‘கனா’ ஐஸ்வர்யாவை கொண்டாடுபவர்கள் நிஜ வீராங்கனைக்கு தோள் கொடுப்பார்களா?
22 வயதில் பவர் லிப்டிங்கில் 9 பதக்கங்களை வென்றுள்ள தஞ்சாவூரைச் சேர்ந்த ரம்யா திறமை இருந்தும் குடும்பத்தின் வறுமை காரணமாக சில நாட்களில் சாப்பிடாமல் கூட காமன்வெல்த் போட்டிக்காக தயாராகி வருகிறார். இவருக்கு உதவ முன்வருமா அரசு? அல்லது தமிழ் சமூகம்?
திறமை ஒரு வரமல்ல அது ஒருவனின் உழைப்புக்கான கூலி. விடாமுயற்சி, தியாகங்களின் வெளிப்பாடாக இருக்கும் திறமை தஞ்சாவூரைச் சேர்ந்த ரம்யாவிற்கும் அப்படித் தான் கிடைத்திருக்கிறது. பூ வியாபாரியின் 3வது மகளான ரம்யா படிப்பில் சுமார் பெண் தான், படிப்பில் ஆர்வம் இல்லாவிட்டாலும் குடும்பத்தினரின் அட்வைஸ்களால் வேறு வழியின்றி பள்ளி சென்று வந்திருக்கிறார்.
துரு துரு பெண்ணான ரம்யாவிற்கு கல்வி மட்டும் குதிரைகொம்பாக இருந்தது. போரிங் வாழ்க்கையாக இருந்த அவரை 6ம் வகுப்பு படிக்கும் போது பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் விளையாட்டில் பங்கேற்கச் செய்துள்ளார். அப்போது முதல் விளையாட்டுத் துறை மீதான ஆர்வம் ரம்யாவை ஒட்டிக் கொண்டுள்ளது. முதன்முதலில் குண்டு எறிதல் விளையாட்டில் பங்கேற்ற ரம்யா, பின்னர் கூடைப்பந்தாட்டத்தில் தொடர் பயிற்சிகள் எடுத்து விளையாட்டு போட்டிகளில் பள்ளி சார்பில் விளையாடி வந்திருக்கிறார்.
“படிப்பு மட்டுமே எதிர்காலத்திற்கு உதவும் என்று கூறியவர்கள் அனைவரும், எனக்கு படிப்பு வரவில்லை, படிப்பைத் தாண்டி விளையாட்டில் எனக்கு திறமை இருக்கிறது என்பதை பெற்றோர் புரிந்து கொள்ளவில்லை,” என்கிறார் ரம்யா.
பிளஸ் 2 முடித்தவுடன் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த ரம்யாவிற்கு பள்ளி சீனியர்கள் மூலமாக கோவையில் உள்ள நிர்மலா பெண்கள் கல்லூரியில் விளையாட்டு பிரிவில் இளநிலை படிப்பதற்கான வாய்ப்பு வந்துள்ளது. விளையாட்டு என்றாலே நோ சொன்ன பெற்றோரிடம் என்னுடைய திறமை பற்றியும், விளையாட்டுத் துறையில் இருக்கும் நன்மைகள் பற்றியும் பேராசிரியர்கள் எடுத்துச் சொன்னதையடுத்து அவர்களும் ஓகே சொன்னதாகக் கூறுகிறார் ரம்யா.
கல்லூரியில் முதல் 2 ஆண்டுகள் குழு போட்டிகளில் பங்கேற்பதிலேயே சென்றுள்ளது. குழு விளையாட்டில் பங்கேற்றால் தனித்துவம் இருக்காது என்பதை உணர்ந்த ரம்யா, தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கினால் தான் அனைவரும் மதிக்கத் தொடங்குவார்கள் என்று தீர்மானித்து 2016ம் ஆண்டில் பளு தூக்குதல் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். பவர் லிப்டிங், வெயிட் லிப்டிங் இரண்டிலுமே பயிற்சி எடுத்த அவருக்கு 2016ம் ஆண்டு குண்டூரில் நடந்த போட்டியில் பவர் லிப்டிங் பிரிவில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது முதல் பவர் லிப்டிங் தான் தன்னுடைய பாதை என்பதை முடிவு செய்துள்ளார்.
பவர் லிப்டிங்கில் முதல் போட்டியே அகில இந்திய அளவில் நடந்த போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது, அப்போது வரை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றால் வெளி ஊர் போகலாம் பல இடங்களை சுற்றிப் பார்க்கலாம் என்று தான் நினைத்திருந்தேன், இந்த போட்டியில் பங்கேற்றது என் வாழ்க்கைப் பாதையை மாற்றி அமைத்தது.
