சிறு கிராமத்தில் பிறந்து இன்று உலக மக்களின் வாழ்வை மேம்படுத்தும் சாதனைப் பெண்!
இசை, நடனம், யோகா, ஹீலிங் மூலம் உலக மக்களிடையே சமத்துவத்தை ஊக்குவிக்கும் முயற்சிகளை மேற்கொள்கிறார் நுபுர் திவாரி.
வாழ்க்கை எப்போதுமே வசந்தம் நிறைந்ததாக இருப்பதில்லை. மேடு பள்ளம் நிறைந்தே காணப்படும். தொலைதூர கிராமத்தில் வசிக்கும் நுபுர் திவாரி வாழ்க்கையில் மோசமான சூழல்களை சந்தித்துள்ளார். இருப்பினும் எத்தனையோ போராட்டங்களை எதிர்கொண்டு தனித்துவம் மிக்கவராகத் திகழ்கிறார். இவர் உலகம் முழுவதும் உள்ள பலரது வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு சேர்த்துள்ளார்.
நுபுர் ஊக்கமூட்டும் பேச்சாளர், ஆன்மீக குணப்படுத்துபவர், கொடையாளி, யோகா பயிற்றுவிப்பவர். இவர் மேற்குவங்கத்தின் முர்சிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வளர்ந்தவர். இவரது குடும்பத்தினர் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்களாக இருப்பினும் படித்து முடிப்பதில் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளார்.
நுபுர் தினமும் நான்கு மீட்டர் வரை பள்ளிக்கு நடந்து செல்வார். இவரது கிராமத்தில் மின்சார வசதி இல்லை. இரவு விளக்கின் மங்கலான ஒளியில் படித்துள்ளார்.
தற்போது இவர் ஜப்பானின் டோக்கியோவில் கணவன், மகள் ஆகியோருடன் வசித்து வருகிறார். நுபுர் ஆங்கிலம் கற்க அதிகம் போராடியுள்ளார். எனினும் சோஷியல்ஸ்டோரி உடனான உரையாடலில் சிறப்பாக பேசி நம்மை அசர வைத்தார்.
ஆங்கில மொழி
“நான் என்னைக் குறைத்து மதிப்பிட்டுக்கொண்டு எனக்கான ஒரு தனி உலகத்தில் வாழ்ந்தேன். எல்லோரையும் விட நான் மாறுபட்டவள் என்கிற உணர்வு எப்போதும் எனக்குள் இருந்து வந்தது. கிராமத்தைத் தாண்டி வெளியே இருக்கும் உலகை ஆராயவேண்டும் என்பதற்காகவே விரைவாக படிப்பை முடிக்க விரும்பினேன்,” என்றார்.
இந்தியாவின் மற்ற கிராமப்புறங்களைப் போன்றே பெண் என்பவள் திருமணம் செய்துகொண்டு இல்லத்தரசியாக இருக்கவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இவரது கிராமத்திலும் இருந்தது. ஆனால் நுபுர் தனது திட்டத்தைக் கைவிட விரும்பவில்லை.
பத்தாம் வகுப்பு முடித்ததும் நகர்புறத்திற்குச் சென்றார். நிலைமை மாறத் தொடங்கியது.
“கிராமத்தில் இருந்த வந்ததால் பாரம்பரிய உடைகளையே அணிந்திருந்தேன். ஆங்கிலத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை. மற்ற பெண்கள் நவீன உடையணிந்து தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கும்போது நான் தனித்திருந்தேன்,” என்று அவர் விவரித்தார்.
நுபுரின் ஆர்வம் முற்றிலும் மாறுபட்டிருந்தது. எனவே அவர்களுடன் பேசுவதைத் தவிர்க்க ஒரு புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு ஒரு மூலையில் அமர்ந்திருப்பார். பெரும்பாலான பெண்கள் ஆண்களைக் குறித்தும் டிவி நிகழ்ச்சிகள் குறித்தும் பேசுகையில் நுபுர் டிஸ்கவரி, நேஷனல் ஜியோகிராஃபிக் சானல் ஆகியவை குறித்தே அறிந்திருந்தார்.
