10 ஆண்டுகள், 254 அவுட்லெட்டுகள், 13 நகரங்கள்: 'Wow Momo' விரிவாக்கம்!
கொல்கத்தாவைச் சேர்ந்த 'வாவ் மோமோ' இரண்டாவது பிராண்டான ’வாவ் சைனா’வை அறிமுகப்படுத்துகிறது. நிதி திரட்டவும், பேக் செய்யப்பட்ட, ஃப்ரோசன் பொருட்களை அறிமுகப்படுத்தவும், ஐபிஓ சார்ந்த திட்டமிடலில் ஈடுபடவும் உள்ளது.
கொல்கத்தாவில் உள்ள செயிண்ட் சேவியர் கல்லூரி மாணவர்கள் இருவரால் தொடங்கப்பட்ட 'வாவ் மோமோ' (Wow Momo) கடந்த பத்தாண்டுகளாக டம்ப்ளிங்ஸ், டிம் சம் போன்ற பல்வேறு வகைகளை வழங்கி வருகிறது. 13 நகரங்களில் 254 அவுட்லெட்களுடன் செயல்படும் இந்த ஸ்டார்ட் அப் அதன் அடுத்த சாப்டரைத் தொடங்குவதில் மும்முரமாக உள்ளது.
இந்த ஸ்டார்ட் அப் இன்ஃபோ எட்ஜ் நிறுவனர் சஞ்சீவ் பிக்சாந்தனி, இன்ஃபோசிஸ் முன்னாள் சிஇஓ க்ரிஸ் கோபாலகிருஷ்ணன், ஹீரோ எண்டர்பிரைஸ் தலைவர் சுனில் காந்த் முஞ்சல் போன்றோரிடமிருந்து முதலீடு பெற்றுள்ளது. ஒழுங்குபடுத்தப்பட்ட மோமோ வணிக சந்தையில் 90 சதவீதம் பங்களிப்பதாக இந்நிறுவனம் தெரிவிக்கிறது. விரைவு சேவையளிக்கும் இந்த சங்கிலித் தொடர் உணவகம் மிகப்பெரிய அளவில் விரிவடைய திட்டமிட்டுள்ளது. ஐபிஓ சார்ந்த திட்டமிடலிலும் ஈடுபட்டுள்ளது.
”சாலையோர உணவுகளை சுத்தமான முறையில் வழங்குவதே எங்களது தனித்துவமான அம்சமாகும். நாங்கள் சாலையோர மோமோக்களை பிராண்டாக உருவாக்கியுள்ளோம்,” என்றார் வாவ் மோமோ இணை நிறுவனர் மற்றும் சிஇஓ சாகர் தர்யானி.
கொல்கத்தாவின் பார்க் ஸ்ட்ரீட் பகுதியில் உள்ள இந்த ஸ்டார்ட் அப்பின் முக்கிய அவுட்லெட்டில் யுவர்ஸ்டோரி உடனான உரையாடலில் இவ்வாறு பகிர்ந்துகொண்டார். சிஒஒ பினோத் குமார் ஹோமாகை மற்றும் சிஎஃப்ஒஒ, ஷா மிஃப்தார் ரஹ்மான் ஆகியோர் இந்நிறுவனத்தின் மற்ற இணை நிறுவனர்கள் ஆவர்.
இந்த ஸ்டார்ட் அப் ’வாவ் மோமோ’ பிராண்டை வெற்றிகரமாக உருவாக்கிய பிறகு ’வாவ் சைனா’ என்கிற அதன் இரண்டாவது பிராண்டை வலுப்படுத்தும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் பிரபலமாகியுள்ள சீன உணவு வகையின் இந்தியன் வெர்ஷனில் (Chindian) இந்நிறுவனம் தற்போது கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். வடக்கு மற்றும் தென்னிந்தியா முழுவதும் சீன உணவு வகைகள் இரண்டாவது பிரபல உணவு வகையாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
2022-ம் ஆண்டில் இந்தியாவில் உணவு சேவை சந்தை 5.52 ட்ரில்லியனை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக FICCI மற்றும் டெக்னோபாக் அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் வெளிநாட்டு உணவு வகைகளில் சீன உணவு வகை இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
”வாவ் மோமோ’வைக் காட்டிலும் ’வாவ் சைனா’ அதிக லாபம் ஈட்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். அடுத்த நான்காண்டுகளில் 1,000 கோடி ரூபாயை எட்ட உள்ளோம். மொத்த வருவாயில் நான்கில் ஒரு பங்கு வாவ் சீனா வாயிலாகவே இருக்கும் என எதிர்பார்க்கிறோம்,” என்றார் சாகர்.
