உலகப் பணக்காரர் அதானி 8 நாட்களில் 10 லட்சம் கோடியை இழந்தது எப்படி?
இந்திய பங்குச்சந்தை வரலாற்றிலேயே 20 ஆயிரம் கோடிக்கான மிகப்பெரிய FPO-யை அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் வெளியிடவிருந்த தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வந்த நிலையில், ஒரே வாரத்தில் நிலைமை தலைகீழாக மாறி முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை கொடுக்கும் நிறுவனமாக மாறியுள்ளது.
இந்திய பங்குச்சந்தை வரலாற்றிலேயே 20 ஆயிரம் கோடிக்கான மிகப்பெரிய FPO-யை அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் வெளியிடவிருந்த தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வந்த நிலையில், ஒரே வாரத்தில் நிலைமை தலைகீழாக மாறி முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை கொடுக்கும் நிறுவனமாக மாறியுள்ளது.
8 நாட்களில் அதானியின் பங்குகள் கடும் வீழ்ச்சியடைய காரணம் என்ன? இதுவரை சரிந்துள்ள சொத்து மற்றும் பங்குகளின் மதிப்பு எவ்வளவு? என பார்க்கலாம்...
Hindenburg அறிக்கை:
அதானி குழுமம் பங்குச் சந்தையில் பெரும் மோசடி செய்துள்ளதாக முன்னணி முதலீட்டு ஆய்வு நிறுவனமான Hindenburg ரிசர்ச் குற்றம் சாட்டியுள்ளது. அதானி குழுமத்தின் பங்குகளை பெருமளவில் கையாள்வதாகவும் கணக்கு மோசடி செய்ததாகவும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனம் குற்றம் சாட்டியது.
சமீபத்தில் இந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக பங்குகளை கையாளுதல் மற்றும் அக்கவுண்ட்களை கையாளுதலில் மோசடி செய்துள்ளதாகக் குறிப்பிட்டது.
120 பில்லியன் டாலர்கள் மற்றும் சுமார் ரூ.10 லட்சம் கோடி மதிப்புள்ள கௌதம் அதானியின் சொத்து மதிப்பு, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 100 பில்லியன் டாலர்கள் அளவிற்கு அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் அவருடைய ஏழு பங்குகளின் மதிப்பு பங்குச்சந்தையில் அபரிவிதமாக அதிகரித்து தான் என்றும், இந்த காலகட்டத்தில் சராசரியாக ஒவ்வொரு பங்கும் 819 சதவீதம் உயர்ந்ததாகவு, ஹிண்டன்பர்க் தனது அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது.
இதனையடுத்து, கடந்த புதன்கிழமை முதல் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் சரிவை நோக்கி நகர்ந்து வருகிறது. புதன் கிழமை ஒரே நாளில் அதானி குழுமத்தின் பங்குகள் சரசரவென சரிந்து 49 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதனையடுத்து, வெள்ளிக்கிழமை அதன் இழப்பு 4 லட்சம் கோடியாக அதிகரித்தது.
அதானி குழுமத்திற்கு பின்னடைவு:
கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் எஃப்.பி.ஓ. பங்கு விற்பனையைத் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு மூன்று நாட்களுக்கு முன்னால் வெளியான ஹிண்டன்பர்க் அறிக்கை அதானி குழுமத்திற்கு பேரிடியாக அமைந்தது.
எனவே, அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிந்து வருவதால் ஏற்கனவே முதலீட்டாளர்கள் கடும் நஷ்டத்தில் உள்ள நிலையில், புதிய எஃப்.பி.ஓ. வெளியிட்டை கைவிட முடிவெடுத்தது. இதனால் சர்வதேச அளவில் கெளதம் அதானியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டது.
8வது நாளாக எவ்வளவு சரிவு?
கடந்த வாரம் முழுவதும் இந்திய பங்குச்சந்தையில் அதானி குழுமப் பங்குகள் கடும் சரிவை சந்தித்தை வந்த நிலையில், இன்றுடன் 8வது நாளாக சரிவை பதிவு செய்துள்ளது.
அதானி டிரான்ஸ்மிஷன் 10 சதவீதம் சரிந்து ரூ.1,261.40 ஆக இருந்தது. அதானியின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் 7.5 சதவீதம் சரிந்து, ரூ.1,465 ஆக இருந்தது. அதானி கிரீன் எனர்ஜி, அதானி பவர், அதானி டோட்டல் கேஸ், அதானி வில்மர் ஆகிய நிறுவனங்கள் தலா 5 சதவீதமும், என்டிடிவி 4.98 சதவீதமும் சரிந்துள்ளது.
இன்றைய அமர்வில் இந்த 10 பங்குகளின் சந்தை மூலதனத்தின் மொத்த இழப்பு ரூ.50,000 கோடிக்கும் அதிகமாக இருந்தது, அதாவது, அவற்றின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பு ரூ.9.58 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.
மொத்தமாக கடந்த 8 வர்த்தக நாட்களில் அதானி குழுமத்தின் இழப்பு சுமார் ரூ.10 லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அதானி சொத்து மதிப்பு கடந்த 10 நாட்களில் 64.7 பில்லியன் டாலர்கள் குறைந்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு 120 பில்லியன் டாலர்கள் தனிப்பட்ட சொத்து மதிப்புடன் நான்காவது இடத்தில் இருந்த கெளதம் அதானி, தற்போது 61.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 17வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
அதானி வாங்கியுள்ள கடன்கள்:
எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலாண்டு அறிக்கையின் படி, அதானி குழுமத்துக்கு எஸ்பிஐ வங்கி 27000 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது.
எஸ்பிஐ வங்கியின் தலைவர் தினேஷ் குமார் காரா கூறுகையில்,
“அதானி குழுமத்துக்கு எஸ்பிஐ மொத்தம் 27,000 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. இது 2022 டிசம்பர் 31 நிலவரப்படி எஸ்பிஐ வழங்கிய மொத்த கடன்களில் 0.88% ஆகும். அதானி குழுமம் எஸ்பிஐ வங்கிக்கு கடன்களை திருப்பி செலுத்துவதில் எந்தவொரு சவாலும் இருப்பதாகத் தெரியவில்லை,” எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி), மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐக்கள்) வெறும் 7 நாட்களில் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் இழப்பை சந்தித்துள்ளன. இந்த இரண்டு நிறுவனங்களும் அதானி குழுமத்தின் 10 நிறுவன பங்குகளில் 1,90,782 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்துள்ளனர்.
குறிப்பாக மத்திய அரசு நிறுவனங்களில் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ.சி., 7 அதானி குழும பங்குகளில் முதலீடு செய்துள்ளது. கடந்த 7 நாட்களாக முதலீடுகளின் மதிப்பு குறைந்ததால் எல்.ஐ.சி. நிறுவனத்திற்கு ரூ.38,509 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
மியூச்சுவல் ஃபண்டுகளின் முதலீடுகளின் மதிப்பு ஏழு நாட்களில் 8,282க்கு மேல் குறைந்து 16,280 கோடி ரூபாயாக சரிந்துள்ளது. இன்னும் வரவிருக்கும் நாட்களில் அதானி குழுமத்தில் என்னவெல்லாம் நடக்கும், அதன் எதிரொலியாக பங்குச்சந்தையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று தீவிரமாக உற்றுநோக்கப்பட்டு வருகிறது.
அதானி குழுமத்திற்கு அடுத்த அடி - அமெரிக்க பங்குச்சந்தை அளித்த அதிர்ச்சி அறிவிப்பு!