என்ன! டிவி பார்த்தால் சம்பளமா? எங்கே? எவ்வளவு?
இந்த வேலைக்கு 1 மணி நேரத்திற்கு 35 பவுண்ட் (இந்திய மத்திப்பில் சுமார் ரூ.3200) சம்பளம், ஒரு வாரத்திற்கு 20 மணி நேரம் வேலை செய்தால் 65,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
டிவி பார்த்து ஏன் டைம் வேஸ்ட் பண்ற? உருப்படியான வேலை எதுவும் இல்லையா?
வீட்டில் ஒருவர் டிவி முன்னால் உட்கார்ந்தால் போதும் இந்தக் கேள்விக் கணைகளைத் தொடுக்காதவர்களே இருக்கமுடியாது. என்னதான் 'ஸ்மார்ட்’ டிவி’ என்று நாம் பெருமைபொங்க அழைத்தாலும் அது 'இடியட் பாக்ஸ்’ என்றே தொன்றுதொட்டு அழைக்கப்பட்டு வருகிறது.
இனி நீங்கள் டிவி பார்த்துக்கொண்டிருக்கும்போது உங்களிடம் இந்தக் கேள்வியை யாராவது கேட்டால் நீங்கள் பெருமையாக 'நான் ஒரு டெக் டெஸ்டர்’ என்று சொல்லி மார்தட்டிக் கொள்ளலாம்.
ஆம். 'டெக் டெஸ்டர்' என்பது ஒரு புதிய வேலை. அதென்ன டெக் டெஸ்டர் என்கிறீர்களா? டிவி பார்ப்பதுதான் இந்த வேலையே. அதுவும் சும்மா பார்க்கவேண்டாம். சம்பளம் வாங்கிக்கொண்டு பார்க்கலாம். என்ன நம்பமுடியவில்லையா?
'டெக் டெஸ்டர்' என்ற வேலைக்குத் தயாராக இருப்பவர்கள், கூர்மையான பார்வையும், தங்களின் கருத்தை எழுத்து வடிவில் எழுதத் தெரிந்தவராக இருக்கவேண்டும்.
யூகே-வின் ஆன்லைன் சந்தைப்பகுதியான OnBuy இந்த வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளது. டிவி மட்டுமல்லாது ஸ்மார்ட் வாட்ச், மொபைல் போன், கேமரா, ஹெட்ஃபோன் போன்ற சாதனங்களையும் பயன்படுத்தி சோதனை செய்து 200 வார்த்தைகளில் அந்த சாதனம் குறித்த மதிப்பீட்டை வழங்கவேண்டும்.
ஒவ்வொரு தயாரிப்பையும் முழுமையாக ஆராயவேண்டும். அதன் வடிவமைப்பு, திறன், நீடிப்புத்தன்மை ஆகியவற்றை சோதிக்கவேண்டும். அத்துடன் ஒலி, காட்சியமைப்பு, செயல்பாடு, பணத்திற்கான மதிப்பு போன்ற அம்சங்களையும் ஆராயவேண்டும்,” என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வேலைக்கு ஒரு மணி நேரத்திற்கு 35 பவுண்ட் (இந்திய மத்திப்பில் சுமார் ரூ.3200) சம்பளம் கொடுக்கப்படும் என்று இந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஒரு வாரத்திற்கு 20 மணி நேரம் வேலை செய்தால் 700 பவுண்ட் வரை சம்பாதிக்கலாம். அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி ஒரு வாரத்திற்கு 65,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
OnBuy நிறுவனர் கேஸ் பேடன் கூறும்போது,
“வாடிக்கையாளர்களுக்கு துல்லியமான தகவல்களுடன் சிறந்த அனுபவத்தை வழங்க விரும்புகிறோம். எனவே இந்த சாதனங்களைப் பயன்படுத்திய ஒரு தொழில்நுட்ப நிபுணரிடமிருந்து கருத்துகளை சேகரித்து வாடிக்கையாளர்களுக்கு முழுமையான தகவல்களாக வழங்க விரும்புகிறோம்,” என்று குறிப்பிட்டார்.
இதற்கு முன்பும்கூட பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று இதேபோன்று தூங்குவதற்கு சம்பளம் கொடுக்கும் பணி வாய்ப்பை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 100 நாட்கள் 9 மணி நேரம் தூங்கினால் 1 லட்ச ரூபாய் சம்பளம் என்று அந்நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இளைஞர்கள் வேலை கிடைக்கவில்லை என்று ஒருபுறம் தவிக்கும் நிலையில் கற்பனைக்கும் எட்டாத வகையில் இதுபோன்று புதுமையான வேலை வாய்ப்புகள் உருவாகி வருவது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.