தாய் பிராண்டான ’வாவ் மோமோ’ போன்றே ’வாவ் சைனா’ பிராண்டும் கியோஸ்க்குகளாகவும் மால், தொழில்நுட்ப பூங்காக்கள், ஹை ஸ்ட்ரீட் பகுதிகள் போன்றவற்றில் அவுட்லெட்டுகளாகவும் க்ளௌட் கிச்சனாகவும் செயல்படும்.
இந்த பிராண்டின் வருவாய் நிதியாண்டு 2019-ல் 120 கோடி ரூபாயை எட்டியது. இந்த நிதியாண்டில் 200 கோடி ரூபாயை எட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக சாகர் தெரிவித்தார்.
இரண்டாவது பிராண்ட் அறிமுகப்படுத்திய காரணத்தை அவர் கூறும்போது, “சீன உணவு வகை பிரபலமாக இருப்பதால் அதை அறிமுகப்படுத்த எண்ணினோம். சாஸ், கிரேவி போன்றவற்றை நாங்களே தயாரிக்கிறோம். மோமோ, நூடுல்ஸ் போன்றவற்றிற்கு எங்களது மாவையே பயன்படுத்துகிறோம்,” என்றார்.
தற்போது கொல்கத்தா மற்றும் அதன் புறநகர் பகுதிகள், மும்பை, டெல்லி, குருகிராம், நொய்டா, ஃபரிதாபாத், காசியாபாத், பெங்களூரு, சென்னை, கொச்சின், புவனேஷ்வர், கட்டாக், புரி, ரூர்கெலா போன்ற பகுதிகளில் இந்த ஸ்டார்ட் அப்பின் அவுட்லெட்கள் செயல்படுகிறது. புனே, கோவா, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் விரைவில் செயல்பட உள்ளது.
இந்த நிதியாண்டில் 140 ஸ்டோர்களைத் திறக்க இந்த ஸ்டார்ட் அப் திட்டமிட்டுள்ளது. இதில் 100 வாவ் மோமோ அவுட்லெட்களாகவும் 40 வாவ் சைனா அவுட்லெட்களாகவும் இருக்கும். மேலும் சொமேட்டோ, ஸ்விக்கி போன்ற ஆன்லைன் உணவு தொழில்நுட்பத் தளங்கள் வாயிலாக வாடிக்கையாளர்களைச் சென்றடைய இந்த ஆண்டு க்ளௌட் கிச்சன் திறக்கவும் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த ஸ்டார்ட் அப் 81 வாவ் மோமோ அவுட்லெட்களையும் மூன்று வாவ் சைனா அவுட்லெட்களையும் திறந்துள்ளது.
வாவ் சைனா போட்டியாளர்கள் குறித்து சாகர் கூறும்போது, “வாவ் மோமோ போன்றே நாடு முழுவதும் செயல்படும் மற்ற தேசிய பிராண்டுகள் எதுவும் இல்லை. தற்போது இந்தியாவில் செயல்படும் உலகளவிலான QSR பிராண்டான Wok to Walk பெரும்பாலும் என்சிஆர் பகுதிகளில் செயல்படுகிறது. ஒரு அவுட்லெட் கொல்கத்தாவில் உள்ளது.
இந்தியாவில் உள்ள டொமினோஸ் பீட்சா மற்றும் Dunkin’ Donuts உணவக சங்கிலித் தொடரை இயக்கி அரும் ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ் சமீபத்தில் குருகிராமில் ஹாங்ஸ் கிச்சன் உணவகத்தை அறிமுகப்படுத்தி இந்தப் பிரிவில் செயல்படத் தொடங்கியுள்ளது.
சூப்பர்மார்க்கெட்டுகளில் கவனம் செலுத்தப்படுகிறது
வெளிநாடுகளில் ”சூப்பர்மார்கெட் சுஷி” இயங்குவது போன்றே சூப்பர்மார்க்கெட்டுகளில் ’குளிரூட்டப்பட்ட மோமோ’ விற்பனை செய்வதற்கான தொழில்நுட்பத்திலும் இந்நிறுவனம் பணிபுரிந்து வருகிறது என்கிறார் சாகர்.
”நீங்கள் வெளிநாடு சென்றால் ஃப்ரோசன் மோமோ அல்லது டம்ப்ளிங்ஸ் இருப்பதைப் பார்க்கமுடியும். மோமோக்களை ஃப்ரெஷ்ஷாக தயாரித்து விற்பனை செய்வதே எங்களது தனித்துவமான அம்சம் என்பதால் 100 நாட்கள் வரை ஆயுட்காலம் கொண்ட மோமோக்களை தயாரிக்க உதவும் தொழில்நுட்பத்தில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்,” என்றார்.
இந்த முயற்சியின் காரணமாக தற்போது வழங்கப்பட்டு வரும் மோமோக்களின் விற்பனை குறையாது என்று குறிப்பிடும் சாகர் இந்த இரண்டு தயாரிப்புகளும் வாடிக்கையாளர்களின் வெவ்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் என தெரிவித்தார்.