பவர் லிப்டிங்கில் ஃபார்ம் 3,2,1 ஆகிய பிரிவுகளில் பயிற்சி செய்ய விரும்பினேன். ஆனால் அதற்குள்ளாக இளநிலை படிப்பு முடிந்துவிட அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றதாகச் சொல்கிறார் ரம்யா.
இந்த முறையும் ரம்யாவிற்கு அவருடைய சீனியர் பரிந்துரையால் சென்னையில் செயின்ட் ஜோசப் கல்லூரியில் விளையாட்டுப் பிரிவில் எம்பிஏ படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. சென்னைக்கு வந்த ரம்யாவின் பவர் லிப்டிங் திறமைக்கு பக்கபலமாக இருந்துள்ளது கல்லூரி.
பயிற்சியாளர் ரஞ்சித் ரம்யாவிற்கு சகோதரன் போல இருந்து அவர் பவர் லிப்டிங்கில் மேலும் மேலும் வளர்ச்சிகள் பெற உறுதுணையாக இருந்துள்ளார். 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் முதன்முதலில் கோவையில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து 3 போட்டிகளில் பதக்கம் தட்டிவந்துள்ளார்.
2018ம் ஆண்டில் ராஜஸ்தானில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி, தென் ஆப்ரிக்காவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் இடம், சீனியர் நேஷனல் 3வது நிலையில் வெற்றி உள்பட கடந்த ஆண்டில் மட்டும் 4 பதக்கங்களை வென்றுள்ளார்.
22 வயதில் 13 பதக்கங்களை வைத்திருக்கும் ரம்யா இந்த ஆண்டு ஹாங்காங்கில் நடைபெற உள்ள ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் 2020ல் கனடாவில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிக்காக தயாராகி வருகிறார். விளையாட்டுத் திறமையும் மனதில் வெற்றி பெறுவதற்கான தைரியமும் இருந்த போதும் குடும்ப வறுமையால் தவித்து வருகிறார் ரம்யா.
போட்டிக்காக வெளியூர்களுக்கு சென்று வருவதற்கான செலவுகள் மொத்தத்தையும் இதுவரை என் பெற்றோரே பார்த்துக் கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் நானே இந்த விளையாட்டுத் துறை வேண்டாம் என்று முடிவு செய்தாலும் என்னுடைய பெற்றோர் நான் நிச்சயம் சாதிப்பேன் என்று கூறி எனக்கு ஊக்கம் அளித்து வருகின்றனர்.
கல்லூரி படித்துக் கொண்டிருந்த வரை உணவு, பயிற்சி விஷயத்தில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை, ஜுன் மாதத்துடன் முதுநிலை படிப்பும் முடிந்த நிலையில் மீண்டும் நிர்கதியாய் நின்றதாகச் சொல்கிறார் ரம்யா.
என் வாழ்வில் விளையாட்டுத் துறை வேண்டாம் என நான் ஒதுங்கிய போதெல்லாம் எனக்கு ஊக்கமளித்தவர்கள் 4 பே;ர் ராஜேஷ், விஜி, பவர்லிப்டிங் சங்கத் தலைவர் நாகராஜன் மற்றும் தற்போது வாய்ப்பு அளித்திருக்கும் பவர் லிப்டிங் சங்கத்தின் சென்னை செயலாளர் மாயகிருஷ்ணன் என்று குறிப்பிடும் ரம்யா, இவர்களுக்கு நன்றிகளையும் கூறுகிறார். தற்போது மாயகிருஷ்ணன் பரிந்துரையின் பேரில் சென்னை அமைந்தகரையில் ஜிம் ஒன்றில் காலை, மாலை பகுதி நேர பயிற்சியாளராக பணியாற்றி வருவதோடு அங்கேயே பவர்லிப்டிங்கிற்கான வொர்க் அவுட்களையும் செய்து வருகிறார்.
பகுதிநேரமாக கிடைக்கும் வருமானம் ரூ.9 ஆயிரம் மருத்துவ செலவுகள், புரோத உணவுக்கே சரியாக இருக்கிறது என்கிறார் ரம்யா.
