’இந்தியாவில் ஆராய்ச்சியின் தரத்தை மேம்படுத்த பெண்கள் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்’- நாராயணமூர்த்தி
நம் நாட்டில் ஆராய்ச்சியின் தரத்தை மேம்படுத்தத் தகுதியான, புத்திசாலித்தனம் கொண்ட பெண் ஆராய்ச்சியாளர்கள் அறிவியல் துறையில் தொடர்ந்து ஆய்வுகளில் ஈடுபட உகந்த சூழலை இந்தியா உருவாக்கித் தரவேண்டியது அவசியமாகிறது என்று பெங்களூருவில் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என் ஆர் நாராயணமூர்த்தி குறிப்பிட்டார்.
உலகின் மிகச்சிறந்த 4,000 ஆராய்ச்சியாளர்களில் 10 பேர் மட்டுமே இந்தியர்கள் என்றும் ஒரு இந்தியப் பெண் மட்டுமே முன்னணி பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகவும் க்ளாரிவேட் அனாலிடிக்ஸ் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.
அதிக பெண் ஆராய்ச்சியாளர்கள் இணைந்தால் இந்தியாவில் ஆராய்ச்சியின் தரத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியம் உள்ளதா என்று கேள்வியெழுப்பியதற்கு அவர், “நிச்சயம் முடியும். சந்தேகமே இல்லை…” என்றார்.
”நாட்டில் உள்ள பல்கலைக்கழகம், ஐஐடி, கல்வி நிறுவனம் போன்றவற்றின் பட்டமளிப்பு விழாவிற்குச் செல்லும்போதெல்லாம் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிக எண்ணிக்கையில் தங்கப்பதக்கம் வெல்வதைப் பார்க்கமுடிகிறது,” என்றார் நாராயணமூர்த்தி.
”எனவே நம் பெண் ஆராய்ச்சியாளர்கள் திருமணம், குழந்தை பிறப்பு போன்றவற்றிற்குப் பிறகும் தங்களது ஆராய்ச்சிப் பணியை எளிதாகத் தொடரும் வகையிலான சூழலை நான் உருவாக்கித் தரவேண்டும்…,” என்றார்.
எனினும் இது ஆராய்ச்சி நிறுவனங்களின் தவறில்லை என்றும் சமூகப் பிரச்சனை என்றும் நாராயணமூர்த்தி குறிப்பிடுகிறார்.
”நம் சமூகத்தில் திறமையான பெண் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுப்பணியில் தொடர்ந்து கவனம் செலுத்த எந்தவித தடங்கலும் இல்லாத சூழல் உருவாவதற்கான வழிமுறையை நாம் ஆராயவேண்டும்,” என்றார்.
”ஆராய்ச்சியின் தரத்தை மேம்படுத்த இது நிச்சயம் உதவும். ஏனெனில் நாட்டின் மக்கள்தொகையில் ஐம்பது சதவீதம் பேர் பெண்கள். இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்பில் பெண்களின் திறன் ஆண்களுக்கு இணையாகவே உள்ளது,” என்று இன்ஃபோசிஸ் ப்ரைஸ் விருது வழங்கும் விழாவில் குறிப்பிட்டார்.
இன்ஃபோசிஸ் ப்ரைஸ் என்பது விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், பொறியாளர்கள், சமூக விஞ்ஞானிகள் போன்றோருக்கு ஆண்டுதோறும் இன்ஃபோசிஸ் அறிவியல் அறக்கட்டளையால் (ISF) வழங்கப்படும் விருதாகும். அத்துடன் இது இந்தியாவில் ஆராய்ச்சியை அங்கீகரிக்க வழங்கப்படும் அதிகபட்ச ரொக்கப் பரிசாகும்.