சாஸ் உற்பத்தி செய்து சந்தையில் சில்லறை முறையில் வர்த்தகம் செய்ய டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் உற்பத்தி ஆலை ஒன்றை அமைக்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
”எங்களது சிகப்பு சாஸ் மிகவும் பிரபலமானது. மக்கள் அதை பராத்தா போன்றவற்றுடன் சாப்பிடுவதற்காக பேக் செய்து கொடுக்குமாறும் கேட்கின்றனர். இதில் வாய்ப்பு இருப்பதை நாங்கள் கவனித்தோம்,” என்றார் சாகர்.
2020-ம் ஆண்டில் இந்த சாஸ் சில்லறை வர்த்தகத்தில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
புதிய உணவுவகைகளின் அறிமுகம்
வாவ் மோமோ டார்ஜிலீங் மோமோக்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. “டார்ஜிலீங் மோமோ குறித்து பலர் விசாரித்ததால் இதை அறிமுகப்படுத்தலாம் என தீர்மனைத்தோம்,” என்றார் சாகர். டார்ஜிலிங் மோமோ தனித்துவமான சுவை கொண்டது. வாடிக்கையாளர்கள் இதை உண்பதில் ஆர்வம் காட்டுவதைக் கண்டு இந்த ஸ்டார்ட் அப் இதை அறிமுகப்படுத்த தீர்மானித்தது.
க்ளூட்டன் இல்லாத மோமோக்கள் போன்ற இதர வகைகளை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் சைனீஸ் உணவு வகைகளை இந்திய வெர்ஷனில் வழங்குவதில் இருந்து மாறுபட்டு உண்மையான சைனீஸ் உணவுவகைகளை வழங்குவோம் என சாகர் தெரிவித்தார்.
ஐபிஓ
வாவ் மோமோ சீரிஸ் பி சுற்றில் 120 கோடி ரூபாய் முதல் 150 கோடி ரூபாய் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளது. அதன் வங்கியாளராக EY நியமிக்கப்பட்டுள்ளது.
“எங்களுடன் நீண்ட கால அடிப்படையில் இணைந்திருக்கும் பார்ட்னரை எதிர்நோக்கியுள்ளோம்,” என்றார் சாகர்.
இதற்கு முன்பு இந்நிறுவனம் இந்தியன் ஏஞ்சல் நெட்வொர்க் (IAN) நிறுவனத்திடமிருந்து 2015-ம் ஆண்டு 10 கோடி ரூபாய் ஏஞ்சல் சுற்று திரட்டியது. அதன் பிறகு ஐஏஎன், லைட்ஹவுஸ் ஃபண்ட்ஸ் மற்றும் ஃபேப்இண்டியாவின் வில்லியன் பிசெல் ஆகியோரிடமிருந்து 2017-ம் ஆண்டு சீரிஸ் ஏ சுற்றாக 44 கோடி ரூபாய் உயர்த்தியது. அடுத்த ஐந்து முதல் ஆறாண்டுகளில் இந்திய பங்கு சந்தைகளில் பட்டியலிடப்பட திட்டமிட்டுள்ளது. ஐபிஓ வரை உடன் இணைந்திருக்கும் முதலீட்டாளரையும் எதிர்நோக்கியுள்ளது.
சர்வதேச சந்தைகளில் பங்களிப்பு
இந்நிறுவனம் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் பதிவு செய்துள்ளது. இருப்பினும் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு உள்நாட்டு வணிகத்திலேயே கவனம் செலுத்த உள்ளது.
“நாங்கள் நிச்சயம் துபாய் மற்றும் ஜிசிசி நாடுகளில் (சவுதி அரேபியா, குவைத், யூஏஈ, கத்தார், பஹ்ரைன் மற்றும் ஓமன்) செயல்படுவது குறித்து ஆராய்வோம். இலங்கை, வங்காளம் போன்ற அருகாமை நாடுகளிலும் விரிவடைய உள்ளோம். பாகிஸ்தான் மற்றும் நேபாலில் இருந்து பல வணிக விசாரணைகள் வந்துள்ளன,” என்றார்.
எல்லைகள் கடந்து இந்த பிராண்ட் பிரபலமடைந்தது குறித்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை சாகர் பகிர்ந்துகொண்டார். “வங்காளத்தில் அவுட்லெட் திறந்ததற்காக எனக்கு பலர் வாழ்த்து தெரிவிக்கத் தொடங்கினார்கள். இது குறித்து ஆராய்ந்தபோது அங்கு மோமோக்களை விற்பனை செய்ய ஒருவர் எங்களது பிராண்ட் பெயரையும் லோகோவையும் பயன்படுத்தியது தெரிய வந்தது. அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளோம்,” என்றார்.
ஆங்கில கட்டுரையாளர்: ராமர்கோ செங்குப்தா | தமிழில்: ஸ்ரீவித்யா