’உலக உணவு தினம்’ - 5 பைசாவுக்கு பிரியாணி, மற்றும் பல ஆஃபர்கள்!
இன்று ’உலக உணவு தினம்‘ கொண்டாடப்படுகிறது. இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சில பிரியாணிக் கடைகள் வித்தியாசமாக ஆஃபர்களையும், சில தன்னார்வ தொண்டு மையங்கள் இலவச உணவும் வழங்கி வருகின்றன.
“இந்தப் பொறப்பு தான் நல்லா ருசிச்சு சாப்பிடக் கிடச்சது.. அத நெனச்சு தான் மனம் உலகம் முழுவதும் பறக்குது...”
உன் சமையல் அறையில் படத்தில் இந்தப் பாடலைப் பார்க்கும் போதே பலருக்கும் நாவில் எச்சில் ஊறுவதை தவிர்க்க முடியாது. ஏனென்றால் எல்லோருக்குள்ளும் ஒரு சாப்பாட்டு ராமன் தூங்கிக் கொண்டு தான் இருக்கிறான். உனக்கு வெளில இருக்கற மிருகம் எனக்கு உள்ள தூங்கிட்டு இருக்கு மொமண்ட் தான் அது.
மனிதன் போதும் எனச் சொல்வதே சாப்பாடு ஒன்றிற்கு மட்டும் தான். கொஞ்சம் சாப்பிட்டாலும் ருசியா வகை, தொகையா சாப்பிடணும்பா என்றொரு குரூப்பும், எதையாவது சாப்பிட்டு வயிற்றை ரொப்பினால் போதும் என்றொரு குரூப்பும் என இரண்டே வகையில் உலக மக்களையே பிரித்து விடலாம். ஆனால் எது எப்படியோ எல்லா மனிதர்களின் ஓட்டமும் இந்த அரை ஜான் வயிற்றுக்காகத் தான்.
அப்படியாக மனிதனின் இன்றியமையாத அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உணவைக் கொண்டாடும் நாள் இன்று. அதாவது ’உலக உணவு நாள்’.
ஆண்டுதோறும் அக்டோபர் 16 நாள் உலக உணவு நாளாக (World Food Day) உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 1945 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கொள்ள ஐநா இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது. நவம்பர் 1979 ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் 20வது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி 1981 முதல் ஆண்டுதோறும் அக்டோபர் 16 உலக உணவு நாளாக கொண்டாடப்படுகிறது.
ஹங்கேரியின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் பால் ரொமானி என்பவரின் முன்முயற்சியினால் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டு, தற்போது 150க்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.
உயிர் வாழ உணவு அவசியம். அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது ஆளும் அரசின் கடமை. இது மனித உரிமையும் கூட. இன்றைய நிலையில் பசியால் யாரும் வாடக் கூடாது, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த உலக உணவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
உணவே மருந்து என்ற கொள்கையைக் கடைபிடித்தால், நோய் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. எனவே மக்களிடம் சரிவிகித உணவு பற்றிய விழிப்புணர்வைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நாள் பயன்படுகிறது.
வரும், 2030க்குள் பசியில்லா நிலையை (ஜீரோ ஹங்கர்) உருவாக்க, இந்தியா, பிரான்ஸ், சீனா, அமெரிக்கா, அர்ஜென்டினா உட்பட, 193 நாடுகள் உறுதி பூண்டுள்ளன. இந்நிலையை எட்ட, விவசாய முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.
இப்படியாக உலக உணவு நாள் என்று ஒன்று இருப்பதே பலருக்கும் இன்று தெரிவதில்லை. எனவே, அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆஃபர்களை தந்து பிரபலமாகி விடுகின்றன சில உணவகங்கள்.
