Yes Bank நெருக்கடி: வாடிக்கையாளர்கள் அறிய வேண்டிய அம்சங்கள்...
யெஸ் பேங்க்-ல் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் எவ்வளவு பணம் எடுக்க முடியும்? வேறென்ன கட்டுப்பாடுகள் உள்ளன? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை இதோ...
நிதி நெருக்கடிக்கு உள்ளாகியிருந்த யெஸ் பேங்க், ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. வங்கியின் செயல்பாடுகள் முடக்கப்பட்டு, வாடிக்கையாளர்கள் 50,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
யெஸ் பேங்கின் இயக்குனர் குழுவும் முடக்கப்பட்டு, எஸ்பிஐ முன்னாள் சி.எப்.ஓ, வங்கியின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே யெஸ் பேங்கிற்கான மாதிரி செயல் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யெஸ் பேங்கின் நெருக்கடி மற்றும் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் வருமாறு:
என்ன கட்டுப்பாடு?
ஏப்ரல் மூன்றாம் தேதி வரை வாடிக்கையாளர்கள் 50,000 ரூபாய் தான் எடுக்க முடியும். வங்கியின் எத்தனைக் கணக்குகள் வைத்திருந்தாலும், அவை அனைத்திற்கும் சேர்த்து இந்தத் தொகை மட்டுமே எடுக்க முடியும்.
வங்கி செலுத்த வேண்டிய பாக்கித்தொகை ஏதேனும் இருந்தால், அந்தத் தொகை கழித்துக் கொள்ளப்படும். ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கும் இது பொருந்தும். எனவே, ஒரு மாத காலத்திற்கு வங்கிக் கணக்கில் இருந்து 50,000 மட்டுமே எடுக்க முடியும்.
யெஸ் பேங்க் முதலீடுகள் செய்ய, பணம் செலுத்த, சொத்துக்களை மாற்ற அனுமதி இல்லை. பில்களுக்கான பணம் செலுத்தலாம், ஊழியர்கள் சம்பளம் வழங்கலாம். வாடகை மற்றும் வரிகள் செலுத்தலாம்.
விதிவிலக்கு
வாடிக்கையாளர்கள் 50,000 ரூபாய் தான் எடுக்க முடியும் என்றாலும், குறிப்பிட்ட சூழல்களில் ரிசர்வ் வங்கிக்கு விண்ணப்பித்து, விலக்கு பெற்று, 5 லட்சம் வரை எடுத்துக் கொள்ளலாம்.
மருத்துவ அவசர நிலை, சிகிச்சை செலவு, உயர் கல்வி செலவு, திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கான செலவு, எதிர்பாரத அவசர நிலை உள்ளிட்டவற்றுக்கு இவ்வாறு விலக்கு பெற முடியும்.
நடவடிக்கை ஏன்?
தொடர்ந்து மோசமாக கடன் வழங்கி வந்ததன் காரணமாக, யெஸ் பேங்க் தற்போது கடும் நெருக்கடியில் உள்ளது. செயல்பாடுகளை தொடர நிதி திரட்ட வங்கி அவதிப்பட்டு வருகிறது. வங்கியை மீட்க முதலீட்டாளர்களைத் தேடுவதும் தோல்வியில் முடிந்ததால் நிதி நிலை மேலும் மோசமாகியுள்ளது.
இந்நிலையில், வாடிக்கையாளர்கள் நலனை மனதில் கொண்டு ரிசர்வ் வங்கி தலையிட்டு, கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வங்கிக்கான மாதிரி செயல் திட்ட நடவடிக்கையயும் அறிவித்துள்ளது.
பணம் என்னாகும்?
ரிசர்வ் வங்கி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் அவர்கள் நலன் காக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
எனவே வாடிக்கையாளர்கள் காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை. ஐம்பதாயிரம் தொகையை விலக்கி பாதுகாப்பிற்காக வேறு வங்கிக்கு மாற்றிக்கொள்ளலாம்.
தொகுப்பு: சைபர்சிம்மன்