பள்ளிப் பருவத்தில் அவர் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தைகூட கற்றுக்கொள்ளாவில்லை. இருப்பினும் பன்னிரண்டாம் வகுப்பை நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார்.
வெளி உலகம்
நுபுர் பள்ளிப்படிப்பை முடித்த உடன் ஒரு பணக்கார நபர் அவரைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினார். ஆனால் நுபுர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் பட்டப்பகலில் நுபுரை சாக்கடையில் பிடித்துத் தள்ளினார். இந்தச் சம்பவத்தை அருகிலிருந்து பார்த்த ஒரு பெண்மணி நுபுரைக் காப்பாற்றியுள்ளார்.
நுர்பு உடனடியாக தன் நண்பருடன் காவல் நிலையம் சென்று இந்த சம்பவம் குறித்து புகாரளித்தார். அந்த பணக்கார நபரின் செல்வாக்கு பற்றி அறிந்த காவலர்கள் நுபுரை கிண்டல் செய்துள்ளனர். காவல்துறை கண்காணிப்பாளர் வந்ததும் இந்த புகாரில் தலையிட்டு அந்த நபரை கைது செய்தார்.
“என் புகாருக்கு மதிப்பளித்தது நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தியது. ஒரு குறுகிய வட்டத்திற்குள் என்னுடைய செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ளக்கூடாது என்பதை உணர்ந்திருந்தேன்,” என்று நுபுர் நினைவுகூர்ந்தார்.
நுபுரின் பாதுகாப்பு கருதி அவரின் பெற்றோர் அவரை அவரது பாட்டி, தாத்தா இருக்கும் இடத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனால் அவரால் வரலாறு பாடம் படிக்கமுடியாமல் போனது. அதற்கு பதிலாக கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அதே கல்லூரியில் சுற்றுலா மற்றும் மேலாண்மை பிரிவைத் தேர்வுசெய்தார்.
ஒவ்வொரு ஆண்டும் வகுப்பில் முதலிடம் பிடித்தார். இறுதி மூன்று மாதங்கள் சிறிது நேரம் செலவிட்டு கற்றுக்கொடுக்கத் தொடங்கி 500 ரூபாய் வரை சம்பாதித்தார். நுபுர் இந்திய சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை நிறுவனத்தில் (IITTM) முதுகலைப் படிப்பு முடிக்க விரும்பினார். ஆனால் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவே தன்னுடைய கனவைக் கைவிட்டார்.
“என்னுடைய கிராமத்தில் உள்ள பெண்கள் வெளியில் செல்வது குறித்து கனவுகூட காண்பதில்லை. ஆனால் நான் முன்னேறவேண்டுமானால் இத்துடன் திருப்தியடைந்து விடக்கூடாது என்பதை உணர்ந்திருந்தேன். என்னுடைய இலக்கை அடையவேண்டுமானால் முதலில் கிராமத்தை விட்டு வெளியே அடியெடுத்து வைக்கவேண்டும் என்பதை உணர்ந்திருந்தேன்,” என்றார் நுபுர்.
கொல்கத்தாவில் உள்ள ஒரு விருந்தோம்பல் நிறுவனத்தில் தற்காலிக பணிவாய்ப்பு குறித்து தெரிந்துகொண்டார். உடனே கிளம்பத் தயாரானார். அவரது அம்மா அனுமதியளித்ததால் மட்டுமே இது சாத்தியமானது.
ஜப்பான்
“என்னுடைய பெற்றோர் பாரம்பரியமிக்கவர்கள். இருப்பினும் என்னுடைய வாழ்க்கைத் தேடலுக்கு அனுமதித்தனர். அவர்கள் சிறந்த உதாரணங்களுடன் எனக்கு வாழ்க்கையைக் கற்றுக்கொண்டுத்தனர். என்னுடைய கனவை எட்ட ஆதரவளித்தனர். இதைக் காட்டிலும் எது என்னை வலிமையாக்க முடியும்?” என்றார்.