தொப்பி வாப்பா பிரியாணிக் கடை
அதில் ஒன்று தான் தொப்பி வாப்பா பிரியாணிக்கடை. மடிப்பாக்கம், வேளச்சேரி என சென்னையின் பல இடங்களில் கிளைகளைக் கொண்டுள்ள இந்த பிரியாணிக் கடை, உலக உணவு தினத்தை முன்னிட்டு வித்தியாசமான ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது, பழைய ஐந்து பைசா நாணயத்தைக் கொண்டு வந்து தந்தால், ஒரு பிரியாணி வழங்கப்படும் என்பது தான் அது.
அசைவ உணவுப் பிரியர்கள் எல்லோருக்குமே பிடித்த உணவு என்றால் அது பிரியாணி தான். அதிகாலை இரண்டு, மூன்று மணிக்குக்கூட பிரியாணி சாப்பிடும் பிரியர்கள் நிறைய பேர் உள்ளனர். அப்படிப்பட்ட பிரியாணி பிரியர்களின் ஆசையை தீர்த்து வைக்கும் வகையில் உணவு தினத்தில் இப்படி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் தொப்பி வாப்பா பிரியாணிக்கடையினர்.
“உலக உணவு தினத்தின் நோக்கமே உணவு வழங்கல்தான். எங்களின் நோக்கம் உலக உணவு தினத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான். அதை வித்தியாசமாகச் செய்ய ஆசைப்பட்டோம். வழக்கம் போல் ஏதாவது ஆஃபர் கொடுத்தால், பத்தோடு பதினொன்றாக மக்கள் அதனைக் கடந்து விடுவார்கள். அதனால் தான் பழைய, செல்லாத 5 பைசாவுக்கு பிரியாணி வழங்கலாம் என முடிவு செய்தோம்,” என்கின்றனர் தொப்பி வாப்பா கடையினர்.
சென்னையில் உள்ள எந்த கிளையிலும் இந்த ஆஃபரில் பிரியாணி வாங்கிச் செல்லலாம். ஆனால் நபர் ஒன்றுக்கு ஒரு ஐந்து பைசாவுக்கு ஒரு பிரியாணி தான் தரப்படுமாம். ஆனாலும் இவர்களது இந்த முயற்சிக்கு தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வெளியூர்களில் இருந்துகூட சிலர் தொலைபேசியில் அழைக்கிறார்களாம்.
இப்போது ஐந்து பைசா நாணயங்கள் புழக்கத்தில் இல்லை. ஆனாலும் பல வீடுகளில் ஞாபகார்த்தமாக அதனை எடுத்து பத்திரப்படுத்தி வைத்திருப்பார்கள். அவற்றை குடும்பமாகத் தேடி எடுக்க இது ஒரு சந்தர்ப்பமாக அமையும் என்கிறார்கள் தொப்பி வாப்பா கடையினர். இதன்மூலம் குடும்ப உறுப்பினர்களுக்குள் ஒரு தேடல் உருவாகும் என்பது தான் அவர்களது எண்ணமாம்.
இதுபோன்று வித்தியாசமாக விளம்பரம் செய்வது தொப்பி வாப்பா பிரியாணிக் கடைக்கு இது முதல்முறை கிடையாது. இதற்கு முன்னர் சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவியபோது, பிரியாணி வாங்கினால் ஒரு கேன் தண்ணீர் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள். அதற்கு மக்களிடையேயும் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
முஜிப் பிரியாணிக் கடை
இதேபோல் திண்டுக்கல்லில் இயங்கி வரும் முஜிப் பிரியாணிக் கடையும் மக்களுக்கு உணவு தினத்தை முன்னிட்டு ஒரு ஆஃபர் வழங்கியுள்ளது. இங்கும் பழைய ஐந்து பைசா நாணயத்தைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு, ஒரு சிக்கன் பிரியாணி வாங்கிச் செல்லலாம்.