இந்த ஆண்டு ஆறு சிறந்த பேராசிரியர்களுக்கு அறிவியல் மற்றும் ஆராய்ச்சியின் வெவ்வேறு பிரிவுகளின்கீழ் பரிசளிக்கப்பட்டது. தங்கப் பதக்கம், விருதுக்கான முகவுரை போன்றவற்றுடன் 1,00,000 டாலர் மதிப்புடைய (அல்லது அதற்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு) பரிசு ஆகியவை இந்த வருடாந்திர விருதில் அடங்கும்.
ஆராய்ச்சியாளர்கள் உலகளவிலான மேம்பாட்டிற்கு பங்களித்து உலகத்தரம் வாய்ந்த பணியை மேற்கொள்ள உகந்த சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை இந்தியா உணர்ந்துள்ளது என நாரயணமூர்த்தி நம்புகிறார்.
”நாம் இன்னமும் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறோம். நாம் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறுகையில் முன்னணி ஆராய்ச்சியாளர்கள் பட்டியலில் இடம்பெறும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது. இன்ஃபோசிஸ் சயின்ஸ் ப்ரைஸ் இந்த முயற்சிக்கு உந்துதலாக அமையும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை,” என்றார்.
இன்ஃபோசிஸ் ப்ரைஸ் வெற்றியாளர்கள் பலர் ஆராய்ச்சி பிரிவில் நோபல் பரிசுக்கு இணையான சர்வதேச விருதுகளை வென்றுள்ளனர் என தெரிவித்தார்.
நாட்டில் ஆராய்ச்சி மற்றும் அறிவியல் தொடர்பான சவால்கள் குறித்து கேட்கையில் ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்வேறு பிரிவுகளில் காணப்படும் நிபுணத்துவத்தை ஒன்றிணைக்கும் வகையிலான அணுகுமுறையைப் பின்பற்றவேண்டும். அத்துடன் வெளிநாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்களுடன் அதிகம் தொடர்புகொள்ளும் சூழலை அமைத்துத்தரவேண்டும்.
ஆராய்ச்சியின் தரத்தை மேம்படுத்துவதில் நிதி சார்ந்த சிக்கல் இருக்க வாய்ப்பில்லை என்றும் வருங்காலத்தில் ஆராய்ச்சி மற்றும் அறிவியல் துறையில் வரவிருக்கும் செயல்பாடுகள் உற்சாகமளிப்பதாக இருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
யுபிஏ அரசாங்கம் மற்றும் தற்போதைய என்டிஏ அரசாங்கம் இரண்டுமே மேற்படிப்பின் தரத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேற்படிப்பிற்காக ஒதுக்கப்படும் நிதியை யுபிஏ மும்மடங்காக்கியுள்ளது. தற்போதைய அரசாங்கமும் இதைத் தொடர்வதால் நிதி சார்ந்த பிரச்சனைகள் இருக்குமா என்பது தெரியவில்லை என்றார் நாராயணமூர்த்தி.
இளைஞர்கள் சர்வதேச ஆராய்ச்சியாளர்களுடன் அதிக நேரம் செலவிடவேண்டும் என்றும் இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளில் நடைபெறும் மாநாடுகளில் பங்கேற்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
உலகத்தரம் வாய்ந்த சிறந்த ஆராய்ச்சிப் பணியை நோக்கிய நம் இலக்கு மேம்பட முதலில் இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளில் நடைபெறும் செயல்பாடுகளுடன் நமது பணியைத் திறந்த மனதுடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். இரண்டாவதாக நமது இளைஞர்கள் உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சியாளர்களுடன் உரையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். மூன்றாவதாக பல்வேறு பிரிவுகளில் காணப்படும் நிபுணத்துவத்தை ஒன்றிணைக்கும் வகையிலான அணுகுமுறையைப் பின்பற்றவேண்டும்.
இதில் சிலவற்றை நாம் பின்பற்றினாலே நம்மால் ஆராய்ச்சியின் தரத்தை மேம்படுத்தமுடியும் என்கிறார் நாராயணமூர்த்தி.
தமிழில் : ஸ்ரீவித்யா