இவரது குடும்பத்தினர் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றை இந்திய முறையில் நடனம், இசை, யோகா ஆகியவற்றைக் கொண்டு குணப்படுத்தினர். இதுவே தனது வாழ்க்கையில் முக்கியப் பங்களிக்கும் என்பதை நுபுர் அப்போது அறிந்திருக்கவில்லை.
Mitsubishi நிறுவனத்தில் நுபுருக்கு பணி கிடைத்தது. பணியிடத்தில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆனார். இருப்பினும் விடாமுயற்சியுடன் கடினமாக உழைத்தார். 2003-ம் ஆண்டு ஜப்பானில் அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பு அவரது வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றிவிட்டது.
நுபுருக்கு ஜப்பான் மற்றுமொரு வீடு போன்று நெருக்கமாகிப்போனது. ஜப்பானியர்களின் வாழ்க்கையில் இந்திய கலாச்சாரத்தை இணைப்பதில் மும்முரமாக செயல்பட்டார்.
“இசை, நடனம், யோகா என எனக்குத் தெரிந்ததை அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தேன். சமையல் பயிற்சியளித்தேன். வங்காள மொழி கற்றுக்கொடுத்தேன்,” என்றார்.
இந்தியாவின் பாரம்பரியத்தை ஜப்பானில் கொண்டு சேர்க்கும் இவரது முயற்சி விரைவிலேயே ‘அதிகாரபூர்வமற்ற ஜப்பானிய தூதர்’ என்கிற பட்டத்தை பெற்றுத் தந்தது.
2015-ம் ஆண்டு ஜப்பானின் குமமோடோ பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கியூஷூ பகுதி கடுமையாக பாதிப்படைந்தது. பலர் வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்து தவித்தனர்.
“ஜப்பான் என் வாழ்க்கையை மாற்றியது. எனவே என்னால் இயன்ற வகையில் பங்களிக்க விரும்பினேன். நாட்டிற்கு பணம் தேவையில்லை. அவர்களை குணப்படுத்தவேண்டியிருந்தது. என்னாலும் அதைக் கொடுக்க முடிந்தது,” என்றார்.
துக்கத்தில் இருந்த மக்களுக்கு நுபுர் இலவசமாக யோகா வகுப்புகளும் ஆலோசனைகளும் வழங்கத் தொடங்கினார். ஒவ்வொரு அமர்விலும் ஒரு நன்கொடை பெட்டி வைக்கப்பட்டது. யார் வேண்டுமானாலும் அதில் நன்கொடை வழங்கலாம். இந்தத் தொகை புனர்வாழ்விற்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டது.
HealTokyo, HealIndya இயக்கங்கள்
தற்கொலைகளும் பதற்றத்துடன்கூடிய மனநிலையும் அதிகரித்திருந்த டோக்கியோ நகரில் 2017-ம் ஆண்டு HealTokyo என்கிற இயக்கத்தை நுபுர் நிறுவினார். இது இலவச யோகா மற்றும் ஆலோசனை அமர்வுகள் மூலம் மக்களின் வேதனையை தணிக்கும் முயற்சியாகும்.
2018-ம் ஆண்டு இந்த முயற்சியை HealIndya என்கிற பெயரில் தன்னுடைய தாய்நாட்டிற்கும் விரிவுபடுத்தினார். அலிகார் பகுதியில் உள்ள ஒரு பள்ளியை முதலில் தத்தெடுத்துக்கொண்டார்.
HealTokyo மூலம் கிடைத்த நிதியில் பள்ளியை புதுப்பித்தார். அந்தப் பள்ளி தற்போது வண்ணமயமான சுவர்களுடனும் மகிழ்ச்சி நிறைந்த முகங்களுடனும் காணப்படுகிறது. மாணவர்களுக்குத் தேவையான எழுதுபொருட்கள், புத்தகங்கள், சீருடைகள் போன்றவற்றையும் வழங்கினார்.
நுபுர் தான் சந்தித்த போராட்டங்களை மற்ற குழந்தைகளும் அனுபவிக்ககூடாது என்று விரும்பினார்.
