கொரோனாவில் குணமடைந்தவர் வீடு திரும்ப 140 கி.மீட்டர் ஆட்டோ ஓட்டிச் சென்ற பெண் ஓட்டுநர்!
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவரை இம்பால் பகுதியில் இருந்து காம்ஜாங் மாவட்டத்திற்கு ஆட்டோவில் கூட்டி சென்றுள்ளார் எக்கி லைபி ஓயினம்.
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதல் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் வைரஸ் பரவலின் தீவிரத்தை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்ட பகுதிகளுக்குப் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இத்தகைய தளர்வுகள் அளிக்கப்பட்டதும் மக்கள் நடமாட்டம் அதிகரித்தது. அதன் விளைவாக கொரோனா வைரஸ் பரவலும் அதிகரித்தது.
இத்தகைய இக்கட்டான சூழலில் கோவிட்-19 பாதிக்கப்பட்டு குணமடைந்தவர் வீடு திரும்ப கிட்டத்தட்ட 140 கி.மீட்டர் ஆட்டோ ஓட்டி சென்றுள்ளார் பெண் ஓட்டுநர் ஒருவர்.
22 வயதான சோமிசோன் சித்துங் என்கிற நோயாளி மணிப்பூரின் இம்பால் பகுதியில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவ அறிவியல் நிறுவனத்திலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் இந்த நோயாளி வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் சேவை மறுக்கப்பட்டது.
இந்த இக்கட்டான சூழலில் அந்த நோயாளிக்கு உதவியுள்ளார் எக்கி லைபி ஓயினம். இரண்டு குழந்தைகளுக்கு தாயான எக்கி தாமாக முன்வந்து உதவியுள்ளார். சித்துங்கின் சொந்த ஊர் காம்ஜங் மாவட்டத்தில் உள்ளது. எட்டு மணி நேரம் பயணித்து அவர் வீடு திரும்ப உதவியுள்ளார்.
“அந்த பெண் யார் என்பது எனக்குத் தெரியாது. இருப்பினும் அந்த சமயத்தில் அவருக்கு உதவ நான் அந்த இடத்தில் இருந்தது மகிழ்ச்சியளிக்கிறது,” என்று எக்கி லைபி EastMojo-இடம் தெரிவித்துள்ளார்.
இவரது செயலை அங்கீகரிக்கும் வகையில் எம்எல்ஏ-க்கள் அடங்கிய குழு, நலம் விரும்பிகள் ஆகியோருடன் இணைந்து மணிப்பூர் முதலமைச்சர் என். பிரேன் சிங் இவருக்கு 1.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கியுள்ளார்.
“இவரது மனிதாபிமானமிக்க சேவையை ஊக்குவிக்கும் வகையில் மணிப்பூரைச் சேர்ந்த சில தொழில்முனைவோர்கள் அமெரிக்கா, யூகே, கனடா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து புலம்பெயரந்தவர்கள் போன்றோர் ரொக்கப் பரிசுத் தொகையை வழங்கியுள்ளனர்,” என்று முதல்வர் அலுவலகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக `இந்துஸ்தான் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் என் பிரேன் சிங் தனது தனிப்பட்ட ட்விட்டர் பதிவிலும் இது குறித்து பதிவிட்டுள்ளார்.
கட்டுரை: THINK CHANGE INDIA