‘உலக இதய தினம்’ - இருதயத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி?
இருதயத்தை பாதுகாப்பாகவும், வலிமையாகவும் வைத்திருப்பது எப்படி என இதய நோய் சார்ந்த நுண்துளையீட்டு நிபுணர் டாக்டர் அசோக் குமார் கூறும் அறிவுரைகள் இதோ.
இந்த இயந்திரத்தனமான உலகத்தில் பணம், பொருள் ஈட்ட வேகமாக நாம் அனைவரும் ஓடிக்கொண்டிருந்தாலும், அதைவிட முக்கியம் வாய்ந்தது நம் உடல் ஆரோக்கியம் என அவ்வப்போது நினைவுப்படுத்திக் கொள்வது அவசியம்.
ஒழுங்காக சாப்பிடக் கூட நேரமில்லாமல் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் சிலர், கிடைக்கும் நேரத்தில் எல்லாம் துரித சாப்பாட்டை வஞ்சனை இல்லாமல் சாப்பிடுபவர்கள் சிலர் என பலவித பழக்கவழக்கங்களுடன் வாழ்ந்து வரும் நாம் இவற்றையெல்லாம் தாங்கும் வலிமையான இதயத்தை கொண்டிருக்கவேண்டும். ஆனால் அது அவ்வளவு சுலபமல்ல.
நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புகளுக்கு ஒவ்வொரு சிறப்பம்சமும், தனித்துவமும் உண்டு. அதை நன்கு அறிந்து அதற்கேற்ப அதை ஆரோகியமாக வைத்திருந்தால் மட்டுமே நாம் நிம்மதியான வாழ்க்கையை வாழமுடியும்.
இதய தினத்தை இன்று கொண்டாடிவரும் வேளையில், இருதயத்தை பாதுகாப்பாகவும், வலிமையாகவும் வைத்திருக்கும் வழிகளை பார்ப்போம்.
இதயத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி?
24 மணி நேரமும் துடித்துக் கொண்டிருக்கும் இதயத்தை பாதுகாப்பாகவும் வலிமையாகவும் வைத்திருக்க ஆரோக்கியமான உணவு, போதிய அளவு தண்ணீர் குடித்தல், தினசரி உடற்பயிற்சி மற்றும் புகை பிடிக்காமல் இருந்தாலே போதுமானது என்று ரேலா மருத்துவமனையின் இதய நோய் சார்ந்த நுண்துளையீட்டு நிபுணரும், மூத்த ஆலோசகருமான டாக்டர் அசோக்குமார் கூறுகிறார்.
இது குறித்து அவர் விளக்கமாக கூறுகையில், இதய நோய் காரணமாக உலகம் முழுவதும் ஆண்டுக்கு 1 கோடியே 80 லட்சம் பேர் உயிரிழந்து வருகிறார்கள். இதை எதிர்த்துப் போராடும் வகையில், உலக இதயக் கூட்டமைப்பு ‘உலக இதய தினம்’ என்று உருவாக்கி உள்ளது. இந்த தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 29ம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இது உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே இதய நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் இதயத்தை பாதுகாப்பாகவும் வலிமையாகவும் வைத்திருப்பது எப்படி மற்றும் அதன் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன மற்றும் அதை எதிர்த்துப் போராட நீங்கள் எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைள் என்ன மற்றும் உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு எப்படி உதவுவது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே, செப்டம்பர் 29ம் தேதி அன்று, உங்கள் வீடுகளுக்கு அருகில் நடைபெறும் ‘உலக இதய தின’ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இதய நோய் சார்ந்த விழிப்புணர்வை பெறுங்கள் என்று கூருகிறார் டாக்டர்.அசோக்குமார்.
மேலும், அவர் கூறுகையில், உலக அளவில் இதய நோய் காரணமாக அதிக அளவிலான மக்கள் மரணமடைகிறார்கள். இதய ரத்த நாள பாதிப்புகள் அல்லது பக்கவாதம் போன்றவை இதுபோன்ற இறப்புகளுக்கு முக்கியக் காரணிகளாக உள்ளன.
“தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் மற்றும் அதிக நேரம் அமர்ந்து பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே இதய நோய் ஏற்படுகிறது என்றும், இது வளர்ந்த நாடுகளில் அதிகம் ஏற்படுகிறது என்றும் மக்களிடையே பொதுவாக தவறான கருத்து நிலவி வருகிறது. ஆனால், 80 சதவீத இறப்புகள் நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் உள்ள நாடுகளிலேயே ஏற்படுகிறது. இதய நோய்க்கு உடற்பயிற்சியின்மை, புகைபிடித்தல் மற்றும் மோசமான உணவு பழக்க வழக்கங்கள் முக்கிய காரணங்களாக உள்ளன,” என்கிறார்.
ஒவ்வொரு நாட்டின் பொருளாதார அமைப்பும் இதய நோய் பாதிப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சிகிச்சைக்கான அதிக செலவு மற்றும் நோய்களுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காமை ஆகியவற்றின் காரணமாக நோய் பாதித்தவர்களுக்கு வேலை இழப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் 90க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த ‘உலக இதய தின’த்தை கடைபிடித்து வருகின்றன. இதன் மூலம், இதய நோய் பற்றிய தகவல்களை மக்களிடம் கொண்டு செல்ல முடிகிறது. இந்த நோய்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அரசும், பிற தொண்டு நிறுவனங்களும் தங்கள் பங்களிப்பை வழங்குவது என்பது மிகவும் முக்கியமானதாகும்.
கொரோனா காலத்தில் இதய பிரச்சனைகள்
கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் ischemic என்னும் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத் தடை மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்றவை காரணமாக இறப்புகள் அதிகரித்தன.
உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில், இதய நோய் பாதித்தவர்களுக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதும் தெரிய வந்தது. தற்போது கோவிட்-19 தொற்றின் தாக்கம் என்பது கணிசமாக குறைந்துள்ள போதிலும், மறைமுகமான பாதிப்பு குறித்து மிகுந்த கவலைகள் உள்ளன. குறிப்பாக இதய நோய் பாதித்தவர்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்.
கோவிட் – 19 காலத்தில் ஏற்பட்ட அதிக அளவிலான உயிரிழப்பு என்பது கோவிட் காரணமாக மட்டுமே ஏற்பட்டது என்று கூறிவிட முடியாது என்று பல்வேறு அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
கொரோனா தொற்று கடந்த 2020–2021–ம் ஆண்டில் சுகாதாரப் பாதுகாப்பில் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியது. இதில், இதய நோய்களைக் கண்டறிவதில் தாமதம் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமை ஆகியவையும் அடங்கும்.
”உலக அளவில் ஏற்படும் மரணத்திற்கு முக்கியக் காரணமாக இதய நோய்கள் இருந்து வருகின்றன. இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை பெற்றால் அதில் இருந்து நோயாளிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். கோவிட்-19 இதயத்தை பாதிக்கிறது மற்றும் முன்பே இதய நோய் உள்ளவர்களுக்கு கடுமையான தொற்று பாதிப்பையும் இது ஏற்படுத்துகிறது. எனவே, தொற்று நோய்களின் போது இதயத்தை முன்னெப்போதையும் விட கவனித்துக் கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.”
ஒரு பக்கம் இதய நோய் வராமல் தடுப்பதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டும். மற்றொருபுறம் கோவிட்–19 பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
எனவே, ஆரோக்கியமான உணவு, போதிய அளவு தண்ணீர், தினசரி உடற்பயிற்சி மற்றும் புகைபிடித்தலை தவிர்த்தல் போன்றவை நமது இதயத்தை வலிமையாக வைத்திருக்க உதவுவதோடு, இதய நோய் வராமலும் பாதுகாக்கும் என்றும் டாக்டர் அசோக் குமார் தெரிவித்தார்.
இதய நோயை ஆரம்ப நிலையிலே கண்டறியக் கூடிய பயோசென்சார் உருவாக்கிய ஐஐடி குழு!
Edited by Induja Raghunathan