'யோகா; கொரோனா வைரஸுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்’ - பிரதமர் மோடி
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி 'யோகா தினம்' ஒற்றுமைக்கான நாள். இது உலகளாவிய சகோதரத்துவத்தின் நாள், என்றார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி காணொளிப் பதிவு மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
'யோகா தினம்' ஒற்றுமைக்கான நாள். இது உலகளாவிய சகோதரத்துவத்தின் நாள்.
கோவிட்-19 உலகளாவிய சுகாதார அவசரநிலை காரணமாக, இந்த ஆண்டு சர்வதேச யோகா தினம் மின்னணு மற்றும் டிஜிட்டல் தளம் மூலம் அனுசரிக்கப்படுகிறது. மக்கள் தங்கள் முழு குடும்பத்தினருடனும் தங்கள் வீடுகளில் யோகா பயிற்சி செய்கிறார்கள், என்று பிரதமர் கூறினார்.
யோகா நம்மை ஒன்றிணைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
‘என் வாழ்க்கை - எனது யோகா’ என்ற வீடியோ வலைப்பதிவிடல் போட்டியில் உலகெங்கிலும் உள்ள மக்களின் பெரும் பங்கேற்பு யோகா பிரபலமடைவதை பிரதிபலிக்கிறது, என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இன்று, நாம் அனைவரும் அதிகமான கூட்டங்களில் இருந்து விலகி, நம் குடும்பங்களுடன் வீட்டில் யோகா பயிற்சி செய்ய வேண்டும். இந்த ஆண்டு யோகா தினம் 'வீட்டில் யோகா மற்றும் குடும்பத்துடன் யோகா' என்று மையப்பொருளைக் கொண்டு அனுசரிக்கப்படுகிறது.
குழந்தைகள், இளைஞர்கள், குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் ஒன்றாக யோகா பயிற்சி செய்வதால் குடும்பப் பிணைப்பை யோகா ஊக்குவிக்கிறது, வீட்டில் நல்ல சாதகமான/ஆக்கபூர்வமான சூழ்நிலை ஏற்படுகிறது. யோகா உணர்ச்சி நிலைத்தன்மையையும் ஊக்குவிக்கிறது, என்று அவர் கூறினார்.
“யோகா; உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உங்கள் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் பிராணயாமாவை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிராணயாம யோகா அல்லது சுவாசப் பயிற்சிகள் நமது சுவாச மண்டலத்தைப் பலப்படுத்துகின்றன.
கோவிட் - 19 வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்படுவது உடலின் சுவாச அமைப்பு என்பதால், இது தற்போதைய சூழ்நிலையில் மிகவும் பொருத்தமானது”, என்று பிரதமர் எடுத்துரைத்தார்.
பிரதமர் கூறுகையில், ஒற்றுமைக்கான சக்தியாக யோகா உருவெடுத்துள்ளது. இது பாகுபாடு காட்டாததால் மனிதகுலத்தின் பிணைப்பை ஆழப்படுத்துகிறது. இது இன, நிறம், பாலினம், நம்பிக்கை மற்றும் நாடுகளுக்கு அப்பாற்பட்டு செல்கிறது.
யார் வேண்டுமானாலும் யோகா பயிற்சி மேற்கொள்ளலாம். நம்முடைய ஆரோக்கியத்தையும் நம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ள முடிந்தால், ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான மனிதகுலத்தை உருவாக்குவதில் உலகம் வெற்றி காணும் நாள் வெகு தொலைவில் இல்லை. இதைச் செய்ய யோகா நிச்சயமாக நமக்கு உதவும், என்று கூறினார்.
“ஒரு நல்ல குடிமக்களாக, நாம் ஒரு குடும்பமாகவும் சமூகமாகவும் ஒற்றுமையாக முன்னேறுவோம். ‘வீட்டில் யோகா, குடும்பத்துடன் யோகா’ என்பதை நாம் நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாற்ற முயற்சிப்போம். நாம் நிச்சயமாக வெற்றி பெறுவோம்”, என்று பிரதமர் கூறினார்.