TikTok-ல் பகிரும் வீடியோக்கள் யாருக்கு சொந்தம்?
டிக்டாக் அல்லது ஷேர்சேட் போன்ற சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்கள் யாருக்கு சொந்தம் மற்றும் அவற்றுக்கு யார் பொறுப்பு போன்ற சுவாரஸ்யமான கேள்விகள் எழுந்துள்ளன.
சமூக ஊடக மேடைகளான ஷேர்சேட் மற்றும் சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்தின் டிக்டாக் இடையிலான சட்ட மோதல் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த மோதல் பற்றி ஒரு சுருக்கமான அறிமுகம்: உள்ளடக்கம் தொடர்பான பிரத்யேக உரிமையை காரணம் காட்டி, டிக்டாக் நிறுவனம், ஷேர்சேட்டிற்கு ஒரு சில உள்ளடக்கங்களை நீக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு உடன்பட்டு ஷேர்சேட் சில வீடியோக்களை நீக்கியது.
பின்னர் ஆகஸ்ட் மாதம், டிக்டாக்கின் நடவடிக்கை மற்றும் இத்தகைய பிரத்யேக உடன்பாடுகளால் ஏற்படக்கூடிய பிரச்சனை குறித்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் ஷேர்சேட் முறையிட்டது.
இந்த மோதல், இத்தகைய மேடைகளில் உருவாக்கப்படும் உள்ளடக்கத்திற்கு யார் உரிமையாளர்? எனும் முக்கியமான கேள்வியை எழுப்புகிறது.
“நீங்கள் ஒரு கருத்து அல்லது டிவீட்டை வெளியிடும் போது, கருத்துகள் உங்களுடையது: வெளியிடும் மேடை அதற்கு பொறுப்பாகாது. சமூக ஊடக நிறுவனங்கள் இணைப்புப் பாலம் போல செயல்படுகின்றன. என்ன எழுதப்பட்டிருக்கிறது மற்றும் எங்கு எழுதப்படுகிறது என்பது பயனாளிகளின் கையில் தான் உள்ளது,” என்கிறார் இந்திய மொழிகளுக்கான பகிர்வு மேடையான வோகல் இணை நிறுவனர் அப்ரமேயா ராமகிருஷ்ணா.
ஆனால், பயன்பாடு தொடர்பான நிபந்தனைகள், பயனாளிகள் மீது பொறுப்பை அளிக்கின்றனவா அல்லது பகிரப்படும் உள்ளடக்கத்தின் மீது மேடைகள் பிரத்யேக உரிமையை கோருகின்றனவா? எனும் கேள்வியை டிக்டாக்-ஷேர்சேட் மோதல் எழுப்புகிறது. இரண்டாவது கருத்தை ஏற்பதாக இருந்தால், சமூக ஊடக மேடைகள் மீது பொறுப்பை உண்டாக்கி, ஐடி சட்டம் கீழ் அவை அனுபவிக்கும் இணைப்பு பாலம் அந்தஸ்தை இழக்க வைக்கும்.
”பயனாளிகள் உள்ளடக்கம் மற்றும் அறிவு சொத்துரிமையை பாதுகாக்கும், பாதுகாப்பான, ஊக்கம் அளிக்கும் சூழலில் அங்கம் வகிக்குமாறு இந்திய உருவாக்குனர்களை வரவேற்கிறோம். இந்த மேடை பயனாளிகள் உள்ளடக்கத்தை எந்தவித கட்டுப்பாட்டுக்கும் உள்ளாக்குவதில்லை, இது முழுவதும் பயனாளிகள் விருப்பப் படி உருவாக்கப்படுகிறது,” என டிக்டாக் ஆக்ஸ்ட் மாதம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது.
அதிக உள்ளடக்கம்
மக்களை தினமும் உள்ளடக்கத்தை உருவாக்க ஊக்குவிக்கும், பயனாளிகள் உருவாக்கும் உள்ளடக்க (யு.ஜி.சி) மேடைகள் அண்மைக்காலமாக பெரிய அளவில் வளர்ச்சி பெற்று வரும் நிலையில், உள்ளடக்கம் மீதான உரிமை மற்றும் பிரத்யேகத் தன்மை தொடர்பான கேள்விகள் முக்கியமாகின்றன.
