சபரிமலையில் பெண்கள்: நம்பிக்கைகள் மற்றும் ஏற்றுக் கொள்ள மறுக்கும் மனநிலை?
கேரளத்தில் ஏறத்தாழ முப்பது லட்சம் பெண்கள் ஒன்று கூடி ’வனிதா மதில்’ (பெண்களின் சுவர்) ஒன்றை அமைத்து உலகம் முழுதிலுமே புரட்சி அலைகளை உண்டாக்கியிருக்கும் நிலையில், தொடர்ந்து பெரும் கிளர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது இரண்டு பெண்களின் சபரிமலை கோவில் தரிசனம்.
என்ன தான் உச்சநீதிமன்றம் பெண்கள் சபரிமலைக்கு செல்லலாம் என்று அறிவித்திருந்தாலுமே, வலது சாரி அமைப்புகள் நடத்திய போராட்டங்களின் காரணத்தினால் பெண்கள் கோவிலுக்குள் செல்ல முடியவில்லை.
இந்நிலையில், கோவிலாண்டியைச் சேர்ந்த 42 வயதான பிந்துவும், அங்கடிபுரத்தைச் சேர்ந்த 44 வயதான கனகதுர்காவும் நேற்று அதிகாலை 3.45 மணிக்கு சபரிமலை கோவிலுக்குள் சென்றிருக்கிறார்கள். காவல்துறையினரின் பாதுகாப்போடு, வி.ஐ.பிகள் செல்லும் நுழைவுவாயில் வழியே சென்று திரும்பி இருக்கிறார்கள் இருவரும்.
நேற்று பெங்களூரூவுக்கு பஸ்ஸில் வந்து கொண்டிருந்த போது, தேசிய நெடுஞ்சாலையில் ’வனிதா மதில்’ (பெண்கள் சுவர்) இயக்கத்தின் பாகமாக ஆயிரக்கணக்கான பெண்கள் கூடி நின்றதை பார்த்தேன். ஏறத்தாழ 35 லட்சம் பெண்கள், 620 கீமி சுவரை உருவாக்கி பாலின சமத்துவத்துவத்திற்காகவும், சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் செல்லலாம் எனும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை முன்னிலைப்படுத்தியும் கரம் கோர்த்து நின்றிருந்தார்கள். ஆனால், அடுத்த நாளே அவர்கள் ஆணாதிக்க திமிரையும் எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.
ஐம்பது வயதிற்கும் உட்பட்ட அந்த இரண்டு பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் சென்றதற்கு காரணம், இந்த நாட்டின் உயரிய சட்டம் அதற்கு அனுமதி அளித்திருக்கிறது என்பதே. துரதிர்ஷ்டவசமாக, பெண்கள் கோவிலுக்குள் நுழைந்துவிட்டார்கள் என்பதனாலேயே, கோவிலை சுத்தம் செய்ய வேண்டும் என்று இழுத்து மூடியிருக்கிறார்கள். இது வேதனையளிப்பதாக இருக்கிறது.
நான் முதல்முறையாக சபரிமலைக்கு ஏறிச் சென்ற போது எனக்கு ஏழு வயது. பெண் பிள்ளைகளை கோவிலுக்கு கூட்டிப் போக வேண்டும் எனும் எங்கள் குடும்ப வழக்கத்தின் பகுதியாக என்னையும் அழைத்துப் போனார்கள்.
அந்த மொத்த அனுபவமுமே எனக்கு ஆச்சரியமூட்டுவதாகவே இருந்தது. சபரிமலை பயணத்திற்கு புறப்படும் முன் நடக்கும் ‘கெட்டுநிரா’ சடங்கு, என் தலையில் இருந்த ‘இருமுடி’, பம்பை நதியில் குளியல், இறுதியாக ஸ்வாமியே சரணம் ஐயப்பா எனும் சத்தத்திற்கு மத்தியில் மலையேறுவது எல்லாம் 35 வருடங்களுக்கு முன் அல்ல, நேற்று நடந்தவை போல என் கண் முன்னே இருக்கிறது. நான் கடவுளை பார்க்க, உறவினர் ஒருவர் என்னை அவர் தோளில் தூக்கி வைத்திருந்தது நினைவில் இருக்கிறது.
அந்த நாளில் இருந்தே, நான் யார் என்பதிலும், என்னவாக இருக்கிறேன் என்பதிலும் ஒரு வலிமையான ஆன்மீக உணர்வு எனக்கு இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஒரு தீவிரமான பக்தையாக, எப்படி எல்லா மதத்தை சேர்ந்தவர்களையும் இந்த கோவில் அனுமதித்துக் கொள்கிறது, ஒரு பாகுபாடும் பார்க்காமல் இயங்குகிறது என்று பிறரிடம் பெருமையாக பேசிக் கொண்டே இருந்தேன்.
எனக்குள் இருக்கும் பக்தியை அனுபவிப்பதற்காகவே இன்னும் ஒரு முறை போக வேண்டும் என எப்போதும் நினைத்துக் கொண்டே இருப்பேன். சபரிமலைக்கு போக வேண்டும் எனும் திட்டம் இருந்திருக்கவில்லை என்றாலும், எல்லா வயது பெண்களும் சபரிமலைக்கு போகலாம் எனும் தீர்ப்பை கேட்டதும் எனக்கு உற்சாகமாக இருந்தது.
நிறைய பெண்கள், ’காத்திருப்பதை’ தேர்ந்தெடுப்பதற்கான உரிமை கொண்டிருப்பதாக நம்புகிறார்கள். பிறருக்கும் உரிமைகள் இருக்கிறது தான், இந்த இரண்டு பெண்கள் செய்தது எல்லாம் அவர்களுக்கு வழிபட இருக்கும் உரிமையை நிலைநாட்டியது மட்டுமே.
என் மகனுக்கு பத்து வயதாக இருந்த போது, நான் ஏன் ’சகிப்புத்தன்மை’ எனும் வார்த்தையை பயன்படுத்துகிறேன் என்றும், “ நான் பிறரை ஏற்றுக் கொள்ளத் தானே வேண்டும்?” என்றும் கேட்டான்.
நானும் அதைத்தான் இன்று கேட்கிறேன் நம்பிக்கை, மதம் மற்றும் தேர்வுகள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று. அப்போது தான் உலகம் உண்மையிலே ஒரு மேம்பட்ட இடமாக மாறும்.
ஆங்கில கட்டுரையாளர் : ரேகா பாலகிருஷ்ணன் தமிழில் : ஸ்னேஹா