நுபுர் ஊக்கமளிக்கும் பேச்சாளராகவும் ஆலோசகராகவும் பணியாற்றுகிறார். இவர் முதுகலைப் பட்டப்படிப்பு படிக்க விரும்பிய IITTM உட்பட இந்தியா மற்றும் ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு அமர்வுகளை ஏற்பாடு செய்துள்ளார்.
“இளைஞர்களுக்கு சக்தியளிக்க விரும்புகிறேன். பலர் நிதி ரீதியாக மேம்படுவது குறித்து பேசினாலும் நான் மன நலனையே தொடர்ந்து வலியுறுத்துகிறேன். மாணவர்கள் தங்களது திறனை உணரவேண்டும். இதற்குத் தேவையான நம்பிக்கையை நான் வழங்குகிறேன்,” என்றார்.
ஐக்கிய நாடுகள் நுபுரின் முயற்சிகளை அங்கீகரித்துள்ளது. இலங்கை, ஆப்ரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வெள்ள பாதிப்பில் இருந்து மீள உதவுமாறு ஐக்கிய நாடுகள் இவரை நியமித்துள்ளது.
எஸ்பிஐ-ன் The Womanity Foundation, Global MICE, இந்தியா ஸ்டார் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், தி நர்கீஸ் தத் ஃபவுண்டேஷன் போன்றவை இவரது முயற்சிகளை அங்கீகரித்துள்ளது.
கோவிட்-19 குணப்படுத்தும் அமர்வுகள்
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு இலவசமாகவும் கட்டண அடிப்படையிலும் ஆன்லைன் அமர்வுகள் வழங்குகிறார். இந்த அமர்வுகள் மூலம் கிடைக்கும் தொகையை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்குகிறார்.
இவவச அமர்வுகள் அவரது முகநூல் பக்கத்தில் ஒளிபரப்பப்படுகிறது. கட்டணத்துடன் கூடிய அமர்வுகள் ஜூம் வாயிலாக ஏற்பாடு செய்யப்படுகிறது.
வருங்காலத் திட்டம்
“HealIndya மூலம் நலிந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் முதியவர்களைப் பராமரிக்க விரும்புகிறேன். உணவு, தங்குமிடம் போன்றவற்றை வழங்கி இந்தக் குழந்தைகள் மற்றவர்களுக்கு இணையாக வாழ்வதை உறுதிசெய்ய விரும்புகிறேன்,” என்றார் நுபுர்.
ஜப்பானிய கற்றல் முறையில் அறைகளை சுத்தம் செய்வது, ஷூக்களை பாலிஷ் செய்வது என சுயமாக தங்களது பணிகளை செய்துகொள்ள மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். நுபுர் இந்த முறையை இந்தப் பள்ளிகளிலும் அறிமுகப்படுத்த விரும்புகிறார்.
சிறைக்கைதிகள் மிகவும் கடினமான காலகட்டத்தை அனுபவித்து வருகின்றனர். எனவே அவர்களை குணப்படுத்தும் அமர்வுகளைத் தொடங்க நுபுர் விரும்புகிறார். நுபுர் தனக்குத் தெரிந்த தொடர்புகள் மூலம் முயற்சி செய்து பார்த்தார். ஆனால் பலனில்லை. இதைப் பெரியளவில் செயல்படுத்த திட்டமிட உள்ளார்.
நுபுர் பல்வேறு சவால்களை சந்தித்திருப்பினும் தன்னம்பிக்கையுடன் தனக்கான பாதையில் பயணித்தார். மக்களிடம் உள்ள திறனைக் கண்டறிந்து அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படவும் உதவுகிறார்.
“நான் சிறுவயதில் பல்வேறு போராட்டங்களை சந்தித்ததால்தான் இந்த நிலையை எட்டியுள்ளேன். ஒருவேளை ஆடம்பரமான வாழ்க்கையை நான் வாழ்ந்திருந்தால் என்னுடைய வசதியான வட்டத்தை விட்டு வெளியே வந்திருக்க மாட்டேன்,” என்றார்.
ஆங்கில கட்டுரையாளர்: அஞ்சு அன் மேத்யூ | தமிழில்: ஸ்ரீவித்யா