இரண்டே ஆண்டுகளில் வோகல் இரண்டு மில்லியன் தீவிர பயனாளிகள் பெற்றுள்ளது. டிக்டாக் இந்தியாவின் வேகமாக வளரும் மற்றும் அதிகம் டவுண்லோடு செய்யப்படும் செயலியாக இருக்கிறது. உலகம் முழுவதும் அது வரவேற்பை பெற்றிருந்தாலும், இந்தியாவில் 200 மில்லியன் பயனாளிகளைப் பெற்றுள்ளது. 10 இந்திய மொழிகளில் பயன்படுத்தக்கூடிய டிக்டாக் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 88.6 மில்லியன் பயனாளிகளை பெற்றது.
“இந்த மேடைகள் அதிக வரவேற்பு மற்றும் கவனத்தை பெறத்துவங்கியுள்ளன. இதன் காரணமாக, இந்த மேடைகள் அவை விரும்பிய எண்ணிக்கையை பெற்று வருகின்றன,” என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத ஆரம்ப நிலை முதலீட்டாளர் ஒருவர்.
எனவே முதலீட்டாளர்கள் நாடி வருவதில் எந்த வியப்பும் இல்லை. ஷேர்சேட்டை எடுத்துக்கொண்டால், அது டி சுற்று நிதியாக 100 மில்லியன் டாலர் திராடி, டிவிட்டரை தனது முதலீட்டாளர்களில் ஒன்றாக பெற்றுள்ளது. 60 மில்லியன் பயனாளிகளைக் கொண்ட இந்த மேடை 14 மொழிகளில் சேவை அளிக்கிறது. இந்த கட்டுரைக்காக ஷேர்சேட் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
டிக்டாக் இந்தியாவின் விற்பனை மற்றும் பாட்னர்ஷிப் இயக்குனர், யுவர்ஸ்டோரிக்கு முன்னர் அளித்த பேட்டியில்,
“இந்த மேடையில் சாத்தியமாகும் உள்ளடக்கம் மற்றும் தங்கள் திறமை மற்றும் படைப்புக்களை காட்சிப் படுத்தும் வாய்ப்பே இந்த வளர்ச்சிக்கு காரணம்.
பயனாளிகளுக்கு பலவித ஆர்வங்களும், திறன்களும் இருக்கின்றன. நகைச்சுவை, சமையல், பயணம், நடனம், விளையாட்டு உள்ளிட்ட பிரிவுகளில் அவர்களால் தங்கள் படைப்புத்திறனை வெளிப்படுத்த முடிகிறது. மற்ற மேடைகள் போல் அல்லாமல், இந்த 15 நொடி வடிவம் பயனாளிகளை புதுமையாக்கத்தில் ஈடுபட வைக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நொடியையும் பொருட்படுத்தக்கூடியதாக ஆக்குவது தான், இந்த மேடையை தனித்து நிற்கச்செய்கிறது,” என்று கூறியிருந்தார்.
உள்ளடக்கம் யாருக்குச் சொந்தம்?
எதிர்பார்க்கக் கூடியது போலவே, இந்த மேடைகளில் பதிவேற்றப்படும் மற்றும் பகிரப்படும் அதிக அளவிலான உள்ளடக்கம், பயனாளிகள் தொடர்பான தகவல்கள் மற்றும் தரவுகளின் தங்கச்சுரங்கமாக அமைகிறது. மற்ற சமூக ஊடக மேடை போலவே, தினமும் உருவாக்கப்படும் தரவுகள், அல்கோரிதம்களை மேலும் புத்திசாலியாக்கி, பயனாளிகளுக்கு ஏற்ற சேவைகள் மற்றும் உள்ளடக்கத்தை பரிந்துரைக்க வழி செய்கிறது.
