சூரத் கட்டிட தீ விபத்தில் சிக்கிய மாணவர்களைக் காப்பாற்றிய இளைஞர்!
சூரத்தில் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 மாணவர்கள் பலியானார்கள். 23 வயது கேத்தன் நரண்பாய் சோட்வாடியா தனது உயிரைப் பணயம் வைத்து 10 மாணவர்களைக் காப்பாற்றியுள்ளார். இவர் உதவ முன்வராமல் போயிருந்தால் பலி எண்ணிக்கை உயர்ந்திருக்கக்கூடும்.
சூரத் பகுதியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் மே 24-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயிற்சி மையம் அமைந்துள்ள கட்டிடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்தது. இந்த தீ விபத்தில் 22 மாணவர்கள் உயிரிழந்தனர். முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாத காரணத்தால் பல மாணவர்கள் தீயில் இருந்து தப்பிக்க ஜன்னலில் இருந்து வெளியே குதித்தனர்.
இந்த தீ விபத்து குறித்து சமூக ஊடகங்களில் பல வீடியோக்கள் வலம் வந்தன. அவற்றுள் ஒரு நபர் அந்த கட்டிடத்தின் ஜன்னலில் தொங்கியவாறே அங்கு சிக்கியிருந்த மாணவர்களுக்கு உதவும் வீடியோ ஒன்றும் பகிரப்பட்டது.
அந்த நபர் 23 வயதான கேத்தன் நரண்பாய் சோட்வாடியா. பி.காம் பட்டதாரியான இவர் தனது உயிரையே பணயம் வைத்து தக்சஷீலா வளாகத்தின் மூன்றாவது மாடியிலும் நான்காவது மாடியிலும் இருந்த மாணவர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளார் என ’இண்டியா டுடே’ தெரிவிக்கிறது. தி லாஜிக்கல் இண்டியன் உடனான உரையாடலில் கேத்தன் கூறும்போது,
“பல மாணவர்கள் கட்டிடத்தின் ஜன்னல் வழியாக வெளியே குதித்துக்கொண்டிருந்ததைப் பார்த்தபோது என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. நான் அதிர்ச்சியடைந்தபோதும் உடனடியாக ஏதேனும் செய்யவேண்டும் என்பதை உணர்ந்தேன்,” என்றார்.
கேத்தன் சம்பவ இடத்தில் தனது அப்பாவுடன் இருந்துள்ளார். உதவ தீர்மானித்த இவர் கட்டிடத்தின் பின்புறம் சென்று குழந்தைகளை வெளியே இழுத்துள்ளார் என ’தி இண்டியன் எக்ஸ்பிரஸ்’ தெரிவிக்கிறது. அடுத்ததாக ஒரு ஏணியைப் பயன்படுத்தி மூன்றாம் மாடியை அடைந்துள்ளார்.
”அங்கு சூழ்ந்திருந்த புகை காரணமாக என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால் நான் பயப்படவில்லை. அங்கிருந்த குழந்தைகள் தீயில் கருகி இறந்துவிடுவார்கள் என்கிற எண்ணமே என்னை அதிர்ச்சியடையச் செய்தது. ஆரம்பத்தில் இரண்டு சிறுமிகள் கீழே விழாமல் காப்பாற்றினேன். அதன் பிறகு மற்றவர்களுக்கு உதவும் முயற்சியில் ஈடுபட்டேன்,” என்று கேத்தன் குறிப்பிட்டுள்ளார்.
மேல் மாடியில் இருந்து மாணவர்களை மீட்கும்போது அவரால் 10 மாணவர்களை மட்டுமே காப்பாற்ற முடிந்தது.
”பலர் உயிரிழந்த நிலையில் என்னால் எட்டு முதல் பத்து குழந்தைகளை மட்டுமே காப்பாற்ற முடிந்தது மிகுந்த ஏமாற்றத்தையளித்தது. அலட்சியமான போக்கினால் தீ விபத்து ஏற்பட்டதை நினைத்து திகைத்து போனேன். ஆனால் சம்பவ இடத்தில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் இந்த அதிர்ச்சியான சம்பவத்தை புகைப்படமாகவும் வீடியோக்களாகவும் பதிவு செய்துகொண்டிருந்தது வேதனையாக இருந்தது,” என்றார்.
இவர் இத்துடன் நின்றுவிடவில்லை. பாதிக்கப்பட்டோருக்கு ஏதேனும் உதவ முடியுமா என்பதைத் தெரிந்துகொள்ள மருத்துவமனைக்கும் சென்றுள்ளார்.
”உதவி தேவைப்படுவோருக்கு ஒரு சக மனிதனாக துணை நிற்பது என் கடமை. இந்தக் குழந்தைகள் இறந்துகொண்டிருப்பதை கண் எதிரே பார்த்துக்கொண்டே எப்படி மக்களால் வீடியோ எடுக்கமுடிகிறது? மற்றவர்களும் உதவ முன்வந்திருந்தால் பலரை காப்பாற்றியிருக்க முடியும்,” என்றார் கேத்தன்.
2006-ம் ஆண்டு சூரத்தில் வெள்ளம் பாதித்தபோது கேத்தனின் வயது 12. அப்போதே அவர் தொழில்முனைவில் ஈடுபட்டிருந்த தனது அப்பாவுடன் இணைந்து உணவுப் பொட்டலங்களை விநியோகித்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
கட்டுரை: THINK CHANGE INDIA