“கீழடி அகழ்வாராய்ச்சி தான் நாங்கள் இந்த ஆஃபரை வழங்க முக்கியக் காரணம். பழந்தமிழர்கள் தந்தது தான் நாம் வாழும் இந்த வாழ்வு. எனவே, அவர்களை கௌரவப் படுத்தும் வகையில், பழமையை நினைவு கூறும் வகையில் இந்த ஆஃபரை வழங்கியுள்ளோம். அதனால் தான் ஐந்து பைசா நாணயத்தை தேர்வு செய்தோம்,” என்கிறார் முஜிப் பிரியாணிக் கடை உரிமையாளர் ஷேக் முஜீபுர் ரஹ்மான்.
உலக உணவு தினமான இன்று மட்டுமில்லாது, எப்போதுமே மக்கள் பசியின்றி வாழ வேண்டும் என்பது தான் இவர்களது முக்கிய நோக்கமாம். அதனாலேயே கூடிய விரைவில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, அவர்களது பகுதியில் உள்ள ஆதரவற்ற முதியவர்களுக்கு தினமும் இலவச உணவு வழங்கும் திட்டம் பற்றியும் ஆலோசித்து வருகிறார்களாம்.
உதவிடத்தான் பிறந்தோம்
மற்றவர்களுக்கு உணவு வழங்க நாமும் உணவகம் தான் நடத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நம்மால் முடிந்த அளவுக்கு, முடிந்த போது ஆதரவற்றோரின் பசியைப் போக்க உதவலாம். அதைத் தான் செய்து வருகிறார்கள் ’உதவிடத்தான் பிறந்தோம்’ எனும் தனியார் தொண்டு நிறுவனத்தினர்.
உலக உணவு தினத்தை முன்னிட்டு சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கியுள்ளனர். இந்த அமைப்பில் இருப்பவர்கள் அனைவருமே தங்களது சொந்த பணத்தில் தான் இந்த உதவியைச் செய்துள்ளனர்.
இது குறித்து 'உதவிடத்தான் பிறந்தோம்' ஒருங்கிணைப்பாளர் விஜய் கூறுகையில்,
“உலக உணவு தினத்தை முன்னிட்டு சுமார் 300 பேருக்கு எங்கள் அமைப்பின் சார்பில் உணவு வழங்கப்படுகிறது. இதில் சென்னையில் மட்டும் 210 பேருக்கு உணவு தந்தோம். உணவை நாங்களே சமைத்து தந்தோம். உணவு தினத்திற்காக மட்டுமல்ல, மாதம் ஒருநாள் சாலைகளில் ஆதரவற்று கஷ்டப்படுவோருக்கு உணவு தருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறோம்.
எங்கள் அமைப்பில் உள்ளவர்கள் பெரும்பாலும் வேலைக்குச் செல்பவர்கள் என்பதால், ஞாயிற்றுக்கிழமைகளில் ஒன்றாகச் சேர்ந்து இந்த பணியை நாங்கள் மேற்கொள்கிறோம். இன்றும் சென்னையில் ஆதரவற்றோருக்கு உணவளிக்க திட்டமிட்டுள்ளோம், எனத் தெரிவித்துள்ளார்.
இந்த அமைப்பில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் வாட்ஸ் அப்பில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இது, தற்போது நான்கு மாவட்டங்களில் சுமார் 500 பேரோடு சிறப்பாக இயங்கி வருகிறது.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில், ஆதரவற்றவர்களுக்கு முகச்சவரம் செய்து, அவர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் சேவையையும் இவர்கள் செய்து வருகின்றனர். அதோடு, தந்தை இல்லாத குழந்தைகளுக்கு கல்லூரி கட்டணம் செலுத்துவது, மருத்துவ உதவி ஏற்பாடு செய்து தருவது என பல்வேறு வகையிலும் இவர்கள் உதவுகின்றனர்.
மேலும், அரசு பள்ளிகளின் சுற்றுச்சுவர்கள், பேருந்து நிலைய சுவர்களிலும், விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்து தருகிறார்கள் உதவிடத்தான் பிறந்தோம் தொண்டு நிறுவனத்தினர். உதவி தேவைப்படுபவர்கள் தயங்காமல் 9710972097 என்ற தனது எண்ணிற்கு அழைக்கலாம் என்கிறார் விஜய்.