நெட்டிசன்கள் இந்த மேடைகளில் சேரும் போது, இந்த புதுயுக நிறுவனங்களிடம் தங்கள் தனிப்பட்ட தரவுகளை பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொள்கின்றனர். உங்கள் செலவு பழக்கம் தொடர்பான தரவுகள், வீடு மற்றும் பணிச் சூழல் விவரங்கள், பொருட்கள், சேவைகள் விருப்பம் மற்றும் நிதித் தகவல்கள் கூட, ஒவ்வொரு முறை இந்த சேவைகளை பயன்படுத்தும் போதும் சேமிக்கப்படுகின்றன.
ஆனால், ஒரு மேடைக்காக உள்ளடக்கம் உருவாக்கப்படும் போது அதற்கான பொறுப்பு பயனாளிகள் சார்ந்தது.
“அனைத்து பயனாளிகள் உருவாக்கும் உள்ளடக்கமும், அதன் பெயர் உணர்த்துவது போல, பயனாளிகள் அல்லது உருவாக்குனர்களுக்கு சொந்தமானது. மக்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்வதற்கான இணைப்புப் பாலமாக இருப்பது தான் இந்த சேவைகளின் நோக்கம். இதற்கு மாறாக தீர்மானிக்கும் நிமிடமே, நீங்கள் இணைப்புப் பாலம் என்பதில் இருந்து மாறி, சட்டப் பொறுப்பு உள்ளிட்ட பொறுப்புகளை உள்ளடக்கம் மீது ஏற்கிறீர்கள்,” என்கிறார் நோவோஜூரிஸ் லீகல் நிறுவனர் ஷரதா பாலாஜி.
பொடி எழுத்து சொல்வது என்ன?
யு.ஜி.சி பதிவுகள் பயனாளிகளுக்கு சொந்தம் என்பதை அனைத்து மேடைகளும் ஒப்புக்கொண்டாலும், பொடி எழுத்துகளை கவனிக்க வேண்டும்.
“உருவாக்குனர்கள் உள்ளடக்கம் மீது பிரத்யேக உரிமை பெறும் வகையில், ஒரு சில உருவாக்குனர்களுடன் பரஸ்பர ஒப்பந்தத்தை டிக்டாக் மேற்கொள்ளலாம். இந்த விதத்தில், தனது பயனாளிகள் காப்புரிமையை பாதுகாப்பதற்காக டிக்டாக் சட்ட நடிவடிக்கை எடுத்துள்ளது,” என டிக்டாக் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
ஆனால் உரிமை என்பது விதிகள் மற்றும் நிபந்தனைகள் சார்ந்தது. கைத்தான் அண்ட் கோ பார்ட்னர் உதய்சங்கர் ரங்கராஜன், ஒப்பந்ததில் உள்ள பயன்பாடு நிபந்தனைகள் படி இது அமையும் என்கிறார்.
”பயனாளிகள் உள்ளடக்கம் மற்றும் அறிவு சொத்துரிமையை பாதுகாப்பதற்காக, உருவாக்குனர்களின் காப்புரிமையில் குறுக்கிட்டு, டிக்டாக் மற்றும் உருவாக்குனர் இடையிலான பிரத்யேக உரிமையில் தலையிடும் மூன்றாம் தரப்பினருக்கு டிக்டாக் நோட்டீஸ் அனுப்பலாம்,” என்று டிக்டாக் தனது பயன்பாடு நிபந்தனையில் தெரிவித்துள்ளது. மேடையில் உள்ள வசதிகளை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள மற்றவர்களுக்கு வழிகாட்டக்கூடிய ஒரு சில பயனாளிகளை மேடை முன்னிறுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"யு.ஜி.சி மேடைகளில் தரவுகள் உரிமை தொடர்பான கேள்வி, யுஜிசி தொடர்பாக நீதித்துறை மற்றும் அரசு துறை எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கிறது. பகிரப்படும் அல்லது பதிவேற்றப்படும் தரவுகள் தொடர்பான பயனாளிகள் பொறுப்பு தொடர்பாக தெளிவாக வரையறுக்கும் தீவிரமான நிபந்தனைகளை இந்த மேடைகள் ஒன்றும் உருவாக்க முற்படுவது தவிர்க்க இயலாதது. அந்த விதத்தில் பயனாளிகள் உள்ளடகத்திற்கு பொறுப்பானவர்கள் மற்றும் உரியவர்கள். ஆனால், இந்த மேடைகள், பயனாளிகள் தரவுகளை பயன்படுத்த, மீண்டும் வெளியிட, காட்சிபப்டுத்த உலக அளவிலான ராயல்டி இல்லாத உரிமையை பெற்றுள்ளன,” என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத முதலீட்டாளர் ஒருவர்.