ஒரு நாளைக்கு தொடர்ச்சியாக 3 மணி நேரம் வொர்க் அவுட் செய்தாலே ஸ்டாமினா இருக்கும். இந்த பயிற்சியை மேற்கொள்ளும் போது தினசரி 10 முட்டை, சிக்கன் உள்ளிட்ட புரோதச் சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்ண வேண்டும். சில நேரங்களில் சாப்பிடாமல் கூட பயிற்சியாளரிடம் சாப்பிட்டு விட்டதாகக் கூறி பயிற்சியை செய்துள்ளேன். சாப்பிடவில்லை என்று சொன்னால் பயிற்சியாளர் வொர்க் அவுட் கொடுக்க மாட்டாரே என்ற பயத்தில் பொய் சொல்லி பயிற்சியை செய்துள்ளதாகக் கூறுகிறார் ரம்யா.
பெண்களின் உடல்நிலை தினம்தினம் மாறுதல்களை சந்திக்கின்றது, எதிலும் வெற்றி பெற முடியும் என்ற உறுதி வேண்டும். உடல் வலிமையை விட மன உறுதியே வீராங்கணையாக முக்கியமான விஷயம். எல்லா விளையாட்டிலுமே கஷ்டம் இருக்கிறது ஆனால் அதற்காக சோர்ந்து விடக்கூடாது என்று நம்பிக்கை வார்த்தைகளை உதிர்க்கிறார் ரம்யா.
அப்பா, அம்மாவை மட்டுமே முன்மாதிரியாக நினைக்கும் ரம்யா பிறருக்கு தான் முன்மாதிரியாக இருக்கவே விரும்புகிறார்.
வார்த்தைக்கு வார்த்தை நம்பிக்கை, மனஉறுதி, தைரியத்தோடு பேசும் ரம்யாவிற்கு இருக்கும் குறை அவரை ஊக்கப்படுத்த சரியான ஸ்பான்சர்கள் யாரும் இல்லை என்பதே. விளையாட்டில் முழுகவனத்தோடு இருக்க தன்னுடைய மாத உணவு செலவுகளுக்கு ஸ்பான்சர் கிடைத்தால் போதும் காமன்வெல்த் போட்டியில் நிச்சயம் இந்தியாவிற்காக தங்கப் பதக்கம் வென்று வருவேன் என்கிறார்.
ஒரு புரோட்டின் பவுடரின் விலையே ரூ. 9 ஆயிரம், சரியான உணவு முறை மற்றும் மருத்துவ செலவுகள் உள்பட மாதத்திற்கு ரூ. 25 ஆயிரம் தேவைப்படும் நிலையில் முழுத்தொகையையும் கொடுக்க முடியாவிட்டாலும் தங்களால் முடிந்த நிதிஉதவியை தனி நபர்களோ, கார்ப்பரேட் நிறுவனங்களோ யாரேனும் என்னை நம்பி உதவ முன்வந்தால் நிச்சயம் என்னுடைய இலக்கை அடைய முடியும் என்று அடித்துச் சொல்கிறார் ரம்யா.
எதிர்காலத்தில் தான் விரும்பி விளையாடும் பவர் லிப்டிங் பயிற்சி மையம் தொடங்கி பிறருக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளார் ரம்யா. இத்தனை பதக்கங்கள் வென்றிருந்தும் அரசின் அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை என்று கூறும் ரம்யா, அரசுத்துறையில் ஒரு பணியிடம் கொடுத்தாலே தனக்கான அங்கீகாரமாக அது இருக்கும் என்கிறார்.
செய் அல்லது செத்துமடி என்பதே என்னுடைய கொள்கை, எப்போதுமே ஒரு விஷயத்தை கையில் எடுத்த பின்னர் அதை செய்யலாமா வேண்டாமா, முடியுமா, முடியாதா என்ற சிந்தனைகளே இருக்கக் கூடாது. பயிற்சியே எந்த ஒரு விஷயத்தையும் சாத்தியமாக்கும், எனக்கும் வீசிங் தொல்லை இருக்கிறது, குண்டாக இருப்பேன். ஆனால் அதற்காக நான் துவண்டுபோகவில்லை, இந்த தடைகளை பயிற்சியின் மூலம் தகர்த்தெறிந்தேன்.
தன்னம்பிக்கை, தைரியம், என்னால் முடியாவிட்டால் வேறு யார் என்ற திடம் இருந்தாலே போதும் எல்லாவற்றையும் சாதிக்க முடியும். பெண்களால் முடியாது என்ற ஒன்றே இல்லை, ஒரு ஆணால் கூட தாங்க முடியாத பிரசவ வலியை தாங்கிக் கொள்ளும் பெண்ணால் நிச்சயம் அனைத்தையும் சாதிக்க முடியும் என்று கூறுகிறார் ரம்யா.
வீராங்கணை ரம்யாவிற்கு உதவ நினைப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 9944372807