'யானைகள் ஆய்வாளர்களில் முக்கியமானவர்’ - யார் இந்த அஜய் தேசாய்?
மத்திய அரசு அமைத்த யானை சிறப்புச் செயல்பாட்டுக் குழு (Elephant Task Force) உறுப்பினர் ஆகிய முக்கியப் பொறுப்புகளை வகித்தவர் அஜய் தேசாய். அண்மையில் மாரடைப்பால் காலமானார்.
உலக இயற்கை நிதியத்தின் (WWF) ஆசிய யானை சார்ந்த செயல் பாடுகளுக்கான ஆலோசகர், பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) ஆசிய யானைகள் சிறப்புக் குழுவின் தலைவர், உறுப்பினர், மத்திய அரசு அமைத்த யானை சிறப்புச் செயல்பாட்டுக் குழு (Elephant Task Force) உறுப்பினர் ஆகிய முக்கியப் பொறுப்புகளை வகித்தவர் அஜய் தேசாய்.
அண்மையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 62. அஜய் தேசாயின் மறைவு பேரிழப்பு என்றுதான் சொல்லவேண்டும். அவரைப்பற்றி அறிந்துகொண்டால், இதற்கான காரணத்தை உணர முடியும்.
யார் இந்த அஜய் தேசாய்?
1980-களில் ‘பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகம்’ (BNHS) யானைகள் பற்றிய ஆய்வுப் பணி ஒன்றைத் தொடங்கியது. ஜே.சி. டேனியல் தலைமையில் ஏ.ஜே.டி. ஜான்சிங் போன்றவர்களால் அந்த ஆய்வு தொடங்கப்பட்டது. இந்த ஆய்வுகள் முதுமலை, பந்திபூர், நாகரஹொலே ஆகிய பகுதிகளில் நடத்தத் திட்டமிடப்பட்டது. அதற்காக இளம் ஆய்வாளர்கள் தேர்வு நடைபெற்றபோது கர்நாடக மாநிலம் பெல்காம் பகுதியைச் சேர்ந்த அஜய் தேசாய், தமிழகத்தைச் சேர்ந்த சிவகணேசன் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டார்கள்.
கடல் உயிரின ஆய்வில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்த அஜய் தேசாய், 1982 ஆம் ஆண்டு யானை ஆய்வுப் பணியைத் தொடங்கினார். காட்டு யானைகளை ஆய்வுசெய்ய நேரடியாக அவர் அனுப்பப்படவில்லை. வளர்ப்பு யானை களைக் கண்காணித்து, அவற்றின் நடவடிக்கைகளை அறிவியல்பூர்வமாக ஆய்வுசெய்யும் பணியை சிவகணேசனுடன் இணைந்து அஜய் தேசாய் தொடங்கினார்.
பின்னர் இருவரும் இணைந்து மேல்கார்குடி பகுதியில் இருந்த பழைய கட்டிடம் ஒன்றைச் சீரமைத்து, அங்கே தங்கியிருந்து ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆய்வுதான் நவீன காட்டுயிர் அறிவியல் முறையான ‘ரேடியோ காலர்' முறையில் இந்தியாவில் நடத்தப்பட்ட முதல் ஆய்வு. ஆசிய யானைகள் பற்றி இன்று நாம் அறிந்திருக்கும் வாழிடம், வலசை, உணவுமுறை எனப் பல்வேறு தகவல்களை தந்த முன்னோடி ஆய்வு அது.
இந்தியா மட்டுமன்றி இலங்கை, வியட்நாம், மலேசியா உள்பட ஆசிய யானைகள் வாழும் பல்வேறு நாடுகளில் அவருடைய ஆய்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்றன. கடந்த 38 ஆண்டுகளாக அவருடைய ஆய்வுப் பணி தொய்வின்றித் தொடர்ந்துகொண்டிருந்தது.
அவரின் ஆய்வுகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டதால், நமது காடுகளை நன்கு அறிந்தவராக இருந்தார். யானைகள் மேலாண்மை குறித்து தமிழகத்தில் எடுக்கப்படும் பல்வேறு முடிவுகள் அஜய் தேசாயின் ஆலோசனையைப் பெற்றே இறுதி செய்யப்பட்டு வந்துள்ளன. தேசிய அளவிலும் பன்னாட்டு அளவிலும் யானைகளுக்காக நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வு அரங்குகளில் அஜய் தேசாயின் குரல் வலிமையாக ஒலித்துள்ளது.
அஜய் தேசாயின் ‘இந்திய யானை: விநாயகர் தேசத்தில் ஆபத்தில் உள்ளது’ என்ற நூல் நாட்டில் யானைகள் பற்றிய ஆய்வுகளுக்கு ஆரம்ப கள வழிகாட்டிகளில் ஒன்றாகும். அவர் யானைகள் குறித்து பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
RIP அஜய் தேசாய்...