதற்கான அறிவியல்பூர்வமாக எந்த ஆதாரமும் இல்லை. நாம் எடுக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மட்டுமே நோயை கட்டுப்படுத்தும்.
கொரோனா வைரஸ் உயிர்வாழ எது முக்கியம்?
கொரோனா வைரஸ் மனித உடம்பில் மட்டுமே உயிர் வாழ்கிறது. மனிதனின் உடலில் 14 நாட்கள் முதல் 28 நாட்கள் வரை மட்டுமே இந்த வைரஸ் உயிர் வாழும். இந்த நாட்களுக்குள் ஒன்று வைரஸ் மனிதனை வென்றுவிடும், அல்லது மனிதன் தனக்கு ஏற்கனவே இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை வைத்து வைரஸை வென்று விடுவான். இது தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
பருவநிலைக்கும் கொரோனா வைரஸிற்கும் தொடர்பு இருக்கிறதா?
கொரோனா வைரஸ் அதன் குடும்பத்தில் 6வது வைரஸ், அதனாலேயே இதை Novel ([புதிய) கொரோனா வைரஸ் என்று சொல்கிறோம். எந்த வைரஸிற்குமே முதல் முறை பரவும் போது பருவநிலைக்கும் அதற்கும் தொடர்பு இருக்காது, 2வது அல்லது மூன்றாவது முறை அதே வைரஸ் பரவும் போது பருவநிலைக்கு ஏற்ப இயற்கையாகவே அது மாறி இருக்கும்.
உலகத்தை மிரட்டிய உயிர்கொல்லி வைரஸ் என்றால் அது என்ன?
100 ஆண்டுகளுக்கு முன்னர் 1917-1920 ஆண்டுகளில் ஸ்பானிஷ் காய்ச்சல் உலகம் முழுவதையும் புரட்டிப் போட்டது. இந்தியாவில் மட்டும் இந்த நோய் 1.7 கோடி உயிர்ப்பலிகளையும், உலகம் முழுவதும் ஏறத்தாழ 5 கோடி பேரை காவு வாங்கியது. அந்த காலத்தில் வைரஸ் பற்றிய அறிவும் இல்லை, அது எப்படி பரவுகிறது என்பதை கட்டுப்படுத்துவதற்கான வழிகளும் இல்லை.
கொரோனா வைரஸ் மனிதனிடம் இருந்தே மற்றவர்களுக்குப் பரவுகிறது என்பதை 20 நாட்களில் கண்டறிந்து தனிமைப்படுத்துதல் என்ற வழியையும் கண்டறிந்திருப்பதால் உயிர்ப்பலிகள் அன்றைய காலகட்டம் போல இல்லை. எய்ட்ஸ் நோய்க்கு மருந்துகளோ தடுப்பூசிகளோ இல்லை ஆனால் மனிதனின் முயற்சியால் இந்தியாவிற்குள் எய்ட்ஸ் நோய் கட்டுப்படுத்தப்பட்டது. அதே மாதிரியான முயற்சி தான் தற்போதும் தேவைப்படுகிறது.
கொரோனா ஏன் மோசமானது?
ஒரு வைரஸ் எப்படி உயிர்ப்பலி ஏற்படுத்துகிறது, நோய் பரவல் விகிதம் எவ்வளவு என்பதைப் பொருத்தே அது மோசமானதாக அறிவிக்கப்படுகிறது. கொரோனா வைரஸில் உயிர்ப்பலி இல்லாவிட்டாலும் பரவல் விகிதம் அதிகம். ஒரு மனிதனிடம் இருந்து 2.6 பேருக்கு கொரோனா பரவும் இதேபோல 12 முறை பரவினால் எளிதில் 1 லட்சம் பேர் பாதிக்கப்படுவர்.
இந்த 1 லட்சம் பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிப்பது கடினம், பலருக்கு சிகிச்சை கிடைக்காமலே மோசமான நிலைக்குத் தள்ளப்படும் வாய்ப்பும் இருக்கிறது. சார்ஸ் அளவிற்கு உயிர்ப்பலி இல்லாவிட்டாலும் பரவல் விகிதம் கொரோனாவில் அதிகம்.
கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும்?
ஆருடங்களைத் தவிர்த்துவிட்டு சூழ்நிலைக்கேற்ப யதார்த்தத்தை உணர வேண்டும். சீனாவில் முதன்முதலில் டிசம்பர் மாதத்தில் நோய் பரவலானது கண்டுபிடிக்கப்பட்டு 5 மாதத்திற்குப் பிறகு கூட அந்த நாடு இன்னும் முழுமையாக சகஜ நிலைக்குத் திரும்பவில்லை. இந்தியாவில் முதல் கொரோனா நோய் பரவலே மார்ச் மாத இறுதியில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஊரடங்கு, சமூக விலகல் மூலம் இவை கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது என்றாலும் வைரஸ் பரவல் குறைந்து நாம் சகஜ நிலைக்கு திரும்ப குறைந்தபட்சம் 7 அல்லது 8 மாதங்கள் ஆகும்.
கொரோனா உலகளாவிய பிரச்னை என்பதால் உலகளாவிய அளவிலேயே தீர்வு காண முடியும். உலகில் ஒருவருக்குக் கூட கொரோனா இல்லை என்றால் தான் இது கட்டுக்குள் வரும் இல்லையென்றால் சங்கிலித் தொடர் போல நோய் பரவல் சுற்றிக் கொண்டே தான் இருக்கும்.
கொரோனாவிற்கு என்ன மருந்து?
கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது உடனடியாக முடியாதது. ஆனால் இதற்கான மருந்து என்ன எனச் சொன்னால் ஆச்சரியமாக இருக்கும். சுடுநீர் மட்டுமே ஒரே மருந்து, ஏனெனில் பலருக்கு கொரோனா பாதித்ததன் அறிகுறியே இருக்காது லேசான சளி, காய்ச்சல் போல வந்து போய்விடும்.
100 பேரில் 15 பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இவர்களுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும் என்பதால் வென்டிலேட்டர் பொருத்த வேண்டும். 100ல் 5 பேர் மட்டுமே தீவிர மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்களாக இருப்பார்கள்.
உலகம் முழுவதிலும் 9 வயதிற்குக் கீழ்பட்ட எந்த குழந்தையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை பெறும் மோசமான நிலைக்குத் தள்ளப்படவில்லை.
கொரோனாவில் இருந்து எப்படி தப்பிக்கலாம்?
அரசு சொல்லும் விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். சமூக விலகல், சாதாரண சோப்பு நீரை வைத்து கைக்கழுவுதலே போதுமானது, இருமல், தும்மல் இருந்தால் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். கைகுட்டைகளை பயன்படுத்தி முகக்கவசம் போட்டால் அதனை நன்கு வெந்நீரில் அலசி காய வைக்க வேண்டும்.
1.5மீட்டர் தூரம் வரை மட்டுமே கொரோனா வைரஸ் பரவும் என்பதால் மனித இடைவெளியை கடைபிடிப்பது அவசியம்.
அச்சப்பட வேண்டாம், அலட்சியமாகவும் இருக்க வேண்டாம் இதை கடைபிடித்தாலே கொரோனாவை வென்றுவிடலாம்.