பேஸ் ஆப் இதற்கான சரியான மற்றும் சமீபத்திய உதாரணம். பயனாளிகள் படங்கள் ரஷ்யாவில் சேமிக்கப்படுவதாக கூறப்பட்டதால், தனியுரிமை சார்ந்த அச்சம் உண்டானது. இது போன்ற விஷயங்களில், உள்ளூர் சட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.
“பயன்பாடு தொடர்பான நிபந்தனைகள் என்று வரும் போது இரண்டு விதம் உள்ளது: ஒன்று ஷிரிங் ராப் ஒப்பந்தம் மற்றொன்று கிளிக் ராப் ஒப்பந்தம். முதல் வகை மைக்ரோசாப்ட்வேர் மென்பொருளுக்கு பொருத்தமாக இருக்கிறது. மென்பொருளை திறக்கும் முன் நுகர்வோர் ஒப்புக்கொள்ள வேண்டிய விற்பனை தொடர்பான நிபந்தனைகளை இது கொண்டிருக்கும். யு.ஜி.சி மேடைகளை பொருத்தவரை, நான் ஒப்புக்கொள்கிறேன் எனும் கிளிக் பட்டனை கிளிக் செய்யும் வகையாக அமைகிறது.”
தரவுகள் மற்றும் உள்ளடக்கம் பயனாளிகளுக்கு உரியது. இதை பயன்படுத்திக்கொள்ள, சேவை நிறுவனம் எப்போதும் பயனாளிகள் அனுமதியை பெற வேண்டும் என்கிறார் உதய்சங்கர்.
“பெரும்பாலான நேரங்களில், யுஜிசி சேவைகள், இலக்கியத்திருட்டு, ஆபாசம் மற்றும் இதர சட்ட விரோத உள்ளடக்கத்திற்கான பொறுப்புகளில் இருந்து தப்பித்துக்கொள்வதை உறுதி செய்கின்றன. இவை நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்டு, பயனாளிகள் பொறுப்பாக்கப்படும்.”
உங்கள் உரிமைகள்
இவை சட்டப்பூர்வமாக செல்லும் என்றாலும் நீதிமன்றத்தில் கேள்விக்குள்ளாக்கப்படலாம் என்கிறார் அவர். இருப்பினும், வெகு சில நுகர்வோரே சட்ட வழிமுறைகள் பற்றி அறிந்திருக்கின்றனர். இது புதிய விஷயம் என்பதால், சர்ச்சைக்குரிய அம்சங்களில், தொழில்நுட்ப நிறுவனங்களுக்குக் கூட இன்னமும் தெளிவு உண்டாகவில்லை.
நுகர்வோர் தரவுகளை பாதுகாக்கும் பொறுப்பு, நுகர்வோரிடம் இருப்பது போலவே ஸ்டார்ட் அப்’களிடமும் இருக்கிறது என்று வல்லுனர்கள் கருதுகின்றனர். இது வளர்ந்து வரும் பிரிவாக இருப்பதால், வரும் மாதங்களில், ஆண்டுகளில், நீதிமன்றங்களில் உள்ளடக்கத்திற்கான உரிமை எப்படி விவாதிக்கப்பட்டு, நிர்ணயிக்கப்படுகிறது என்பது சுவாரஸ்யமானதாக இருக்கும்.
ஆங்கில கட்டுரையாளர்: சிந்து காஷ்யப் | தமிழில்: சைபர்சிம்மன்